வட்டி இஸ்லாத்தின் பார்வையில்


வட்டியை பற்றிய அல் குர்ஆன் வசனங்கள்...
2:275   اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 
2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:276   يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏ 
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:278   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 
2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
2:279   فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏ 
2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
3:130   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ 
3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
4:161   وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏ 
4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
30:39   وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۟ فِىْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ‌ۚ وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ‏ 
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்
வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
வட்டி பெரும் பாவங்களில் ஒன்று
வட்டியை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் வைக்கிறது.வட்டி பெரும் பாவம் என்று அறிந்தே மக்கள் சர்வ சாதாரணமாக சிறிதும் பயமில்லாமல் வெளிப்படையாக வட்டி வாங்குவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.
பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள்,கூரினார்கள்..
'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,
சூனியம் செய்வது,
முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது,
வட்டியைப் புசிப்பது,
அநாதைகளின் செல்வத்தை உண்பது,
போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது,
இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857
வட்டியில் அல்லஹ்வின் அருள் இல்லை
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.நம்முடைய தேவைகள் அனைத்தும் சிறிய உழைப்பிலோ அல்லது சிறிய அளவிலான செல்வதிலோ பூர்த்தி ஆகிவிட்டால் அதை அருள் என்று கூறலாம்.கோடி கோடியாக செல்வம் இருந்தும் அந்த செல்வத்திற்கு மேல் அவனுடைய தேவை இருந்தால் அந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இல்லை என்றே அர்த்தம்.
இப்படிப் பட்ட அருளை அல்லாஹ்வால் மட்டுமே கொடுக்க முடியும்.அல்லாஹ்விடம் அதிக செல்வதை கேட்பதை விட அல்லாஹ்வின் அருளை கேட்பதே சிறந்தது.
அல்லாஹ்வே தேவையை உண்டாகுகிறான் ஆகையால் அவனிடமே அதை கேட்க வேண்டும்.அல்லாஹ் அந்த தேவையை வேறு வழியில் நிறைவேற்றுவான் அல்லது அவனது வல்லமையினால் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த தேவையே இல்லாமல் ஆகிவிட போதுமானவன்.
வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குர்ஆனின் மூலம் நமக்கு எச்சரிக்கின்றார்கள்.
2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)
30:39 وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَاآتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் 30:39)
"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விளக முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தனி மனிதனிடம் மட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன.
பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக்கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி.. என இவ்வாறே பின்னோக்கி செல்கின்றன. 
உலகளவில் இயங்கி வரும் இன்றைய எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.
இத்தொழிலில் ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என வாதிடுகிறார்கள். அவரச்தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலஹீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கிறார்கள். 
நமது இந்திய நாடே ஒட்டு மொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி கடனை வாங்கிக் குவித்திருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் பல டன் தங்கத்தையே அடகு வைத்து கடன் வாங்கிய கூத்தும் இந்தியாவில் நடந்ததை அறிவோம். வாங்கியவர்களின் தொப்பையை நிரப்பிக் கொள்ளப் பயன்பட்டதோ என்னவோ, பொதுமக்களுக்கு எந்தப் பயனும் அதனால் ஏற்படவில்லை. 
இந்தியா வாங்கிக் குவித்துள்ள கடன் காரணத்தால், என்றாவது ஒரு நாள், உலக வங்கியானது தான் வழங்கிய கடனுக்காக இந்தியாவை கிரயமாக எழுதி வாங்கிவிட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தளவிற்கு அபரிமிதமாக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி உள்ளது. எழுதிக் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டாதவர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வேதனையான விஷயம்.
இந்தியனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தான் வாங்காத கடனில் ஒரு சுமையைச் சுமந்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு வாங்கும் ஒவ்வொரு முறையும் நாடாளும் மன்னர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளியவர்களின் துயர் துடைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை - புரட்சியை ஏற்படுத்த நல்ல பல திட்டங்கள் வகுத்து செயல் படுத்துவதற்காகத்தான் இப்பணம் பயன்படுத்தப்படும் போன்ற போலியான காரணங்களையே கூறி வருகிறார்கள்.
அவர்கள் கூறுவது போன்று வட்டிக்கு வாங்கிய நாடுகள், வங்கிக் கடனில் சுய தொழில் செய்து வரும் தனி நபர்கள், அல்லது வட்டியை மூலதனமாக வைத்து தொழிற்சாலைகள் துவங்கிய முதலாளிகள் தங்களது எண்ணத்தில் - திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா?
அவர்களது தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா?
என்றால் நிச்சயமாக இல்லை என்றே ஆய்வறிக்கைகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. 
துவங்கிய பல தொழிற்சாலைகள் தொடங்கிய அதே வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டு விட்டன என்பதையும், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் ஒரு நேர சோத்துக்கு வழியின்றி தெருவில் இறங்கி போரடுவதையும் நாம் கண்டு வருகிறோம். 
காரணம் என்ன?
வட்டிக்கு கடன் வாங்கி தொழில் துவங்கிய சில நாட்களிலேயே வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி தொழிலதிபர்களுக்கு ஏற்படுகிறது. அதனை கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படும் போது, தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். இதுதான் நமது நாட்டில் அடிக்கடி நடந்து வரும் கேலிக் கூத்தான நிகழ்வு.
தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு.
"அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்"
இதுதான் நமது இந்திய நாட்டின் நிலை! இந்தியக் குடி மக்களின் பெரும்பாலாரின் அவல நிலையும் இதுதான். மேற்கூறிய வழக்குச் சொல்லுக்கு விரிவுரையாக விளங்கும் சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை எளிதில் புரிய வைப்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்.
"வீட்டு லோன்" கேள்விப்பட்டிருப்பீர்களே! இன்றெல்லாம் வீடு தேடி வந்து வீட்டு லோன் தருகிறார்கள். இதில் தனியார் நிறுவனங்கள் பரபரப்பான விளம்பரங்களை செய்து, வாடிக்கையாளர்களை தனது மாய வலைக்குள் சிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். பரிசுகள் பல உண்டு என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் தாங்கிய விளம்பரங்கள் நகரங்களின் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர்களை ஆக்கரமித்துள்ளன.
சொந்த வீடு பற்றிய கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பரம ஏழைகளில் பலர் பளிச்சிடும் இந்த போலியான விளம்பரங்களில் விட்டில் பூச்சியாய் விழுந்து தங்களை மாய்த்து வருகிறார்கள்.
சிரமப்பட்டு பல தேவையான ஆதாரங்களைத் திரட்டி, வீடு கட்டுவதற்காக ஆயுள் காப்பீட்டு (L.I.C.) நிறுவனத்தை அணுகி குறைந்த வட்டி விகித்தில் இடத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து கடனைப் பெற்று விடுகிறார்கள். இதில் இஸ்லாமியர்கள் - ஈமான் குன்றியவர்கள் அதிகம் ஈடுபட்டிருப்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன். 
வாங்கிய கடனைக் கொண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் வட்டித் தொகையை கட்ட வேண்டிய காலம் வந்து விடும். அதனை கட்ட முடியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருப்பவன், கட்டி முடிவடையாமல், அரை குறையாக இருக்கும் தனது வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்று வட்டியைக் கட்ட வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
(இது தேவைதானா?
இதை உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.) 
"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்" என்பது போல, வட்டிக்கு வாங்குபவன் இருக்கும் வரை வட்டிக்கு கொடுப்பவன் ஏழைகளின் இரத்தை உறுஞ்சிக் கொண்டுதான் இருப்பான். 
இந்த வட்டியில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை ரகங்கள்! அப்பப்பா!!
வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டி ரகங்கள்! 
இந்த அனைத்து ரக வட்டிகளும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வு செய்து கண்டு பிடிக்கப் பட்ட புதிய ரகங்களா?
அதுதான் இல்லை. பட்டு வேட்டி கட்டிவிடலாம் என்ற கனவில் வட்டிக்கு கடன் வாங்கியவன், இறுதியில் அவன் கட்டியிருக்கும் கோவணத்தையே இழக்கச் செய்யும் வட்டி ரகங்கள்தான் இவைகள். ஆம்! இந்த ரக வட்டிகள் மக்களை ஓட்டாண்டியாக்கி வைக்கும் புது ரக கொடூர வட்டிகள்.
மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய்கள்தான் இந்த வட்டி ரகங்கள். இதனை அடியோடு வேரறுக்க வில்லையெனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. எந்த சமூகத்தில் வட்டி தலைவிரித்தாடுகிறதோ, அவர்களின் மீது இறைவனின் சாபமும், தண்டனையும் இறங்குகிறது என்பதை பின்வரும் நபி மொழி எச்சரிக்கிறது:
عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا والربا إلا أحلوا بأنفسهم عذاب الله رواه أبو يعلى بإسناد جيد
"விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்"
|என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: அபூ யஃலா. 
ஒரு சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வில்லையானால், ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்லாஹ்வின் கோபமும், சாபமும் இறங்குவதோடு அவனது தண்டனையும் இறங்கும் என்பதை நாம் நடை முறையில் பார்த்து வருகிறோம். 
மழை இல்லை. பஞ்சம், வறட்சி, பசி, பட்டினி, குடிக்க தண்ணீர் இன்றி மனித இனமட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான கால் நடைகளும் சேர்ந்து செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. நிலத்தில் விளைச்சல் இல்லை. சில பகுதிகளில் மழை பொழிவதால் அழிவும், நாசமும் ஏற்படுகிறது. நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்ந்து பல உயிர்களைக் கொன்று குவிக்கின்றன. புதிய புதிய நோய்கள் பரவி, கணக்கற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எண்ணற்ற சோதனைகள் அடிக்கடி நிகழ்கின்றன.
எண்ணற்ற சோதனைகளும் வேதனைகளும் எதனால் ஏற்படுகிறது?
"வட்டி என்பது ஒரு குற்றமல்ல, அது வியாபார உத்தி" என யூதர்கள் கருதி வந்தது போல் இஸ்லாமியர்களும் அவ்வாறே கருதி வட்டிக்கு கொடுப்பதையம் வாங்குவதையும் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.
கள்ளுக் குடிப்பவன் வெளியே தலைகாட்ட வெட்கப்படுகிறான்.
விபச்சாரம் புரிந்தவன் நடமாட நாணம் அடைகிறான்.
ஆனால்...வட்டிக்குக் கொடுப்பவனோ பள்ளிவாசலின் தலைவனாக பவனிவருகிறான்.
அந்தளவிற்கு மக்களுக்கு மத்தியில் சமூக அந்தஸ்தைத் தேடித் தரக் கூடியதாக இத்தொழில் மாறிவிட்டிருக்கிறது என்பதை வேதனையோடு இங்கே குறிப்பிடுகிறேன்.
"வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது எவ்வளவு பெரிய கொடூரமான பெரும் குற்றம் என்பதை இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு சரியான முறையில் எடுத்துரைக்கப்படவில்லை" என்பதே இதற்கான காரணம் என நான் உணர்கிறேன்.
பெரும் பாவம்:
அன்பான சொந்தங்களே! மற்ற பல குற்றங்களை விட மிகக் மிகக் கொடூரமானது வட்டிதான் என்பதைக் கீழ் காணும் குர்ஆன் வசனங்ளும், நபி மொழிகளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன:
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ
"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!"
"அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்"
அல் குர்ஆன்: 2:278,279.
عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)
"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள்,
நூல்: அஹ்மது.
عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه
"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: இப்னு மாஜா.
வட்டியின் கொடூரத்தை விவரிக்கும் நபி மொழிகள் இன்னும் ஏராளம் உண்டு. படிப்பினை பெற நினைப்போருக்கு மேற் கூறியவைகளே போதுமானதாகும்.
1) 36 முறை விபச்சாரம் செய்வதை விடவும் கடுமையான குற்றமாக இந்த வட்டித் தொழில் செய்வது கருதப்படுகிறது. ஒரு முறை விபச்சாரம் செய்தால் அதற்கான தண்டனை என்ன என்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்! ஒருவன் 36 முறை விபச்சாரம் புரிந்தால் இறைவனிடம் என்ன தண்டனை கிடைக்குமோ அதனைவிட கொடூரமான தண்டனை வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு உண்டு என்பதை அடுத்த நபி மொழி நமக்கு கூறுகிறது.
2) விபச்சாரம், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப் பறி போன்ற தவறுகள் செய்த குற்றவாளிகளை எச்சரிப்பதை விட, வட்டிக்கு கொடுத்து வாங்கும் குற்றவாளிகளை, "வட்டித் தொழிலை நிறுத்திக் கொள்ள வில்லையெனில், என்னோடு போர் புரியத் தாயாரகிக் கொள்ளுங்கள்" என மிகக் கடுமையாகவே எச்சரிக்கை செய்துள்ளான்.
இறைவனோடு போர் புரிவதற்கு யாருக்குத்தான் முடிவும்?
3) வட்டியை உண்பவன் இவ்வுலகில் தண்டிக்கப் படுவதோடு மறுமையிலும் அவன் பேயரைந்தவன் போன்று பைத்திய நிலையில் எழுப்பப்படுவான். இன்று வட்டித் தொழில் செய்து வருவோரில் பலர் தங்களது இவ்வுலக வாழ்வில் பல் வேறு துன்பங்கள் அனுபவித்து வருவதை நாம் நேரில் பார்த்து வருகிறோம். இதனைக் பார்த்தப் பிறகாவது நாம் படிப்பினைப் பெறவில்லையெனில் பெரும் நஷ்டத்திற்குரியவர் நம்மை விட வேறு யாரும் இருக்க முடியாது என்பது உறுதி.
வட்டி என்றால் என்ன ?
வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.
நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.
இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு
பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.
வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில் நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.
2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُالشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَوَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَىاللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)
வட்டி மறுமையின் நிலை
மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
4:161 وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۚوَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085
வட்டி சாபத்திற்கு உரியது
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347
மற்ற மனிதர்களின் சபிப்பதர்க்கும் நபிமார்கள் சபிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு.நபிமார்கள் ஒரு விஷயத்தை மார்க்கம் என்று கூறினால் அது அல்லாஹ்வின் புறத்தே வருகிறது என்று தான் அர்த்தம்.அதே போல் ஒரு செயலை நபிமார்கள் சாபமிட்டால் அதை அல்லாஹ் சபிக்கிறான் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.வட்டி சாபத்திற்கு உரியது என்பதை மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் விளங்க முடிகிறது.
ஃபிரான்சும் வட்டி கலாச்சாரமும்
உலகில் உள்ள பல நாடுகள் வட்டியை மையமாக கொண்டே இயங்கி வருகின்றது.அதில் பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாம் கடையில் வாங்கும் சிறு பொருள் முதல் நாம் வாங்கும் வீடு போன்றவைகள் வரை இந்த நாட்டில் வட்டி எங்கும் நிறைந்திருக்கிறது.வட்டி வாங்குவது இஸ்லாத்தில் ஹராம் என்று வைத்திருந்தும் தங்களின் பணத்தை பெருக்கிக் கொள்வதர்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் பலர் வட்டி விழுந்து விடுகின்றனர்.வட்டி வாங்காமல் இந்த நாட்டில் வாழவே முடியாது ஆகையால் நிர்பந்தத்தின் அடிப்படையில் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று சில இஸ்லாமிய மார்க்கக அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள் பத்வாவும் கொடுத்திருக்கின்றனர்.நாம் ஒரு செயயலை செய்யா விட்டால் உயிர் வாழவே முடியாது போன்ற நிலை ஏற்பட்டால் அதை நிர்பந்தம் என்று கூறலாம்.இவர்கள் வட்டி வாங்குவதை நிர்பந்தம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.இவர்கள் எந்த காரணத்தை வைத்து வட்டி நிர்பந்தம் என்று கூறுகிறார்கள் என்பதையும் அதற்க்கு என்ன தீர்வு என்பதையும் பார்போம்.
பிரான்ஸ் நாட்டில் வட்டியை வாங்குவதயும் கொடுப்பதயும் முக்கியமான நான்கு காரணங்களாக பிரிக்கலாம்
பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி
விலை அதிகமான பொருட்களை அதிகமானோர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்கள் விற்கப் படுகிறது.இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் இன்ஸ்டால்மென்டில் வாங்கும்போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் இல்லை அதை இஸ்லாம் தடுக்க வில்லை.ஆனால் நீங்கள் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தல் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.இதற்க்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :
முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .
சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி
ஒருவருடைய வங்கிக கணக்கின் தொகையை பொருத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொருத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது,இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.வட்டியை மூலதனமாக கொண்டு இயங்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக இதை விரும்புகிறார்கள்.
செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக : வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இப்படி பெறப்படும் செல்வம் வட்டி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் அல்லாஹ்வுடைய கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் அஞ்சிக் கொள்ள வேண்டும்.நம்மை சுற்றி இருக்கின்ற பல மக்கள் இந்த பாவத்தை செய்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலை.
பாதுகாப்பு : வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது ? என்ற கேள்வி எழுகிறது.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது(ஏழைகளுக்கு) கொடுத்து விடலாம் என்றும் சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது.ஏனெனில் அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
வாகனம் வாங்குவதில் வட்டி
வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்தினால் வருமான வரி(Income Tax) போன்ற சிக்கல் இருப்பதால் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதை ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம்.இந்த பிரச்சனைக்கும் இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம் :
பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்கும்.அந்த வகையில் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும் என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மருமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.
வீடு வாங்குவதில் வட்டி
வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதிர்க்கும் பொருந்தும்.வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும்.நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர் சற்று ஃபிரவ்னுடைய மனைவி கூறியதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! (அல் குர் ஆன் 66:11)
நகை அடமானம்
சிலர் தங்களது அவசர தேவைக்காகவும் ,அனாவசிய அனாச்சரங்களுக்காகவும் தங்களது நகைகளை வங்கியிலோ வட்டிகடையிலோ அதன் மதிப்பைவிட குறைந்த தொகைக்காக அடமானம் வைக்கிறார்கள்.பின்பு அதற்கு வட்டியும் கட்டி பின்பு அதை மூழ்கவும் செய்து விடுகிறார்கள்.தன்னுடைய நகைக்கு தானே முட்டாள்தனமாக பணம் செலுத்துகிறார்களே..இவர்களை என்னவென்று சொல்வது ? தனது தேவைக்கு மட்டும் நகையை விற்று விட்டு பின்பு வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனை கூட இவர்களிடம் இல்லை.அல்லாஹ் உங்களை சோதித்து பார்பதற்காக ஒரு அவசர தேவையை உண்டாக்குகிறான் என்று தெரியாமல் அடமானம் என்ற பெயரில் நரகப்படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள்.
ஏலச்சீட்டு
ஏலசீட்டில் இரண்டு முறைகள் உள்ளது.முதலாவது மாதா மாதம் ஆளுக்கு ஒரு தொகை உதாரணமாக 100€ கட்டுவார்கள் பின்பு பணத்தேவை அல்லது குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு மொத்த தொகையில்(1000€ ல்) கழிப்பு போக அதாவது வட்டி போக மீதம் உள்ளதை (900€) கொடுப்பார்கள் , இதில் கழிப்பு தொகையை (100€)என்பதுதான் அதை நடத்துபவரின் லாபமாகும் ,அவர் வட்டி வாங்குகிறார் மற்றவர்கள் வட்டி கொடுக்கிறார்கள் இரண்டும் நரகத்திற்கு இழுத்துச்செல்லும் நேரடியான வட்டியாகும்.எனவே இதில் கலந்துக் கொள்ளக் கூடாது.
ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கழிப்பு ஏதும் இல்லாமல் எந்த ஆதாயம் இல்லாமலும் செய்கிறார்கள் இதில் எதுவும் தவறில்லை.
வட்டியினால் ஏற்படும் விளைவுகள்
நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடியவர்கள் கடன் கொடுக்கும்போது சிரித்த முகத்தோடும் நட்போடும் பழகுவார்கள்.அந்த பணத்தை திருப்பி கொடுக்க தாமதமானலோ அல்லது தொகையை குறைத்து கொடுத்தாலோ அவர்களுடைய சுய ரூபம் வெளிப்படுவதை காண்கிறோம்.இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது,அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கொச்சைப் படுத்துவது போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது.இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வட்டியினால் உலகிலும் கெடும் மறுமையிலும் கேடு என்பதை மக்கள் என்று உணரப் போகிறார்களோ?
நாட்டுக்கும் கேடு : ஒருவன் தொழில் தொடங்கும்போது தன் சொந்த செலவில் அந்த தொழிலை துவக்கினால் அவன் உற்பத்தி செய்யும் பொருளில் கணிசமான லாபத்தை வைத்து விற்கப்படும்.ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் உற்பத்தி செய்யும் பொருளில் லாபம் மட்டும் இல்லாமல் அவன் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்துதான் அந்த பொருளை விற்க வேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப் படுவான்.அந்த வியாபாரி செலுத்த வேண்டிய வட்டிப் பணத்தை அந்த பொருளை வாங்குபவர்கள் மீது திணிக்கப் படுகிறது.இப்படி வட்டிக்கு வங்கி தொழில் செய்வதால்தான் விலை வாசி அதிகரிக்கிறது.
இந்தியா போன்ற நாடுகள் உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி இப்போது நாட்டில் வரும் வருமானத்தில் கால்வாசிக்குமேல் உலக வங்கியில் பெற்ற கனுக்காக வட்டி தொகையை செலுத்தி வருகிறது.வட்டிக்கே இந்த நிலைமை என்றால் அசலை எப்போது கொடுப்பது?சமீபத்தில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் வட்டி தான் மூலக் காரணம்.பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன,இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த நிலையையும் நாம் பார்த்தோம்.இதெல்லாம் நடந்தும் கூட உலக நாடுகள் திருந்துவதாக தெரியவில்லை.
வட்டிக்கு என்ன தீர்வு?
வட்டி இல்லாத வங்கி தான் இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.முஸ்லிம்கள் அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கி அதிகரிக்கும்.வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுதலாம்.பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிளிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகள முடியும்.
நீங்கள் வட்டி வாங்குபவரா ?
மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன திருமறையிலே கூறுகிறான்.எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
2:278 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُممُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)
3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَلَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)
வட்டி குட்டி போடுவது உண்மைதானா? 
வட்டித் தொழில் புரிந்து வருபவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக சமுதாயத்தில் காட்சி தருகிறார். சிறிய முதலீட்டில் "சிட் ஃபண்ட்" நிறுவனத்தைத் துவக்கிய சில மாதங்களிலேயே பெரிய பெரிய பல நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறி விடுகிறார். இதனை காணும் அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைந்து, வட்டி பல குட்டிகள் போடுவதாக கற்பனை செய்து அவர்களும் வட்டித் தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு மாயத் தோற்றமே என்பதை ஆரம்பத்தில் புரிய தவறி விடுகிறார்கள். 
மெலிந்தவனுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தை சதை வளர்ந்து விட்டதாக தப்புக் கணக்குப் போட்டு சிகிச்சை பெறத் தவறினால், விரைவில் மரணம் ஏற்படுவது உறுதி. வட்டியினால் ஏற்படும் பணப் பெருக்கத்தை இலாபம் என கருதி, மென்மேலும் அத்தொழிலை விரிவுபடுத்த நினைப்பது, அவனது செல்வத்திற்கு அழிவை ஏற்படுத்துவது அதனை விட உறுதியானது. 
ஓகோ என வெற்றி நடை போட்டு வந்த எத்தனையோ "சிட் ஃபண்ட்" நிறுவன முதலாளிகள் இன்று மாமியார் வீட்டில் மணியடிச்சால் சோறு சாப்பிடும் கூட்டத்தில் சேர்ந்து கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ பிடி வாரண்டிற்கு பயந்து ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் என்ன நடந்தது?
வட்டி பல குட்டிகள் போட்டு பெருகிக் கொண்டுதானே இருந்தது?
இலட்சம் பல இலட்சங்களாக மாறிக் கொண்டுதானே இருந்தது?
திடீரென இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, "சிட் ஃபண்ட்" மூட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?
என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.
"வட்டியினால் பெருகும் செல்வம், அழிவிற்கே காரணமாக அமைகின்றது. நாம் அறியாத விதத்தில் அது அழிந்து கொண்டே வருகின்றது. அல்லாஹ் அதனை அருள்வளம் அற்றதாக ஆக்கி இறுதியில் அழித்தே விடுகிறான்" என்ற உண்மையை பலரும் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். நமது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் அல்லாஹ், வட்டியை அருள் வளமற்றதாக ஆக்கி அழித்து விடுவதாக பின் வரும் வசனத்தில் கூறுகிறான்.
"வட்டியினால் அதிகரிக்கும் செல்வம் உண்மையில் குறைந்து கொண்டே வருகிறது" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி உள்ளார்கள்.
عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قلة رواه ابن ماجه والحاكم .
"வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.
வட்டியினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்ட நாம் அதிலிருந்து முற்றிலுமாக விலக வேண்டும். வட்டியின் வாடை இன்றி ஒருவன் வாழவே முடியாது என்ற மாயத் தோற்றம் ஏற்பட்டு விட்ட மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காலம் குறித்துதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியிருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
عن أبي هريرة قال قال رسول الله صلىالله عليه وسلم قال يأتي على الناس زمان يأكلون الربا فمن لم يأكله أصابه من غباره (رواه النسائي)
"(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்"
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள்.
(நஸாயீ)
இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை  அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்
1.  குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)
வட்டி வாங்கும் கொடுக்கும் மனித சமுதாயமே!
சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அழகிய கடன் கொடுப்போம்! நம் தகுதியை விட கூடுதலாக ஏற்படும் தேவைகளை தவிர்ப்போம்!
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனும் முது மொழியை மனதிற் கொண்டு உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனப் பக்குவத்தை உண்டாக்குவோம்! அதுவே! இன்பத்தின் திறவு கோல் என உள்ளத்திற்கு கூறுவோம்! 
வட்டியை ஒழிப்போம். வட்டி இல்லாத ஓர் உலகு படைப்போம். அல்லாஹ் அதற்கு துணைச் செய்யப் போதுமானவன். வஸ்ஸலாம்..

Comments

Popular posts from this blog

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!