குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக.
முன்னுரை
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களே!
எல்லோரும் நபி(ஸல்) அவர்களிடம் நல்ல விஷயத்தைப் பற்றிக் கேட்பார்கள், தவறிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நான் கெட்ட விஷயத்தைப் பற்றி கேட்பேன் என்று ஹுதைபா அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணியக்கூடியவனாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல் என்பது அல்லாஹ்வும் அவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யவேண்டும். அவ்விருவரும் தடுத்தவைகளை முற்றாகத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் ஏதாவது ஒன்றை ஏவினால் அதில் முடியுமானவைகளை எடுத்து செயல்படுங்கள், நான் ஏதாவது ஒன்றை தடுத்தால் அதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாமும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக ஆக வேண்டுமானால் ஏவல்களை எடுத்தும் விலக்கல்களை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம்களில் பலர் கடமைகளை நிறைவேற்றுவதுடன் பல பெரும் பாவங்களை சாதாரணமாக செய்து கொண்டும் இருக்கின்றார்கள், இது அல்லாஹ்வுக்கு முழுக்க அடிபணியும் அடியானின் அடயாளமல்ல. கடமைகளை செய்வதுடன் பாவங்களையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும், அதிலும் பெரும் பாவங்களை அறவே செய்யக் கூடாது.
அழித்துவிடக்கூடிய ஏழு பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்,
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம், அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்வது, வட்டி சாப்பிடுவது, எத்திம்களின் பொருளை உண்பது, யுத்த களத்திலிருந்து புற முதுகுகாட்டி ஓடுவது, பத்தினிப் பெண்ணை அவதூறு கூறல் என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலே உள்ள ஹதீதில் கூறப்பட்டவைகள் மாத்திரம் பெரும்பாவங்கள் அல்ல, இன்னும் பல பெரும் பாவங்கள் இருக்கின்றன. எந்தப் பாவத்தைச் செய்தால் அல்லாஹ்வின் லஃனத் உண்டாகும் அல்லது நரகத்தில் வேதனை செய்யப்படும் அல்லது அது ஹராம் என்று சொல்லப்படுகின்றதோ அவைகள் எல்லாம் பெரும் பாவங்கள்தான். இவைகள் அனைத்திலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இக்குறிப்பில் பெரும் பாவங்களின் பட்டியல் ஆதாரத்துடன் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது, இதைப் படித்து உங்களின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட தவறுகளை தவிர்த்துக் கொள்வதுடன் மற்றவர்களைளும் இப்படிப்பட்ட தவறுகளிலிருந்து தவிர்ப்பதற்குரிய முயச்சி செய்யுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் இவ்வாய்ப்பினை தந்தருள்வானாக.
70 பெரும் பாவங்கள்
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்).
எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (அலா குர்ஆன் .5:72)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
ஷிர்க் இரண்டு வகைப்படும்
1. பெரிய ஷிர்க்
2. சின்ன ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால்:- அல்லாஹ்வின் படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு சமமாக்குதல்.
உதாரணமாக:- கல், மரம், சூரியன், நட்சத்திரம், மலக்குமார்கள், நபிமார்கள், வலிமார்கள் இன்னும் அவர்களின் கப்ருகள் போன்றவைகளை வழிபடுவதும், அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டியவைகளை இவைகளுக்குச் செய்வதுமாகும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4:48)
நிச்சயமாக இணைவைப்பது மகத்தான ஓர் அக்கிரமமாகும். (31:13)
எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)
என அல்லாஹ் கூறுகிறான்.
இது போன்ற வசனங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
அல்லாஹ்வுக்கு இணைவைக்காது அல்லாஹ்வின் மீது விசுவாசத்துடன் இறந்தவன், அவன் செய்த தவறுகளுக்காக நரகத்தில் தண்டனை அனுபவித்தாலும் இறுதியில் ''சுவர்க்கவாதியாவான்''
ஆனால் இணைவைத்தவனோ இறந்தபின் மீட்சியற்ற நரகவாதியாகவே இருப்பான்.
பெரும் பாவங்களில் மிகப் பெரியவைகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ஆம், அல்லாஹ்வின் தூதரே அறிவியுங்கள்! எனத் தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை நிந்தித்தல், (இவைகளைக் கூறும்போது சாய்ந்து கொண்டிருந்த நபியவர்கள் நேராக நிமிர்ந்து) பொய் சாட்சியம் கூறுதல் என்று இதைத்திரும்பத் திரும்ப கூறிக்கொண்டேயிருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தால் நல்லதே என நாங்கள் சொல்லிக்கொள்ளும் வரை கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
(புகாரி, முஸ்லீம்)
எவன் தன் மார்க்கத்தை (இஸ்லாத்தை)த் துறந்தானோ அவனைக் கொல்லுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (புகாரி, அஹ்மத்)
சின்ன ஷிர்க்.
---------------------------
இணைவைத்தலின் இரண்டாவது வகை சின்ன ஷிர்க் என்னும் ''முகஸ்துதியாகும்''. அதாவது தன் செயலை மற்றவர்கள் பார்த்து, புகழ வேண்டும் என்பதற்காக வணக்கங்கள் புரிவதாகும்.
...எவன் தன் இரட்சகனை சந்திக்க விரும்புகிறானோ அவன் நற்கருமங்களைச் செய்து, தன் இரட்சகனுக்கு ஒருவரையும் இணையாக்காது, அவனையே உள்ளச்சத்துடன் வணங்கி வருவானாக!. (18:110)
இதன் கருத்து:- ''தனது நற்செயல்களை, பிறர் பார்த்து வியக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் புரிய வேண்டாம்'' என்பதாகும்.
''என்னிடம், தஜ்ஜாலை விடவும் (அவனால் உங்களுக்கு ஏற்படும் தீமையை விடவும்) உங்கள் மீது அதிகம் பயப்படத்தக்க ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என அல்லாஹ்வின் தூதர் நபி  ஸல்  அவர்கள் வினவினார்கள்.
ஆம்! தெரிவியுங்கள் என (தோழர்களான) அவர்கள் கூறினார்கள்.
அ(தற்கு நபிய)வர்கள், (நான் பெரிதும் உங்கள் மீது பயப்படும் தீங்கு) மறைமுக ஷிர்க்காகும் (அது யாதெனில்) ஒருவர் தொழுகையை நிறைவேற்ற நிற்கின்றார். தன்னை மற்றவர் பார்ப்பதை கண்டு தனது தொழுகையை (நீட்டி நிறுத்தி) அழகுபடுத்துகிறார்.
(முகஸ்துதியான இதுவே மறைமுக ஷிர்க்காகும்) எனக் கூறினார்கள்.
(முஸ்லிம்)
சின்ன ஷிர்க்கிலிருந்து எச்சரிக்கையாய் இருங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், சின்ன ஷிர்க் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''பிறருக்காகச் செய்யும் செயல்களாகும்;'' என நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுமையில் அடியார்களின் செயல்களுக்கு, தீர்ப்பளிக்கும் வேளையில், உலகத்தில் நீங்கள் யாருக்காக, யார் பார்த்து மெச்ச வேண்டும் என நினைத்துச் செயல்பட்டீர்களோ அவர்களிடம் கூலி கிடைக்குமா? என்று பார்த்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுவான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத், பைஹகீ, அபித்துன்யா)
எவன், என்னைத் தவிர்த்து வேறொருவனுக்காக (அவன் பாராட்டுவதற்காக) நற்செயல் புரிகிறானோ அவன், எனக்கு இணைவைத்தவனாகிறான். நான் அவனை விட்டும் நீங்கி விடுகிறேன் என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)
எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
நாளை மறுமையில் ஒரு கூட்டத்தினரை சுவனம் செல்லும்படி உத்தரவிடப்படும். அவர்கள் சுவனத்தை நெருங்கி அங்குள்ள மாளிகைகளைக் கண்டு அங்கிருந்து வெளிவரும் வாசனைகளை நுகர்ந்த பின் அவர்களைச் சுவர்க்கத்தில் நுழைய விடாது திரும்பி விடும்படி உத்தரவு வரும். யாஅல்லாஹ்! சுவர்க்கத்தின் வாசனையையும், அதன் அலங்காரங்களையும் காட்டுவதற்கு முன்பே இப்படி உத்தரவு கொடுத்திருக்கலாமே என கவலையுடனும், அது கிடைக்காமல் தவறிய வேதனையுடனும் கூறுவார்கள். இதைத்தான் நான் விரும்பினேன். நீங்கள் தனித்திருக்கும் போது பாவத்தில் மூழ்கியிருந்தீர்கள், கூட்டத்துடனிருக்கும் போது நல்லவர்களாக இருந்தீர்கள்! மனிதர்களுக்கு அஞ்சினீர்கள்! எனக்கு அஞ்சிய மனிதர்களை, கண்ணியப்டுத்தினீர்கள்! என்னை, கண்ணியப்படுத்தவில்லை. எனவே இப்பொழுது என் கொடிய வேதனையை உங்களுக்குத் தருகிறேன் என்று அல்லாஹ் கூறுவானென நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(பைஹகீ, அபூநயீம், தப்ரானீ, இப்னு அஸாகிர், இப்னு நஜ்ஜார்)
தூய எண்ணத்துடன் வணங்குவது எப்படி? என ஒர் அறிஞரிடம் கேட்கப்பட்டது
பாவங்களை எவ்வாறு மற்றவர்களுக்குத் தெரியாது செய்கிறானோ அதே போன்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நன்மைகளைச் செய்வதாகும் எனப் பதிலுரைத்தார்கள். யா அல்லாஹ்! பிறருக்காக நற்செயல் புரிவதை விட்டும் பெரிய, சிறிய ஷிர்க்குகளை விட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக!
2. கொலை.
----------------------
எவர் ஒரு இறை விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம் தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)
ஒரு இறை விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் நாயன் என்று அழைக்கமாட்டார்கள் அல்லாஹ் (கொலை செய்யக் கூடாதென்று) தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றி, கொலை செய்யமாட்டார்கள். விபச்சாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே எவரேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால் அவர் (அந்தப் பாவத்திற்குரிய) தண்டனையைச் சந்திப்பார். மறுமை நாளிலோ அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும். மேலும் இழிவுபட்டவராக அதில் என்றென்றும் தங்கிவிடுவார். (25:68,69)
ஆயினும் (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக்கோரி) விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களோ அத்தகையோருடைய பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல அதனை) நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபை உடையோனுமாக இருக்கிறான். (25:68..70)
.....எவனொருவன் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் குழப்பத்தை தடைசெய்வதற்காகவோ அன்றி, மற்றோர் ஆத்மாவை (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவன் போலாவான். (5:32)
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி எக்குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டு) கொலை செய்யப்பட்டீர்கள்? என்று கேட்கப்படும்.(81:8:9)
அழிவின்பால் உங்களை இட்டுச்செல்லக்கூடிய ஏழு பெரும்பாவங்களை, தவிர்த்துக்கொள்ளுங்கள் என்ற நபிமொழியில் மூன்றாவதாக இடம்பெறுவது நியாயமின்றி ஒருவனைக் கொலை செய்வது என்பதாகும். (புகாரி , முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எது பெரிய பாவம்? என கேட்டார். உன்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கடுத்தது எது? எனக் கேட்டார். உணவு கொடுக்க பயந்து உன் குழந்தையைக் கொல்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்கடுத்தது எது? எனக்கேட்டார். உன் அயல் வீட்டுப்பெண்ணுடன் விபச்சாரம் புரிவதாகும் எனக் கூறிவிட்டு,
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் ''நாயன்'' என்று அழைக்கமாட்டார்கள்..........(25:68)
என்ற குர்ஆன் வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். (திர்மிதீ)
இரண்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாளுடன் சண்டை செய்தால், கொல்பவனும், கொல்லப்படுபவனும் நரகத்திலேயே இருப்பார்களென நபி(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதரே! 'கொல்பவன் நரகத்திற்குப் போவது முறைதான்: கொல்லப்படுபவனும் ஏன் நரகத்திற்குப் போக வேண்டும்? எனக் கேட்கப்பட்டது. கொல்லப்பட்டவனும் தன் சகோதரனைக் கொல்லும் எண்ணத்துடன்தானே சண்டையிட்டான்? என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பகைமை, உலக விவகாரம், தலைமைத்துவம் இவைகள் போன்றவைகளுக்காக, சண்டையிடும் முஸ்லிம்களுக்குத்தான் இந்த நபிமொழி எச்சரிக்கையளிக்கிறது. தற்காப்புக்காக, அல்லது தன் குடும்பத்தின் மானத்தைக் காப்பதற்காக, அல்லது திருடனைத் தாக்குவதற்காக வாளை ஏந்தும் போது ஒரு முஸ்லிம் நரகவாதியாகமாட்டான் என இமாம் அபூசுலைமான் (ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.
சிலரின் கழுத்தைச் சிலர் வெட்டிக்கொல்லும் காஃபீர்களாக எனக்குப் பின்னால் நீங்கள் மாறிவிடாதீர்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லீம்)
விலக்கப்பட்ட, இரத்தத்தைச் சிந்தாமலிருக்கும் வரை (அநியாயமாக, கொலை செய்யாமலிருக்கும் வரை) ஒரு முஸ்லிம் தன் மார்க்கத்தில் விசாலமாக (மகிழ்வுடன்) இருப்பார் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
. (புகாரி, முஸ்லீம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)
ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், கொலை செய்வதும், பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவங்களில் உள்ளவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லீம், நஸயீ)
கொலையை (முதலில்) செய்த ஆதம் (அலை) அவர்களின் மகனுக்கும் பாவத்தில் பங்கு உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
எவன் பாதுகாப்பளிக்கப்பட்டவனை (காபிரை)க் கொன்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைக்கூட பெற்றுக்கொள்ளமாட்டான்: சுவர்க்கத்தின் நறுமணம் நாற்பது வருடத் தொலைவுக்கு வீசிக் கொண்டிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி)
எவன் பாதுகாப்பளிக்கப்பட்டவனை (காபிரை)க் கொன்றானோ அவன் அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியவனாகிறான், சுவர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெற்றுக் கொள்ளமாட்டான்: சுவர்க்கத்தின் நறுமணம் ஐம்பது (வருட)கால தூரம் வரை வீசிக் கொண்டிருக்கும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)
பாதுகாப்பளிக்கப்பட்டவன் என்று மேலே குறிப்பிட்டது யாரெனில், தாம் முஸ்லிம ஆட்சியின் கீழ் இருந்து கொண்டு இஸ்லாமிய சட்டங்களுக்குக் கீழ்படிந்து நடக்கும் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான். இவ்வாறானவர்களைக் கொலை செய்பவனுக்குகே சுவர்க்கத்தின் வாடைகூட கிடையாது என்றிருந்தால் ஒரு முஸ்லீமைக் கொலை செய்வது எத்துணை பயங்கரமானது என்பதைச் சிந்தியுங்கள்.
மனமுரண்டாக ஒருவிசுவாசியை, கொலை செய்த குற்றத்தையும், ''முர்தத்தாக'' (மதம் மாறி) இறந்த குற்றத்தையும் தவிர, ஏனைய குற்றங்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுதாவூத், நஸயீ, ஹாகிம், இப்னுஹிப்பான்)
இக்கொடிய பாவம் ஏற்படாமல் அல்லாஹ் நம்அனைவரையும் காப்பாற்றுவானாக!
3. சூனியம்
-------------------
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும்.
(புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)
மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
.அந்த ஷைத்தான்கள்தாம் மெய்யாகவே காபீர்களாக இருந்தார்கள். மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள் (இவை) பாபிலோனில் உள்ள ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கபட்டிருந்தன என்று பலவற்றையும் கற்றுக் கொடுத்தார்கள்) அவ்விருவரும் (சூனியத்தைக் கற்கச் சென்ற) மனிதர்களை நோக்கி நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்றால் நீங்கள் காபீர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக் கற்று) நீங்கள் காபீர்களாகி விடவேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை (என்றும் இவ்விதம் கூறிய பின்னரும் இதனை கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை உண்டுபண்ணக்கூடிய உபாயத்தை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள் (என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்) அல்லாஹ்வின் கட்டளை இன்றி அதைக் கொண்டு அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்துவிட முடியாது. மேலும் அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர (விசுவாசத்திற்குப் பதிலாக)அ(ச்சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். (2:102)
என அல்லாஹ் சூனியத்தையும், அதை கற்பவர்களையும் எடுத்துக் காட்டியுள்ளான்.
வழிகேடர்கள் சூனியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
அவர்கள் அந்த வேலையை ''ஹராம்'' என்ற அளவோடு தான் பார்க்கிறார்கள். அது ''குஃப்ருக்குரியது'' என்பதை விளங்கவில்லை. வசியம் செய்யும் கலையைக் கற்கிறார்கள். கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை உண்டாக்குவதற்கும், பெண்ணை மயக்கித் தங்கள் கெட்ட எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். இவைகளுக்காக உச்சரிக்கப்படும் வசனங்களில் அனேகமானவை ஷிர்க்கை உண்டுபண்ணக் கூடியனவாக உள்ளன. சூனியக்காரனுக்குரிய தண்டனை அவனைக் கொல்வதாகும். ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து காஃபிராகிவிட்டான். எனவேதான் இஸ்லாம் அவனுக்கு இச்சட்டத்தை வழங்கியுள்ளது.
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும்.
(புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)
உமர் ரலி அவர்கள் தன் வஃபாத்திற்கு ஒருவருடத்திற்கு முன், முஸ்லிம் ஆட்சியிலுள்ள கவர்னர்களுக்கு சூனியக்காரனையும், சூனியக்காரியையும் கொல்லும்படி உத்தரவிட்டார்கள் என பஜாலதிப்னு அப்தா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
சூனியக்காரனுக்குரிய தண்டனை அவனை வாளினால் வெட்டுவதாகும் என ஜூன்துப் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதி)
. அல்லாஹ் நாடியதே நடக்கும் என்ற நம்பிக்கைக்கு சூனியம்  மாறானதாகும். அல்லாஹ்வின் விதியை நம்பாதவர் விசுவாசங்கொண்டவராக முடியாது.
அல்லாஹ் நம் விசுவாசத்தில் தவறேதும் ஏற்படாது பாதுகாப்பானாக!

4. தொழுகையை வீணாக்கி விடுதல்
---------------------------------------------------------------
'தங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
இவர்களுக்குப் பின்னர் (இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய ஸ்தானத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டனர். இவர்கள் (மறுமையில்) தீமையையே(நரகத்தையே) சந்திப்பார்கள் (19:59)
இவ்வசனத்தில் ''வீணாக்கிவிட்டனர்'' என்ற வசனத்தின் கருத்து தொழாமலே இருந்தவர்கள் என்பதல்ல. ''தொழுகையை அதன் நேரத்தில் தொழாதவர்கள்'' என்பதாகும். என இப்னு அப்பாஸ் ரலி.அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
தாபியீன்களின் இமாமாகிய ஸயீத் இப்னு முஸையிப் (ரஹ்) அவர்கள் ''வீணாக்கிவிட்டனர்'' என்பதன் கருத்து, அஸர் நேரம் வரை லுஹர் தொழாமலிருப்பதும், மஃரிபு நேரம் வரை அஸர் தொழாமலிருப்பதும், இப்படியே அடுத்த நேரம் வரும் வரை பிற்படுத்துவதாகும் என விளக்குகிறார்கள்.
தங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)
''தொழுகையில் பாராமுகமாயிருக்கும்'' என்பதன் பொருளென்ன? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, உரிய நேரத்தில் தொழாது பிற்படுத்துவதாகும்., இவர்களுக்குக் கொடிய வேதனைதரும் ''வைல்'' என்னும் நரகம்தான் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஸஅதிப்னு அபீவக்காஸ் ரலி.அவர்கள் கூறுகிறார்கள். (பஸ்ஸார்)
''வைல்'' என்பது நரகத்திலுள்ள ஓர் ஓடையாகும். இவ்வுலகத்தில் உள்ள மலைகளையே அதில் போட்டால் கூட அவைகளும் உருகிவிடக்கூடிய அளவுக்கு உஷ்ணத்தை உடையது அது.
தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பாராமுகமாக இருப்பவனுக்கு இந்த ''வைல்'' என்னும் ஓடையில் நுழையும் தண்டனையுண்டு என்று கூறப்படுகிறது.
விசுவாசிகளே! உங்களுடைய பொருள்களும், சந்ததிகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து
உங்களைத் திருப்பிவிடவேண்டாம். எவரேனும் இவ்வாறு செய்தால் அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர் தாம். (63:9)
இவ்வசனத்தில் ''அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து'' என்று கூறப்பட்டிருப்பது ''தொழுகையை'' யாகும் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். எவருடைய பொருள், குடும்பம், தொழில் ஆகியவை தொழுகையை நிறைவேற்ற முடியாதவாறு அவரை தடுக்கின்றனவோ, அவர் நஷ்டமடைந்தவராகிறார். நஷ்டம் என்பது மறுமையின் நற்பாக்கியம் கிடைக்காமல் போவதாகும்.
மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
தொழுகையின் முக்கியத்துவம்
1. (நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்து விட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும், (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், (ஏனென்றால்) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர். (4:102)
2. இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து,
அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும்,
முஹம்மது(ஸல்)  அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது.,
தொழுகையை நிறைவேற்றுவது,
நோன்பு நோற்பது. ஸக்காத் கொடுப்பது, ஹஐ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
3. நாளை மறுமையில் தொழுகையைப்பற்றித்தான் ஓர் அடியானிடத்தில் முதலில் விசாரிக்கப்படும், அது சரியாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் சரியாக இருக்கும், அது தவறாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் தவறாக இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி)
தொழுகையை விடுவது ''நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்''
1. சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ''ஸகர்'' என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், ''தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை'' என்று கூறுவார்கள். (74:40-43)
2. இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (19:59)
3. யார் தொழுகையை, பாதுகாத்து (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடும். யார் தொழுகையைப் பேணித் (தொழ வில்லையோ) அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவர் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
4. எங்களுக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) இடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும், எவன் தொழுகையை விட்டானோ அவன் காஃபிராகிவிட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத், முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம்)
5. இஸ்லாத்துக்கும், குஃப்ருக்கும் (ஓர் இறைவிசுவாசிக்கும், நிராகரிப்பாளனுக்கும்) இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் (தொழுகையை விட்டவன் குஃப்ரில் இணைந்தவனாகிறான்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், தப்ரானீ)
6. ''தொழுகையைத்தவிர'' மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் ஏகோபித்த முடிவெடுக்கவே இல்லை.
(திர்மிதி)
7. எவனது அஸர் தொழுகை தவறி விடுகிறதோ அவனது நற்செயல்கள் யாவும் அழிந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
8. மனமுரண்டாக எவன் தொழுகையை விடுகிறானோ அவன் அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து நீங்கியவனாகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், பைஹகீ, இப்னுமாஜா, தப்ரானீ)
9. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறும் வரையிலும், தொழுகையை நிலை நாட்டி ஸக்காத்துக் கொடுக்கும் வரையிலும், நான் மனிதர்களுடன் போராடும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். இவைகளை நிறைவேற்றுபவர்கள் இஸ்லாத்தின் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களைச் செய்யாதவரை, அவர்கள் தங்களது உயிர், உடமை ஆகியவைகளுக்கு என்னிடம் பாதுகாப்புப் பெறுவார்கள் அவர்களைப் பற்றிய கணக்கு (தீர்ப்பு) எல்லாம் வல்ல அல்லாஹ் இடத்திலே இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
10. நபி(ஸல்) அவர்கள் இந்நால்வரின் பெயர்களையும் குறிப்பிட்டுக்கூறியதன் காரணம் என்னவெனில், பொருளீட்டல், அதிகாரம் செலுத்துதல், அரசு ஊழியஞ் செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவைகளினால் யாராவது தொழுகையை விட்டிருந்தால், பொருளீட்டுவதிலேயே காலத்தைக் கழிப்பவன் காரூனுடனும், அதிகாரம் செலுத்துபவன் ஃபிர்அவ்னுடனும், அரசு ஊழியன் ஹாமானுடனும், வியாபாரி உபையிப்னு கலப்புடனும் இருப்பர் எனச் சுட்டிக்காட்டுவதற்கேயாகும் என்று சில அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றார்கள்.
கலீஃபா உமர் ரலி  அவர்கள் விரோதியினால் குத்தப்பட்டுப் படுக்கையிலிருக்கும் போது 'அமீருல் மூமினீன் அவர்களே! தொழுகையைக் கவனியுங்கள்' என்று கூறப்பட்டது. ஆம்! தொழுகை இல்லாதவனுக்கு இஸ்லாத்தில் உரிமையில்லை எனக்கூறிவிட்டு ''இரத்தம் ஓடிக் கொண்டிருந்த நிலையிலும்'' தொழுகையை நிறைவேற்றினார்கள்.
மூவருடைய தொழுகையை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டான்
1. ஜமாஅத்தினரின் வெறுப்புக்குரிய இமாமின் தொழுகை.
2. சுதந்திரமானவனை அடிமையாக்கிக் கொண்டவரின் தொழுகை.
3. நேரம் தவறித் தொழுபவரின் தொழுகை என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத், இப்னுமாஜா)
எவன் காரணமின்றி இரண்டு தொழுகையைச் சேர்த்து, தொழுதானோ அவன் பெரும் பாவங்களின் வாசலுக்கு வந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹாகிம்)
''குழந்தைகளைத் தொழும்படி ஏவுவது'' எப்போது?
ஏழு வயதானவுடன் உங்கள் குழந்தைகளை தொழும்படி ஏவுங்கள், பத்து வயதானால் அடித்து தொழ வையுங்கள். ஆண், பெண் குழந்தைகளைப் படுக்கையில் பிரித்து விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத், இப்னுமாஜா)
அவசர அவசரமாகத் தொழுதல்
தொழுகையில் ருகூஉ, சுஜூதுகளில் போதுமான அளவு தாமதம் செய்யாது (நிதானமின்றி) அவசரமாகத் தொழுபவரின் தொழுகை சேராது.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒரு மனிதர் அங்குவந்து தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பதில் கூறிவிட்டு மீண்டும் தொழுவீ-----ராக! என்றார்கள். அம்மனிதர் இரண்டாவது முறையும் தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்களுக்குச் சலாம் கூறினார். நபி அவர்கள் சலாமுக்குப் பதிலளித்துவிட்டு மீண்டும் தொழுவீராக! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதைவிட சிறப்பாக தொழுவது எப்படியென்று எனக்குத் தெரியாது. எனக்கு சொல்லி (கற்றுத்) தாருங்கள்! என்றார். நீர் தொழுகைக்காக நின்று தக்பீர் கட்டியவுடன் குர்ஆனில் உமக்குத் தெரிந்த இலேசான வசனங்களை ஓதிக்கொள்ளும், பின் ருகூஉ செய்து அதில் தாமதம் செய்வீராக, பிறகு நேராக நிற்குமளவிற்கு நிலைக்கு வந்து அதில் தாமதிப்பீராக, பின்னர் சுஜூது செய்து அதிலும் தாமதிப்பீராக, அதன் பின் இருப்புக்கு வந்து அதில் தாமதிப்பீராக, இரண்டாவது சுஜூது செய்து அதில் தாமதித்துக் கொள்வீராக. இவ்வாறே எல்லாத் தொழுகைகளையும், நிதானமாக நிறைவேற்றுவீராக! என நபி அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
ருகூஉ, சுஜூதுகளில் உறுப்பு (முதுகு) நேராக அமையும்வரை ஒருவரின் தொழுகை கூடாது என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)
பர்ளான தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதின் அவசியமும் அதன் சிறப்பும்.
1. நபி(ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் (நபித் தோழர்) வந்து அல்லாஹ்வின் தூதரே! ''என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை'' (என்று சொல்லி) வீட்டில் (தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார்கள், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் (நபித் தோழர்) திரும்பி செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு (பள்ளிக்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். (முஸ்லிம்)
2. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு ''தொழுகையை தொழவைப்பதற்காக ஒருவரை ஏற்படுத்திவிட்டு'' தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் விடுகளை எரித்து விடலாமென நான் முடிவு செய்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
3. தனித்து தொழுவதை விட கூட்டமாக (ஜமாஅத்தாகத் தொழும்) தொழுகை 27 மடங்கு தரத்தில் சிறந்ததாகும், என அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
4. உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விட, கூட்டாகத் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும் என அல்லாஹ்வின் தூதர் நபி அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)
விளக்கம்:- 27 மடங்கு மற்றும் 25 மடங்கு என இரண்டு விதமான அறிவிப்புகள் ஹதீஸில் வந்திருக்கின்றன. இதற்கு விளக்கமளிக்கும் போது ஹாபில் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பல விளக்கங்களை அளித்துள்ளார்கள். அவைகளில் சிலவற்றை இங்கு தருகின்றேன்.
- பள்ளி தூரமாக இருந்தால் 27 மடங்கு நன்மையும், அருகில் இருந்தால் 25 மடங்கு நன்மையும்.
- ஜமாஅத் நடக்கும் பள்ளியில் 27 மடங்கு நன்மையும் தனி இடத்தில் தொழுதால் 25 மடங்கு நன்மையும்.
- தொழுகையை நிறைவேற்றி விட்டு அடுத்த தொழுகையை எதிர்பார்த்திருப்பவருக்கு 27 மடங்கு சிறப்பும் எதிர்பார்த்திராது திடீரென வந்து தொழுது செல்பவருக்கு 25 மடங்கு சிறப்பும்.
- ஜமாஅத்தின் தொடக்கத்திலேயே இருந்தவருக்கு 27 மடங்கு சிறப்பும்
பிந்தி வந்தவருக்கு 25 மடங்கு சிறப்பும்.
- சப்தமிட்டு ஓதும் தொழுகையில் தொழுபவருக்கு 27 மடங்கு சிறப்பும் அமைதியாக தொழும் தொழுகையில் தொழுபவருக்கு 25 மடங்கு சிறப்பும் எனப் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்கள்.
இவைகள் அனைத்தும் விளக்கங்கள்தான். நபி அவர்கள் இவ்வாறு வித்தியாசப்படுத்திக் கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
எனவே பர்ளான தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதால் 27 அல்லது 25 மடங்கு நன்மைகள் உண்டு என்பதை அறியலாம். அதிகமாகக் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றிட பாங்கு சொல்லப்பட்டதும் பள்ளிக்குச் சென்று அங்கு நடைபெறும் ஜமாஅத்தில் கலந்து, தொழுகையை நிறைவேற்றி, அதிக நன்மைகளைப் பெற பழகிக் கொள்ள வேண்டும்.
கடமையான ஒவ்வொரு தொழுகைகளையம் உரிய நேரங்களில் தொழுவது மிக அவசியமாகும்
1. நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)
2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலி (புகாரி)

5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
--------------------------------------------------------------

அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். 
(இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)

எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே) நீர் துன்புறுத்தும் வேதனையை நன்மாராயம் கூறுவீராக! (தங்கம்,வெள்ளியாகிய) அவற்றை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு, உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதாம். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் (சிறிது) சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும் நாளை (நபியே நீர்) அவர்களுக்கு ஞாபகமூட்டும் (9:34,35)

''..இணை வைப்போருக்குக் கேடுதான். அவர்கள் ஸக்காத்து கொடுக்கமாட்டார்கள் மறுமையையும் நிராகரிப்பவர்களும் அவர்களே! என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். (41:6,7)

இங்கு ஸக்காத் கொடுக்காதவர்கள் இணை வைப்போர் (முஷ்ரிகீன்கள்) எனக் கூறியிருப்பதைக் கவனியுங்கள்.
பொன், வெள்ளியுடையவன் அதன் அளவுக்கு ஸக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் அவை உருக்கப்பட்டு அவன் நெற்றியிலும், விலாக்களிலும், முதுகிலும் சூடுபோடப்படும். ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்யப்படும் மறுமையில் ஒரு நாள் என்பது ஐம்பதுனாயிரம் வருடங்களாகும். கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு மனிதர்கள் விசாரிக்கப்பட்டு முடியும் வரை. இவன் நரகத்திற்கோ, சுவர்க்கத்திற்கோ போகும்வரை இது நடந்து கொண்டேயிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். 
(புகாரி, முஸ்லிம், நஸயீ)

அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகையுள்ளவன் நிலையென்ன? எனக் கேட்டார். ஒட்டகை உள்ளவன் அதன் ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால், பாறை போன்ற தரையில் அவனைப் படுக்க வைத்து, ஒட்டகக் கூட்டத்தின் ஒவ்வொரு ஒட்டகையும் அவனை மிதித்துச் சென்று கொண்டேயிருக்கும். கடைசி ஒட்டகம் சென்றவுடன் மீண்டும் அவை திருப்பி மிதிக்கவிடப்படும். இவ்வாறே அவனுக்கு மறுமையில் தீர்ப்புச் சொல்லப்படும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். ஆடு, மாடுகளின் நிலையென்ன என்று இன்னொருவர் கேட்டார். அவர்களும் அவைகளுக்குரிய ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால் ஒட்டகையின் ஸக்காத்தைக் கொடுக்காதவன் போன்றே வேதனை செய்யப்படுவான் என நபி அவர்கள் கூறினார்கள்.
 (புகாரி, முஸ்லிம், நஸயீ)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்
. (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)



6. நோன்பை விடுதல்
------------------------------------------
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் தான் (நோற்பது கடமையாகும்) (2:183,184)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை கலிமா, தொழுகை, ஸக்காத், ஹஜ்ஜு, நோன்பு என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
 (புகாரி, முஸ்லிம்)
எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். 
(திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
நோன்பை விடும் பெரும்பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!

7. ஹஜ்ஜு செய்யாமை
---------------------------------------------
எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்... (3:97)

என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். வசதிபடைத்தவர்கள் ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது. அல்லாஹ் கடமையாக்கிய ஒன்றைச் செய்யாமல் விடுவது பெரும் பாவங்களைச்சேரும். ஆகவே வசதியுள்ளவர்கள் ஹஜ்ஜு செய்யாமல் விடுவது பெரும் பாவமாகும்.
ஹஜ்ஜு செய்வதற்கு, தகுதியுடையவனாக இருந்து ஹஜ்ஜு, செய்யாமலிருப்பவன் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணிப்பான். ஏனெனில், முஸ்லிமாக மரணிப்பவனாக இருந்தால் முன் கூறப்பட்ட குர்ஆன் வசனப்படி ஹஜ்ஜை நிறைவேற்றிpயிருப்பான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

என் ஆட்சியின் கீழுள்ள நகரங்களில் வசித்துக் கொண்டு, ஹஜ்ஜூச் செய்ய வசதியிருந்தும் அதை நிறைவேற்றாத முஸ்லிம்கள் மீது, ''முஸ்லிம் அல்லாதவர்கள் மீது விதிக்கும் ஜிஸ்யா'' என்னும் (பிற மதத்தவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தலைவரி)யை விதிக்க, கட்டளை பிறப்பிக்க நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களல்ல என உமர் ரலி.அவர்கள் கூறுகிறார்கள்.
என் அயல் வீட்டானாயினும், வசதிபடைத்த பின் ஹஜ்ஜு செய்யாமல் இறந்தவனுக்காக நடத்தப்படும் தொழுகையில் நான் கலந்து கொள்ளமாட்டேன் என சயீத் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றாதவன் மீது இவைபோன்ற அனேக எச்சரிக்கைகள் வந்துள்ளன. ஹஜ்ஜை முறையாக நிறைவேற்றும் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக!


8. பெற்றோரைத் துன்புறுத்துதல்.
--------------------------------------------------------------------------
(நபியே!) உமது இரட்சகன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். 
அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை விரட்டவும் வேண்டாம் அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசவும். அவர்களிடத்தில் மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், என் இறைவனே! ''நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும், அருளும் பொழிவாயாக!'' என்றும் நீர்
பிரார்த்திப்பீராக! (17:23,24)


(மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள் பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் (6:151)

எனவும், அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனத்தில், தனக்கு நன்றி செலுத்தும்படி கூறியபின் பெற்றோருக்கும் நன்றி செலுத்தும்படி இணைத்துக் கூறியுள்ளதை நன்கு கவனியுங்கள்.
மூன்று குர்ஆன் வசனங்கள், ஒன்றுடன் இன்னொன்றை இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு மற்றொன்றைச் செய்தால் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள் அவன் தூதருக்கும் வழிப்படுங்கள். (3:32)

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவன் அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஸக்காத்தையும் கொடுங்கள் (2:43)

தொழுதுவரும் செல்வந்தன் ஸக்காத்தை நிறைவேற்றாவிட்டால் அதனையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வருவாயாக (31:14)

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய், தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால் அதையும் அல்லாஹ் ஏற்க மாட்டான் என குர்ஆன் விளக்கத்தின் தலைவராகிய இப்னு அப்பாஸ் ரலிஅவர்கள் கூறுகிறார்கள்.
பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் 
(திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)

தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)

எவ்வித சந்தேகமுமின்றி மூவரின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

1. அநீதி இழைக்கப்பட்டவன் பிரார்த்தனை

2. பிரயாணியின் பிரார்த்தனை

3. பெற்றோர் தம் மக்களுக்காக செய்யும் பிரார்த்தனை என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
 (அபூதாவூத், திர்மிதீ, தப்ரானீ)

தாயின் மகத்துவம் மிகப் பெரியது. கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் வரை எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கிறாள். பிரசவத்தின் போது ஜீவமரணப் போராட்டம் நடத்துகிறாள். அதன் பின் இரவு பகலாக விழித்திருந்து ஓர் ''ஈ'' கூட குழந்தையின் மீது மொய்க்கவிடாமல் பேணிக் காக்கிறாள். குழந்தையின் கழிவுகளைத் தன் கையினால் துப்புரவு செய்கிறாள். குழந்தை அழுதால் தூக்கம் கலைந்து எழுகிறாள். குழந்தையின் சுகமே தன் சுகம் என எண்ணுகிறாள். குழந்தை விரும்புவதைக் கொடுக்கிறாள். குழந்தை உடல் ஊனமுற்று இருந்தால் இரட்டிப்பு அன்பைச் சொரிகிறாள். இந்த உலகத்தில் தன் குழந்தைதான் உயர்ந்தது என ஒவ்வொரு தாயும் எண்ணுகிறாள். தத்தித் தள்ளாடி தளிர் நடைபோடும் போது எங்கே குழந்தை விழுந்து விடுமோ எனப் பதறும் தாய், பெரியவனானதும் அரும்பெரும் சாதனைகள் புரியமாட்டானா, நிலை நிறுத்தமாட்டானா என ஏங்குகிறாள்.
இவ்வாறு தாயின் மகத்துவத்தைக் அடுக்கிக் கொண்டே போகலாம். ''இத்தகைய தாய் வயோதிகமடைந்ததும் உதாசீனம் செய்யும் மக்கள் எத்தகைய துன்பங்களுக்காளாவார்கள்'' என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டியதில்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து நல்லருள் பெற உதவி செய்வானாக!.





9. உறவினர்களை வெறுத்தல்
-----------------------------------------------------------------------.

உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)

 அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்புடைய உறவினர்களுக்கும் (மதிப்பளியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (4:1)

(நயவஞ்சகர்களே!) நீங்கள் (யுத்தத்திற்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் சுற்றத்தாரைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா? (47:22)

அவர்கள் (எத்தகையோரென்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுவார்களேயன்றி (தாங்கள் செய்த) உடன்படிக்கையை முறித்துவிடமாட்டார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதை சேர்த்து வைப்பார்கள். தங்கள் இரட்சகனுக்கு பயந்து நடப்பார்கள் மேலும் (மறுமையில் கேட்கப்படும்) கொடிய கேள்விகளைப் பற்றி (எந் நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள் (13:20,21)

எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (அல்லாஹ்வின்) சாபந்தான் கிடைக்கும். அன்றி அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (சித்தப்படுத்தப்பட்டு) இருக்கிறது (13:25)

 எனவும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பிந்திய இரண்டு வசனங்களிலும் 'சேர்த்து வைக்கும்படி' என்றிருப்பது உறவினர்களைச் சேர்த்துக் கொள்வதாகும் என்ற கருத்தினை குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக!
 (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)

அல்லாஹ் அவனுக்கு வழிப்பட்டு நடந்த கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக!





10. விபச்சாரம்
------------------------------------------------------------------------

(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)


கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; 
(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் ''ஆண்டவன்'' என்று அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் (கொலை செய்யக்கூடாதென்று) தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றி, கொலை செய்து விடமாட்டார்கள். விபச்சாரமும் செய்ய மாட்டார்கள். எவனேனும் இவைகளைச் செய்ய முற்பட்டால் அவன் (அந்தப் பாவத்திற்குரிய) தண்டனையை அடையநேரிடும். மறுமை நாளில் அவனுடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும் மேலும் இழிவுபட்டவனாக அதில் என்றென்றும் தங்கிவிடுவான். (25:68,69)

விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசை அடி அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் விதித்த இக் கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கு(த் தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் விசுவாசிகளில் ஒரு குழுவினர் (அதற்குச்) சாட்சியாக அங்கு இருக்கவும். (24:2)

 எனவும் அல்லாஹ் குர்அனில் கூறுகிறான்.
இது உலகத்திலளிக்கப்படும் தண்டனையாகும். இந்த, தண்டனை விவாகமாகாத ஆண், பெண்ணுக்குரியதாகும். விவாகம் செய்தவர்களாயிருப்பின் அவ்விருவர் மீதும் சாகும் வரை கல்லெறியப்படும். இவ்வாறு இவ்வுலகில் தண்டனை பெறாது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்காமல் இறந்தால் மறுமையில் அதற்காக அவர்களுக்கு தண்டனை உண்டு.
விபச்சாரம் செய்யும் கிழவன், பொய்யுரைக்கும் மன்னன், பெருமையடிக்கும் பிச்சைக்காரன் ஆகிய மூவரிடமும் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களின் பாவங்களை மன்னிக்க மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனையுண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)


எவன் மது அருந்திய நிலையில் மரணித்தானோ அவனுக்கு நரகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 'கூத்தா' என்னும் நீர் புகட்டப்படும். அந்த நீர், விபச்சாரம் புரிந்த பெண்களின் மர்மஸ்தானத்திலிருந்து வடியும் சீழும் ஊணுமும் ஆகும். இதையே, மதுவில் ஊற்றி இறந்தவனுக்கு கொடுக்கப்படும் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அஹமத், அபூயஹ்லா, இப்னுஹிப்பான், ஹாகிம்)

கருணையுள்ள அல்லாஹ் இக்கொடிய பாவத்தில் ஈடுபடாதிருக்க உதவி செய்வானாக!.






11. ஆண் புணர்ச்சி
------------------------------------------------------------------------


லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள்.
 (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)


ஆணுடன் ஆண் இன்பம் அனுபவிப்பதையே ''ஆண் புணர்ச்சி'' என்று கூறப்படும். 
இதுவும் ஒரு கொடிய பாவமாகும். இத்தகைய பாவம் புரிந்து கொண்டிருந்த சமூகத்திற்கு அனுப்பப்பட்ட நபியின் பெயர் லூத் (அலை) அவர்கள். 
இவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தவர் ஆவார்கள்.
லூத் (அலை) அவர்களின் கூட்டத்தினர் பெண்ணை விவாகஞ் செய்து இன்பம் அனுபவிப்பதை வெறுத்து ஆணுடன் இன்பம் அனுபவிப்பதையே விரும்பினர். இது இயற்கைக்கு விரோதமானது, கொடிய பாவத்திற்குரியது. எனவே இவ்வாறு செய்யாதீர்கள்! என லூத் (அலை) அவர்கள் அம்மக்களுக்கு உபதேசம் செய்தார்கள் அதை அம்மக்கள் உதாசீனம் செய்தனர். அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகிலேயே அவர்களுக்குக் கிடைத்தது. இதை அல்லாஹ் நமக்கு எடுத்துக்காட்டி நீங்களும் அவர்களைப் போன்று ''ஆண் புணர்ச்சி'' செய்து என் கோபத்திற்குள்ளாக வேண்டாம்! என அறிவுறுத்தியுள்ளான். (15:72-77)

நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாகக் கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் (மக்காவில் வாழும்) இந்த அக்கிரமக்காரர்களுக்கு வெகுதூரமுமல்ல (விரும்பினால் அதனை அவர்கள் நேரில் பார்த்துக் கொள்ளலாம்). (11:82,83)

(தீய காரியத்திற்காக) அகிலத்தாரில் ஆடவர்களிடம் வருகின்றீர்களா? உங்கள் இரட்சகன் உங்களின் மனைவிகளிலிருந்து உங்களுக்கெனப் படைத்ததையும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள். இல்லை! நீங்கள் (அல்லாஹ்வின்) வரம்பைக் கடந்த சமூகத்தவர்கள் (என்றும் கூறினார்) (26:165,166)

லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்து, தீயகாரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊரிலிருந்தும் நாம் அவரை இரட்சித்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக் கெட்ட ஜனங்களாகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். (21:74)

லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)

இக்கொடிய பெரும் பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!





12. வட்டி.
-----------------------------------------------------------------------

விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)

வட்டியை (வாங்கி) உண்ணுகிறவர்கள் ஷைத்தான் பிடித்து பித்தங் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழுப்பப்படமாட்டார்கள். ஏனென்றால் வணிகமும் வட்டியைப் போன்றதுதான் (எனவே வட்டி வாங்குவதில் தவறில்லை) என இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கிவைத்து வட்டியைத் தடுத்துவிட்டான்... (2:275)

இரத்த ஆறு ஒன்றில் நெருப்புக் கற்களை விழுங்கிக் கொண்டு அதைவிட்டும் வெளியேற முடியாமல் தத்தளித்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சிலரைக் கண்டு ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர்கள் யார்? எனக் கேட்டேன். இவர்கள் தான் வட்டி சாப்பிட்டவர்கள். மறுமையில் விசாரணை நடைபெறும் வரை இவர்களுக்கு இந்த வேதனை கொடுக்கப்படுகிறது என ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புகாரி)

எந்தக் கூட்டத்தில் வட்டி அதிகரிக்கிறதோ அங்கு மனநோய் அதிகரிக்கும். எங்கு விபச்சாரம் அதிகரிக்கிறதோ அங்கு மரணங்கள் அதிகரிக்கும். எங்கு அளவை நிறுவைகளில் மோசடி நடைபெறுகிறதோ அங்கு அல்லாஹ் மழையைக் குறைத்து விடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். 
(இப்னுமாஜா, பைஹகீ, பஸ்ஸார்)

வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். 
(இப்னுமாஜா, பைஹகீ)

வட்டியின் மூலம் சம்பாதிக்கும் ஒரு திர்ஹம் முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்யும் பாவத்திற்குச் சமமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். 
(பைஹகீ, இப்னு அபித்துன்யா)




13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
------------------------------------------------------------------------

எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)

அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்... (6:152)

நானும் அனாதையைப் பொறுப்பேற்றவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு இணைந்திருப்போம் எனக்கூறி நபி அவர்கள் சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள். 
(புகாரி, அபூதாவூத், திர்மிதி)

அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)





14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
------------------------------------------------------------------------

அல்லாஹ் சொல்லாதவற்றை அல்லாஹ் சொன்னான் என்றும், 
ரசூலுல்லாஹ் சொல்லாதவற்றை ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்றும் கூறுவது பெரும் பாவங்ல் ஒன்றாகும்.
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்... (39:60)

மறுமையில் முகம் கருத்திருப்பவன் நரகவாதியாவான். அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் நரகவாதி என்பதில் சந்தேகமில்லை. இந்தக் குர்ஆன் வசனம் இதனை உறுதிப்படுத்துகிறது.
மனமுரண்டாக என் மீது பொய்யுரைத்தவனின் தங்குமிடம் நரகமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். 
(புகாரி, முஸ்லிம் உட்பட மற்றெல்லாக் கிரந்தங்களும்)

பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

என் மீது பொய்யுரைப்பவன் உங்களுக்கு மத்தியில் தன் தேவைக்காகப் பொய்யுரைப்பவனை போன்றவனல்லன் என் மீது பொய்யுரைப்பவனின் தங்குமிடம் நரகமாகும். என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)





15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
------------------------------------------------------------------------

விசுவாசிகளே! போரிட அணிவகுத்து வரும் நிராகரிப்போரை சந்தித்தால் நீங்கள் அவர்களுக்குப் புறங்காட்டி ஓடிவிடாதீர்கள். (பின்சென்று எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவனேனும் அது சமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான். இன்னும் சென்றடையும் இடத்திலெல்லாம் அது மிகக்கெட்டது. (8:15,16)

....உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)

இந்தக் குர்ஆன் வசனம் இறங்கியது ஒரு முஸ்லிம் இருபது விரோதிகளைக் கொல்லச் சக்தி பெற்றிருக்க வேண்டுமென்பதைக் காட்டுவதற்காகும்.
எனினும் நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள் (இத்தகைய) ஆயிரம் பேர்கள் உங்களிலிருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (8:66)

இந்த குர்ஆன் வசனம் இறங்கியதால் குறைந்தபட்சம் இரு விரோதிகளையாவது கொல்ல, சக்தி பெற்றிருக்க வேண்டும் என்று சலுகை கிடைத்தது என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். (புகாரி)


மேலும் யுத்த களத்தில் ஒரு முஸ்லிம் குறைந்தபட்சம் இரண்டு விரோதிகளையாவது கொல்ல வேண்டுமேயன்றி புறமுதுகு காட்டி ஓடிவிடக்கூடாது. அவ்வாறு ஓடுவது பெரும் பாவங்களிலொன்றாகும்.
அழிவின்பால் உங்களைக் கொண்டு செல்லக்கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது,
 2. சூனியம்,
3. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுவது,
 4. தண்டனைக்காகவேயன்றி கொலை செய்வது,
5. யுத்த களத்திலிருந்து மரணத்திற்குப் பயந்து ஓடுவது,
 6. வட்டி சாப்பிடுதல்,
7. கெட்ட நினைவுகளற்ற பத்தினிப் பெண்களைப் பற்றி அவதூறு சொல்லுவது (ஆகியவைகளாகும்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். 
(புகாரி, முஸ்லிம்)





16. தலைவன் அநீதி செய்தல்
------------------------------------------------------------------------

(அளவுக்கு மீறி) மனிதர்கள் மீது அக்கிரம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

(நபியே!) ''இந்த அக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாயிருக்கிறான்'' என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும்வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்ததலை குனிய முடியாது (தட்டுக் கெட்டு, பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக்கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்) இவர்களுடைய இதயம் திக் பிரமை கொண்டுவிடும். (14:42,43)

அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்;தவை யாவும் நிச்சயமாக மிகத் தீயவை. (5:79)

எவன் ''சதி'' செய்கிறானோ அவன் எம்மைச் சேர்ந்தவனல்லன் எனவும், நீங்கள் ஒவ்வொருவரும்
மேய்ப்பாளர்களே! உங்கள் பரிபாலனத்தைப் (பொறுப்புகளைப்) பற்றிக் கேட்கப்படுவீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)

எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)






17. பெருமை
-----------------------------------------------------------------------

பெருமை, அகந்தை, மமதை, தற்புகழ்ச்சி, கர்வம் இவையாவும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும்.
மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி) கணக்கு (கேட்கப்படும்) நாளை நம்பாத கர்வங்கொண்ட (தீயவர்களாகிய உங்கள்) யாவரை விட்டும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன். (40:27)

நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டும், திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டும் நடக்காதே! கர்வங் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

இவ்வசனங்கள் மூலம் பெருமை பேசுவது, அகந்தை கொள்வது யாவும் விலக்கப்பட்டுள்ளன.
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

முதலாவதாக ஏற்பட்ட பாவம் பெருமையினால் உண்டானதாகும். ஆதமுக்குச் சிரம்பணியுமாறு அல்லாஹ் மலக்குகளுக்குக் கட்டளையிட்டபோது பெருமை கொண்ட இப்லீசைத் தவிர ஏனைய எல்லா மலக்குகளும் சிரம்பணிந்தனர். பெருமையினால் சிரம்பணியாத இப்லீஸ் பின்னர் நிராகபிப்பவனாக (காஃபிராக)வும் ஆகிவிட்டான். அதனால் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டான்.

நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து சுஜுது செய்)யுங்கள் எனக்கூறிய போது அவர்கள் பணிந்தார் (சுஜுது செய்தார்)கள், இப்லீஸைத் தவிர. அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (2:34) 

என அல்லாஹ் கூறியிருப்பது இதற்கு ஆதாரமாக அமைகிறது.
எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை உண்டோ அவன் சுவனம் புகமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நரகவாதிகளைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 
மமதை கொண்டவன், ஏன் மமதையுள்ள யாவருமே நரகவாதிகள்தான் என நபி அவர்கள் கூறினார்கள். 
(புகாரி, முஸ்லிம்)





18. பொய்ச்சாட்சி கூறல்
-----------------------------------------------------------------------

விக்கிரக ஆராதனையின் அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான வார்த்தையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள். (22:30)

அவர்கள் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள். (25:72) 

என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள்.
 (இப்னுமாஜா, ஹாகிம்)





19. மது அருந்துதல்
------------------------------------------------------------------------

விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க காரியங்களில் (செயல்களில்) உள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா? (5:90,91)


மதுவிலக்கு, சம்பந்தமான குர்ஆன் வசனம் வந்ததும் நபித்தோழர்கள் 'மது அருந்துவது ஷிர்க்குக்கு ஒப்பான பெரிய பாவம்' எனத் தெருத் தெருவாகக் கூறிக் கொண்டு போனார்கள் என இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்.
 (தப்ரானீ, ஹாகிம்)


எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)
மதுவில் மூழ்கியிருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான் என நபி அவர்கள் கூறினார்கள்.
 (பஸ்ஸார், ஹாகிம்)


அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
 (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)

எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கொடிய பாவத்திலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!.





20. சூது
-----------------------------------------------------------------------

விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். 
(அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் விரோதத்தையும், கோபத்தையும் உண்டு பண்ணவும் அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:90,91)


இங்கே குறிப்பிடப்படும் சூதாட்டம் இப்போது நடைமுறையிலுள்ள பின்வருபவைகளாகும். பணம் வைக்கும் சூதாட்டம், கார்ட்ஸ் விளையாட்டு, பந்தயம் கட்டுதல், வேறு விளையாட்டுக்களில் ஏற்படும் சூது எல்லாமே இதில் அடங்கும்.
சதுரங்கப் பலகை (செஸ்) விளையாடுவதும் கூடாது. இது சோம்பேறிகளின் விளையாட்டாகும். வீண் பொழுதுபோக்குமாகும். சதுரங்கப் பலகை விளையாடுவது குறித்து உங்கள் அபிப்பிராயமென்ன? 
என்று இப்னு உமர் ரலி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அது ''சபிக்கப்பட்ட''தாகும் என விடையளித்தார்கள். அது சிறுவர்கள் ''மார்பிள்'' விளையாடுவதை விடவும் கெட்டதாகும் எனவும் கூறினார்கள். இதே கருத்தைத்தான் இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் இராக்கின் மார்க்கமேதை இப்ராஹிம் நக்யீ அவர்களும் கூறியுள்ளார்கள்.


குதிரைப் பந்தயம், ஒரு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்கி ஒரு இலட்ச ரூபாய் பெறும் லாட்டரி ஆகியவை சூதின் வகையைச் சார்ந்ததாகும். இதுவும் பெரும் பாவங்களிலொன்று என எண்ணி, தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
செஸ் விளையாடுதல் சூதாட்டத்தைச் சேர்ந்தது என அலி ரலி  அவர்கள் கூறினார்கள்.


யார் கட்டம் போட்டு (லூடா) விளையாடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். 
(அபூதாவூத் , இப்னு மாஜா)


இத்தகைய வீண் விளையாட்டுக்களில் ஈடுபடாதிருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக!.


தொடரும்....




Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!