கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள்
♦ உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. (நூல் இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387)
♦ அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
யார் என் மீது ஸலாம் சொன்னாலும் அல்லாஹ்வுதாலா அந்த ஸலாத்தை அறியக்கூடிய அறிவாற்றலை எனக்கு தந்துள்ளான் அவருடைய ஸலாத்திற்கு நான் பதில் சொல்கிறேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல் அபூதாவூத் 1745)
♣ *மரணித்த பின்பும் ஷுஹதாக்கள் கப்ருகளில் ஹயாத்தாக உயிருடன் இருக்கிறார்கள்*
அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது
♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:154)
♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)
♦ ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்” என்றார்.
மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது. (நூல் புகாரி 1351..
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும். அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1338, முஸ்லிம் 5115)
♦ “பத்று“ப் போரில் சுமார் 70 “காபிர்”கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர்கள் குறைஷித் தலைவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் உடல்களை மட்டும் ஒரு பாழுங் கிணற்றில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (24 பிரேதங்களையும்) நோக்கி (அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து) இன்னான் மகன் இன்னானே! இன்னான் மகன் இன்னானே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.
உடனே (அருகிலிருந்த) உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ”இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர், ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 1370, 3976)
மேற்கண்ட நபி மொழி வேறு பல ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அவர்கள் மரணித்து மூன்று நாட்களின் பின் அவர்களை அழைக்கின்றீர்களே! அவர்களுக்கு கேட்குமா? (மரணித்தவர்களுக்குக் கேட்கச் செய்ய முடியாதென்று அல்லாஹ் சொல்லியிருக்கின்றானே? என்று சொன்னார்கள்.)
அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஹம்மதுடைய உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விட அவர்களே நன்றாகக் கேட்கின்றனர். ஆயினும் அவர்கள் பதில் கூற மாட்டார்கள். (நூல் – பத்ஹுல்பாரீ,பக்கம் – 346 மேற்கண்ட பலம் வாய்ந்த நபி மொழி மூலம் உயிரோடிருப்பவர்களின் அழைப்பை மரணித்தவர்கள் கேட்கின்றார்கள். விளங்கியும் கொள்கிறார்கள் என்ற உண்மை தெளிவாகின்றது
ஆகவே நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் ஹகீகத் எனும் எதார்த்தத்தில் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, கப்ரில் தொழுகிறார்கள், இபாதத் செய்கிறார்கள். மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இறை நேசச் செம்மல்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.......
Comments
Post a Comment