*மாதிஹுர்ரசூல் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு*

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் ஒரு கல்லூரி உள்ளது. அதனை சுருக்கமாகவோ செல்லமாகவோ அப்பா காலேஜ் என்று தான் அழைப்பர். அந்த அப்பா வேறு யாருமல்ல நம் ஸதகத்துல்லாஹ் அப்பாவேதான்.

வலிமார்களை அன்பொழுக அப்பா என்றழைக்கும் நடைமுறை நம்மிலே இருந்தாலும் கூட அப்பா என்று கூறப்பட்டால் அது ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களையே குறிக்கும் என்பது நாம் குறித்து வைக்க வேண்டிய செய்தி.

 காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் காமில் வலி அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர் களுக்குப் பிறந்த ஐந்து ஆண் மக்களுமே அவ்லியாக்கள் என அறியப்பட்டவர்கள். அவர்களில் மூன்றாம் மகனாக தோன்றியவர்களே இமாம் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

 அவர்கள் பெயராலேயே ஒரு கல்லூரி இயங்கி வருவது நம் இதயங்களை இன்புறச் செய்யும் இனியசெய்தி.

காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே சீர் மறைக்குர்ஆன் முழுவதையும் சிந்தையில் நிறுத்தி சிறப்புற்றார்கள்.
 அதிராம்பட்டணத்தைச் சார்ந்த சின்னீனா லெப்பை ஆலிம் எனும் சீலரிடம் மேல் கவியைக் கற்றார்கள்.
 மேலப்பாளையைத்தைச் சார்ந்த மர்யம் எனும் மங்கை நல்லாளை மணந்தார்கள். ஆறு மகவுகளை அழகுறப் பெற்றார்கள் என்ற அடிப்படை செய்திகளைக் கடந்து அவர்களின் அறப்பணிகளையும் அற்புதங்களையும் சொல்ல விழைகிறேன்.

*பேரு பெற்ற பெயர்*

 அரபு மொழியில் அபார ஆற்றல் பெற்றிருந்த அப்பா அவர்கள், அரபுமொழி அறிஞர்களிடையே கூட பெரும் பெயர் பெற்றிருந்தார்கள்.   

ஒருமுறை அப்பா அவர்கள் உம்ராவிற்காக புனித மக்கா சென்றிருந்தபோது அங்கே புனிதப்பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது, ஷைகுல் இஸ்லாம் என்று அழைக்கப்பட்ட அறிஞர் பெருந்தகை ஒருவர், நூல் ஒன்றை விரித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டிருக்கவே, அதை சீர் செய்ய முடியாமல் அந்தப் பெரியார் பெரும் சிரமப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

 தொழுகைக்கான பாங்கு ஒலிக்கப்பட்டு அனைவரும் எழுந்து சென்ற போது அப்பா அவர்கள் அந்த நூலின் பிழையை சரி செய்து வைத்து விட்டார்கள். தொழுகை முடிந்து திரும்ப வந்து நூலை திறந்து பார்த்த ஷைகுல் இஸ்லாம் அவர்களின் விழிகள் விரிந்தன. வியப்பு மேலிட இதை சரி செய்தவர் யார்? யார்? எனக் கேட் டார்கள். அங்கே ஒரு மூலையில் அமர்ந்திருந்த அப்பா அவர்கள் தான் அதை திருத்தியது என்று தெரிந்த போது ஆச்சரியமுற்றவர்களாக உங்கள் பெயர் என்ன என்று கேட்டார்கள்.

 நாகூர் நாயகம் அவர்களாலே நன் மாராயம் சொல்லப்பட்டு தன் பாட்டனாரின் பெயரையே சூட்டப்பட்ட 'ஸதகா' எனும் பெயரைச் சொன்னார்கள். அருட்கொடை என்ற அர்த்தத்தில் அமைந்த பெயருக்குரியவர் இந்நேரம் அல்லாஹ்வின் அருட்கொடையாகவே வந்தவர் என்பதையெண்ணி மகிழ்ந்த ஷைகுல் இஸ்லாம் அவர்கள் இன்று முதல் நீர் வெறும் ஸதகா அல்ல 'ஸதகத்துல்லாஹ்' என பெரு மகிழ்வோடு பெயரிட்டு அழைத்தார்கள். புனித மண்ணில் பெற்ற பெயரே அப்பா அவர்களோடு நிலைத்து விட்டது.

*மாதிஹுர் ரஸுல்*

பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வதில் பேரார்வம் கொண்டு காவியங்கள் பல தாமும் கோர்வை செய்து பல காவியங்கள் கோர்வை செய்யப்படவும் காரணமான அப்பா அவர்கள் மாதிஹுர் ரஸுல் மாநபி களைப் புகழ்பவர் என சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.  

 அரபு நாடுகளில் ஓதப்பட்டு வந்த சுபுஹான மவ்லித் ஷரீபை நம் நாட்டுக்கு கொண்டு வந்தவர்களும் அப்பா அவர்களே ஆகும்.

 செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பியல்புகளைக் கூறும் சிந்தை நிறை சீராப்புராணத்தைக் கோர்வை செய்வதற்கு உமர்புலவர் அவர்களுக்கு உரை கொடுத்து 'தர்ஜுமத்துல் பஹ்ஜா' என்ற தம் நூலையும் கொடுத்தார்கள்.அப்பா அவர்கள்.

 அரபு மொழிக்கு மட்டு மின்றி தமிழ் இலக்கியத்திற்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இதனாலேயே உமருப்புலவர் அவர்கள் தம் சீராவில் காப்புப் பருவத்தில்

 "நம்மையாளுடையோன் வேதம் நபி திருவசனம் தீனோர்

சம்மதித்திடப்பாரெல்லாம் தளைக்கவே விளக்கம் செய்தோர்

இம்மையும் மறுமையும்பே றிலங்கிய ஸதக்கத்துல்லா

செம்மலரடி இரண்டும் சிந்தையில் இருந்தினேனே"
என்று சிறப்பித்துப் பாடுகிறார்கள்.

*இலக்கியப்பணி*

 அப்பா அவர்களின் அரபு மொழி அறிவே அவர்களுக்கு பெயரைப் பெற்றத் தந்தது. அப்பா அவர்களின் அரபு மொழி நிபுணத்துவத்திற்கு ஏராள சான்றுகள் உள்ளன.

அப்பா அவர்களால் அரபு மொழியில் இயற்றப்பட்ட கவிதைகளும், காவியங்களும் ஏராளம்.

 குவலயத்தின் குருநாதர் குத்புர் ரப்பானி முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது 'யாகுத்பா' எனும் காவியத்தை யாத்து அதை அவர்களின் திருசன்னிதானத்தில் படித்தபோது அவர்களின் திரு ரவ்ழாவின் வாசல் தானே திறந்த நிகழ்வும் உளம் பூரிக்கும் உண்மைச் செய்தியாகும்.

 நாகூர் நாயகம் ஷாகுல் ஹமீது பாதுஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது அருள் ஒழுக பாடிய கஸீதாவும் கல்பில் நிறைந்த கவிகள்.

*வித்ரிய்யா ஷரீப்*

 அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்புகழைக் கூறும் அரபுக் காவியம் வித்ரிய்யா ஷரீப். முஹம்மதிப்னு அபூபக்ருல் பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ஈரடிப்பாக்களாக அமைந்த அக்காவியத்தை ஐந்தடிப்பாவாக அதிகப்படுத்தி அதனை மெருகேற்றி மேதினிக்குத் தந்த மேதை அப்பா அவர்கள்.

அரபு மொழியின் இருபத்தொன்பது எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்திலும் இருபத்தி ஒரு அடிகள் இருந்தன. அவற்றை இருபத்தி ஒன்பது அடிகளாக முழுமைபடுத்தினார்கள்.'மீம்' என்ற எழுத்து நம் முத்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயரின் முதல் எழுத்தாக இருப்பதால் அதில் மட்டும் முப்பது அடிகளாக அமைத்து முழுமைபடுத்தினார்கள்.  

அரபு மொழியின் எழுத்துக்களின் வரிசை படி முடிவடையும் அக்காவியம் அக்காலத்தில் அதை விட பெருங்காவியம் இல்லாததாக இருந்தது.

 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமாண்பைப் போற்றும் இக்காவியம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலே ஏற்றுக் கொள்ளப்பட்ட பெருமைமிகு காவியமும்கூட.

 'புர்தா' ஷரீபைப்போல ஈரடிப்பாவாக அமைந்திருந்த அக்காவியத்தின் ஒவ்வொரு அடியிலும் முன்னே மூன்று வரிகளை சேர்த்து ஐந்தடிப் பாவாக மாற்றியமைத்தார்கள்.

 அறிஞர்கள் பலரும் வியக்கும் வகையில் விசித்திர ஞானம் பெற்றிருந்த அப்பா அவர்கள் தம் புலமையை பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வதிலே செம்மையாக செலவிட்டு சிறப்புற்றார்கள். அது தான் இத்தரையின் முத்திரைக் காவியம் 'வித்ரிய்யா ஷரீப்' என்னும் பெரும் காவிய மாகும். அரபுமொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களாலே கூட அவ்வளவு எளிதில் விளங்கிட முடியாத வகையில் கருத்துச் செறிவும் இலக்கிய நயமும் கொண்டது அந்த காவியம்.

கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கற்பூர அம்சங்களை நபியவர்களை நேரிலே கண்டு தான் எழுதியிருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

 பின்னரொரு காலத்தில் அந்த காவியம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரத்தில் இருக்க கனவொன்றைக் கண்டதாக கூறும் அப்பா அவர்களின் வாய் மொழி நம் யூகத்தை மெய்ப்பிக்கிறது.

 எழிலுறும் இக்காவியம் இந்தியாவிலும், இலங்கையிலும் பல ஊர்களிலும் பாரம்பரியமாக ஓதப்பட்டு வருகிறது. காயல்பட்டணம், கீழக்கரை போன்ற சில ஊர்களில் ஆண்டுதோறும் ரமழான் மாதம் ஓதப்பட்டு வருகிறது. கீழக் கரையில் அப்பா அவர்களின் உரூஸையொட்டி ஸஃபர் மாதத்தில் ஓதப்பட்டு வருகிறது. புத்தாநத்ததில் வாரம் தோறும் ஓதப்பட்டு நிறைவில் பெரும்விழா ஒன்று நடத்தப்பட்டு ஊரே திரண்டு உற்சாகம் பொங்க உணவு விருந்துகள் பரிமாறப்பட்டு வருகிறது.
 காயல்பட்டணத்தைச் சார்ந்த மஹான் அல்லாமா நூஹு இப்னு அப்துல் காதிர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வித்ரிய்யா ஷரீப் காவியத்திற்கு அரபு தமிழில் விளக்கவுரை எழுதியுள்ளார்கள். அந்த நூலுக்கு 'நஃபஹாத்துல்' இத்ரிய்யா என்று பெயர்.

 அப்பா அவர்களின் வழித்தோன்றல் அல்லாமா அஷ்ஷெய்கு ஜலீல் முஹ்யித்தீன் காதிரி ஸதகலி (தவ்வலல்லாஹு உமுரஹு) அவர்களால் நிறுவப்பட்ட காயல் பட்டணம் குத்பிய்யா மன்ஜில் திருச்சபையில் ஆண்டுதோறும் புனித ரமழான் மாதம் பகல் பொழுதில் ஓதப்பட்டு அதன் விளக்க உரையும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

 காயல்பட்டணம் பெரிய குத்பா பள்ளியின் கதீப் அல்ஹாஜ் அல்ஹாபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி காதிரி அவர்கள் 'வித்ரிய்யா ஷரீப்' விளக்க உரையினை அழகுற நிகழ்த்தி வருகிறார்கள்.

மேலும் வித்ரிய்யா ஷரீப் ஓதி நிறைவில் ஓதுவதற்கான துஆவையும் கோர்வை செய்துள்ளார்கள்.

ஆலிம் கவிஞர் அல்ஹாஜ் தேங்கை மு. ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்கள் வித்ரிய்யா ஷரீஃபை முழுமையாக மொழி பெயர்த்துள்ளார்கள்.  

பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி அவர்கள், வித்ரியா ஷரீஃபை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிப் பெயர்த்துள்ளார்கள். 
இன்ஷா அல்லாஹ் அது விரைவில் அச்சில் வெளிவரவிருக்கிறது. 

காயல்பட்டணத்தைச் சார்ந்த மர்ஹும் அல்லாமா ஹஸன் ஆலிம் சாஹிபு அவர்களும் வித்ரிய்யா விளக்க விருந்து என தமிழில் எழுதியுள்ளார்கள்.
 சம்பைப்பட்டணத்தைச் சார்ந்த மௌலானா அவர்கள் வித்ரிய்யாவின் சிறப்பையும், அப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளையும், சேகரித்து ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

பன்னூலாசிரியர் அறிஞர் அப்துர் ரஹீம் அவர்களும் தங்களின் வலிமார்கள் வரலாறு என்னும் நூலின் ஐந்தாம் பாகத்தில் அப்பா அவர்களின் மேதமையை தெளிவு படுத்தியுள்ளார்கள்.

சென்னைப் புதுக்கல்லூரியின் அரபித்துறை பேராசிரியர் என் ஆசிரியர் முனைவர் ஜனாப் க.மு.அ. ஜுபைர் அஹ்மது அவர்கள் அப்பா அவர்களின் அரபு மொழியின் அபார ஆற்றலை ஆய்வு செய்து அப்பா அவர்களைப் பற்றிய அரும்பல தகவல்களை திறம்பட திரட்டி சென்னை பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து (ஆய்வியல் நிறைஞர்- முனைவர், M.PHIL, PHD, பட்டம் பெற்றுள்ளார். அதன் சுருக்கத்தை தமிழிலும் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்கள்.

 இன்னும் அப்பா அவர்களைப் புகழ்ந்து அரபியிலும் பல அற்புத கவிகள் உண்டு. அந்த கவிதைகள் காயல்பட்டணம் தைக்கா ஸாஹிப் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட " நூருல் ஐய்னைன்" என்ற கிதாபில் உள்ளது. 

*அப்பாவும் பீரப்பாவும்*

அப்பா அவர்களிடம் சிலர் வந்து தக்கலை பீரப்பா அவர்கள் ஷரீஅத்தை சரிவர பேணுவதில்லை ஜமாஅத் தொழுகையில் பங்கு பெறுவதில்லை எனவே அவர்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லுமாறு முறையிட்டனர். அப்பா அவர்கள் தக்கலை சென்று தவ மாமேதை பீர்முஹம்மத் ஒலி நாயகம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேன்மைகளை விளங்கினார்கள்.

 நீங்கள் பள்ளி வாசலுக்கு சென்று தொழுவதில்லை என்றுசிலர் பேசிக் கொள்கிறார்களே என அப்பா அவர்கள் கேட்டபோது பீரப்பா அவர்கள் தாம் சுற்றிக் கொண்டிருந்த ராட்டையை உயர்த்திக் காட்டினார்கள்,

 ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் அதிலே கஅபதுல்லாஹ்வைக் கண்டார்கள். பின்பு மக்களிடம் பீரப்பாவின் மேன்மையைக் கூறி மென்மையாக அவர்களிடம் நடக்குமாறு எடுத்துச் சொல்லி விட்டு வந்தார்கள்.

*அப்பாவும் அவ்ரங்கஷீப் மன்னரும்*

 இந்தியாவை ஆண்டு வந்த மொகலாய மாமன்னர் அவ்ரங்கஷீப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அப்பாவுடன் நட்புடனும் நல்ல தொடர்புடனும் இருந்தார்கள். அப்பா அவர்களின் மகத் துவத்தையும் மகோன்னதத்தையும் உணர்ந்திருந்த அவரங்கஷீப் அவர்கள் அப்பா அவர்களை டில்லிக்கு வந்துவிடுமாறு பலமுறை வலியுறுத்தி அழைத்த போதும் அப்பா அவர்கள் முற்றாக மறுத்தே விட்டார்கள்.

 ஒருமுறை அப்பா அவர்கள் டில்லிக்கு சென்றிருந்த போது கூட அப்பா அவர்களை அவ்ரங்கஷீப் அவர்கள் அரசவைக்கு அழைத்தார்கள். அப்பா அவர்கள் அரசவைகளுக்கு நாம் செல்வதில்லை என்று உறுதிபட கூறி விட்டார்கள்.

 வங்காளத்தில் ஆட்சி செய்வதற்கு தங்களின் சீடர்களில் இருந்தாவது யாரையும் அனுப்பி வைக்குமாறு அவரங்கஷீப் மன்னர் அப்பா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தபோது தம் சீடர் சீதக்காதி மரைக்காயரை பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்கள்.

*தமிழக காஜி*

தமிழகத்தின் காஜி பதவியை ஏற்குமாறு அவ்ரங்கஷீப் மன்னர் வேண்டி விரும்பி கடிதம் எழுதினார். அப்பா அவர்கள் அதையும் அன்புடன் மறுத்து விட்டார்கள். தம் மகனையாவது அப்பதவியை ஏற்கச் செய்யுமாறு வேண்டிய போது அதை வேறு வழியின்றி நிபந்தனைகளின் பேரில் ஏற்றார்கள்.

நிபந்தனைகள் ;

1. நீதித்துறையில் அரசு தலையிடக்கூடாது

2. அரசின் கௌரவ பதவியாக இருக்க வேண்டுமேயல்லாது ஊதியம் வழங்கப்படக் கூடாது

இவ்விரு நிபந்தனைகளைக்கும் தலைசாய்த்தார் பாதுஷா.

*அப்பா அவர்களின் மகன்*

அப்பா அவர்களின் ஆறு மக்களில் ஒருவரே ஆண்மகன். அவர்களின் பெயர் முஹம்மது லெப்பை என்பதாகும். இவர்கள் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் அடக்கம் பெற்றுள்ளார்கள்.

 இவர்களுக்கு மூன்று ஆண்மக்கள் அவர்களின் இரண்டாமவரான நடுவுள லெப்பை என்று அழைக்கப்பட்ட அமீருல் உலமா சுலைமான் லெப்பை அவர்களுக்கும் வாலாஜா நவாப் முஹம்மது அலி அவர்களுக்கும் நெருக்கம் இருந்து வந்தது. இவர்களின் மூலம் அறிவு ஞானம் பெற்ற நவாப் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று வினவினார். தான் முத்து வியாபாரம் செய்வதாகவும், தனக்கு எதுவும் தேவை இல்லை எனவும் கூறினார்கள். எனினும் மக்கள் தொழுவதற்காக சென்னை முத்தி யால் பேட்டை வட்டாரத்தில் விசாலமான ஒரு மஸ்ஜித் கட்டிக் கொடுக்குமாறு கூறினார்கள். அப்படியே நவாப் செய்தார்.

*மஸ்ஜித் மஃமூர்*

 சென்னை அங்கப்பன் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜித் மஃமூர், ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களின் பேரர் நடுவுளலெப்பை எனும் அமீருல் உலமா சுலைமான் லெப்பை ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வேண்டுகோளின்படி நவாப் மன்னரால் கட்டப்பட்டது.

*அப்பா அவர்களின் மாணவர்கள்*

ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் ஞானம் பயின்றவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர். அவர்களில் அப்பா அவர்களின் சகோதரர் ஸலாஹுத்தின் வலியுல்லாஹ் அவர்களும், மஹ்மூத் தீபி வலியுல்லாஹ் அவர்களும் பிரசித்தி பெற்றவர்கள். கண்ணாடி வாப்பா என அழைக்கப்பட்ட மஹ்மூத்தீபி ரஹ்ம துல்லாஹி அலைஹி அவர்களும் காயல்பட்டணத்தைச் சார்ந்தவர்களே , கடலூர் மாவட்டம் மஹ்மூத் பந்தர் என அழைக்கப்படும் பரங்கிப் பேட்டையில் அவர்களின் புனித உடலைத் தாங்கிய மண்ணரை அமைந்துள்ளது.

 தம் ஆசான் போலவே இவர்களும் அரபு மொழியில் அதீத ஞானமுடையவர்கள் கௌதுல் அஃழம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும், நாகூர் நாயகம் அவர்கள் மீதும் இன்னும் பல மஹான்கள் மீதும் மவ்லிது காவியங்களை இயற்றியுள்ளார்கள்.

 அப்பா அவர்கள் உமருப் புலவருக்கு சீறாவுக்கு உரை கொடுத்த பின் மேலும் பல தகவல்களை தம் மாணவராகிய மஹ்மூத்தீபி அவர்களிடமே கேட்டுப் பெற அனுப்பி வைத்தார்கள்.

*அப்பா உடன் பிறந்தோர்*

அப்பா உடன் பிறந்தோர் அனைவருமே இறைநேசர்கள்

மஹான் செய்யிது அஹ்மது ஒலியுல்லாஹ் நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி

- மக்பரா: மஞ்சக் கொல்லை

மஹான் ஷாம்ஸிஹாபுத்தீன் ஒலியுல்லாஹ் நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி

- மக்பரா: காயல்பட்டணம்; அப்பா பள்ளி

மஹான் ஸலாஹுத்தீன் ஒலியுல்லாஹ் நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி

- மக்பரா: களக்காடு - ஏர்வாடி

மஹான் சின்ன ஷம்சுத்தீன் ஒலியுல்லாஹ் நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி

- மக்பரா: காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுசெய்னார் பள்ளி

இவர்கள் யாவரும் மார்க்க ஞானமிக்கோராகத் திகழ்ந்து, இரத்தினமாக மிளிர்ந்து மலர்ந்தனர்.

*அற்புதங்கள்*

அப்பா அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் அனேகம்.

 காயல்பட்டணத்தில் இரட்டைக் குளத்துப் பள்ளியில் அமர்ந்து மக்களுக்கு அறபோதம் வழங்கிக் கொண்டிருந்த போது மேகக் கூட்டத்தை ஒட்டிக்கொண்டு சென்ற மழையின் அதிபர் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கீழே இறங்கி வந்து அப்பாவிடம் பேசி விட்டு சென்றார்கள். அப்போது அப்பா அவர்கள் தம் ஊரிலும் மழை இல்லாத வறட்சி நிலையைக் கூறி மழை பொழிவிக்க கூறியபோது மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அப்படியே செய்தார்கள். அதையே அப்பாவைப் பற்றிய பனுவலில்

ளாஹில் முஹய்யாரஆ மீக்கால மஸ்ஜிதஹு

வ ஹவ்லஹு ஃபுகஹாவுன் சதக்கத்துல்லாஹி

தாபா கித்தாபன் வஇன்தல் இஃப்திராகி பகா

ஃகய்ஸ்தன் வகத் நால மின்ஹு சதக்கத்துல்லாஹி

என்று பாடுகிறார்கள்.

 அதனாலேயே காயல்பட்டணம் இரட்டைக் குளத்துப்பள்ளி மஸ்ஜித் மீக்காயில் என அழைக்கப்படுகிறது.
அறிவாலும், ஆன்மீகத்தாலும் புகழ்பெற்றுச் சிறப்புற்றிருந்த புனிதர் அப்பா அவர்கள் ஹிஜ்ரி 1115ம் ஆண்டு ஸபர் பிறை 5 வியாழன் இரவு இவ்வுலகை நீத்தார்கள். அன்னவர்களின் புனித உடல் கீர்த்தி மிகும் கீழக்கரையில் ஜாமிஆ மஸ்ஜிதில் அடக்கம் பெற்றுள்ளது. அல்லாஹ் அன்னவர்களின் திருப்பொருட்டால் நம் ஈமானை பலப்படுத்தி இம்மை, மறுமை நற்பேறுகளை நல்குவானாக ஆமின்!

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!