ஜக்காத் தொடர்ச்சி

 

இதுவரை  ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளை கண்டு வருகிறோம். இதற்கு முந்தய தொடரில் கடன் பட்டுள்ளவர் மீது ஜகாத் கடமையில்லை ஆனாலும் எல்லா கடன்களுக்கும் இது பொருந்தாது என்று முடித்திருந்தோம். இனி அதன் விபரத்தைப் பார்ப்போம்.

வளர்ந்த இன்றைய பொருளாதார உலகில் கடன் என்பது ஒரு உலக பொருளாதார திட்டமாகவே முன் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு விட்டது. எனவே கடன்களின் வகைகள் என்ன? அவற்றின் மீது ஜகாத் கடமையாகுமா... ஆகாதா... என்பதையெல்லாம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடன்கள் மூன்று நிலைகளில் பெறப்படுகின்றன.

தேவைக்காக கடன் படுவது

அவசரத்திற்காக கடன் படுவது

சூழ்நிலைக்காக கடன் படுவது

தேவைக்காக கடன் படுவோர்:

பொருளாதாரத்தை சேமித்து வைக்க வழியில்லாத அளவிற்கு உள்ளோர் அல்லது மிக குறைந்த அளவு பொருளாதார சேமிப்பைப் பெற்றோர்களாவர். இவர்களுக்கு மேலதிக தேவை என்பது தவிர்க்க முடியாததாகி விடும். சக்திக்கு மீறிய ஒரு பெரிய காரியத்தை செய்தாக வேண்டும் என்ற நிலையை இவர்கள் அடையும் போது கடன் படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

வீடு கட்டுவது - திடீரென்ற பெரிய அளவிளான மருத்துவ செலவுகள் - வெளி நாட்டு பயண ஏற்பாடு - குழந்தைகளின் மேல் படிப்பு - வீட்டில் திருமணம் என்று ஏதாவதொன்று நடக்கும் தருணங்களில் கடன் என்பது இவர்கள் மீது கட்டாய விதியாகி விடுகிறது.

இத்தகைய சந்தர்பங்களில் இவர்கள் கடன் பட்டால் - அது லட்சங்களை கடந்தாலும் - அதன் மீது ஜகாத் கடமையாகாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தேவைக்காகவே கடன் படுகின்றனர். 'தேவைக்கு போக மீதமுள்ளதின் மீதே ஜகாத் கடமை' என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

ஒருவர் வீடு கட்ட, அல்லது குழந்தையின் கல்லூரி படிப்பிற்காக 2 லட்சம் கடன் படுகிறார் என்றால் இப்போது இவரிடம் இருக்கும் தொகை இஸ்லாம் ஜகாத்திற்கு வரையறுக்கும் உச்சவரம்பை கடந்திருந்தாலும் அவற்றின் மீது ஜகாத் கடமையாகாது. இங்கு தொகையின் அளவை - மதிப்பைப் பார்ப்பதை விட பெறப்பட்ட நோக்கத்தை இஸ்லாம் பார்க்கும். இதை கருத்தில் கொண்டு தான் 'கடன் தொகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டாம்' என்ற கருத்தை ஆய்ஷா(ரலி) முன் வைக்கிறார்கள். (நூல் அல் அம்வால்)

அவசரத்திற்கு கடன் படுவோர்:

இதுவும் இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. நல்ல செல்வ நிலையில் இருப்பவர்களுக்கு சில நேரம் அவர்களின் பணம் கைக் கொடுக்காமல் போய் விடும். வங்கி விடுமுறை நாட்களில் அவசரமாக பணம் தேவைப்படும் போது 'ஓரிரு நாட்களில்' தருவதாக இவர்கள் பிறரிடம் கடன் படுவார்கள். செல்வந்தர் ஒருவர் வெளியில் செல்கிறார், செல்லும் இடத்தில் விஸா கார்ட், மாஸ்டர் கார்ட் போன்றவை தவறி விடுகிறது என்றால் இவர்கள் பிறரிடம் கடன் பட்டுதான் ஆக வேண்டும். இது போன்று எத்துனையோ சூழ்நிலைகளில் அவசரமாக கடன் படும் சூழ்நிலை செல்வந்தர்களுக்கு ஏற்படத்தான் செய்யும். ஜகாத்தை கணக்கிடும் கால கட்டங்களில் ஒருவர் அவசரத்திற்காக கடன் படுகிறார் என்றால் தன்னை கடனாளி லிஸ்ட்டில் சேர்த்து அவரால் ஜகாத் கொடுக்காமல் ஒதுங்க முடியாது. ஏனெனில் இவர் ஏற்கனவே ஜகாத் கடமையாகும் அளவிற்கு சொத்தைப் பெற்றுள்ளார். இந்த அவசர தேவை என்பது நிரந்தரமல்ல என்பதால் அவர் ஜகாத்திலிருந்து விடுபட முடியாது.

சூழ்நிலைக்காக கடன் படுவோர்:

நிறைந்த செல்வத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்கும் அதே வேலையில் சூழ்நிலை இவர்களை கடன்பட வைத்து விடும். வருமான வரி குறுக்கீடு, சொந்த செல்வம் - தொழில் - சொத்து ஆகியவற்றிர்க்கான பாதுகாப்பின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொழில் அல்லது வியாபாரம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வங்கிகளிலிருந்து கடன் படுவோர். இவர்கள் பல லட்சங்கள் வரை (பல முறைக் கூட) வங்கிகளிலிருந்துக் கடன் படுவார்கள். இவர்களும் தம்மை கடனாளி என்று கருதி ஜகாத் கொடுப்பதிலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது.

கடன் பெற்றும் ஜகாத் கொடுக்க கடமைப்பட்ட இவர்கள் விஷயத்தில் கடன் தொகைக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டுமா....என்பதை நாம் விளங்க வேண்டும்.

இது குறித்து மூன்று வித கருத்தோட்டங்கள் அறிஞர்களுக்கு மத்தியில் நிலவுகிறது.

ஒரு உதாரணத்துடன் இதை அணுகுவோம்.

10 லட்சம் சொத்தைப் பெற்றுள்ள ஒருவர் சூழ்நிலைக்காக வங்கியிலிருந்து 8 லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவரிடம் 18 லட்சம் உள்ளது.

18 லட்சத்திற்கும் அவர் ஜகாத் கொடுக்க வேண்டுமா..

10 லட்சத்திற்கு கொடுக்க வேண்டுமா..

10 லட்சத்தில் 8 லட்சம் கடன் அடைக்க வேண்டியுள்ளதால் 2 லட்சத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டுமா...

தங்கள் ஆய்வு மற்றும் சிந்தனைக்கேற்ப அறிஞர்கள் இந்த மூன்று கருத்தையும் இப்படியும் அப்படியுமாக சரிகண்டாலும் கூட இரண்டாவது கூற்றான 10 லட்சத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகிறது. ஏனெனில் 18 லட்சத்தில் 8 லட்சம் திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன் தொகையாகி விடுவதால் அது அவருக்குரிய சொந்த பணமாக கருதப்பட வாய்ப்பில்லை. 'உங்கள் செல்வத்திற்கு' ஜகாத் கொடுங்கள் என்று இறைவன் கூறியுள்ளதால்(முந்தைய தொடர்கள்) சொந்த செல்வமே ஜகாத் சட்டத்திற்குள் அடங்கும். வங்கியில் கடன் படாத நிலையில் அவர் இருந்தால் இப்போது 10 லட்சம் என்பது அவரது சொந்த செல்வம். இதன் மீதே ஜகாத் விதியாகும். 'கடன் தொகைக்கு ஜகாத் இல்லை' என்பது இங்கும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்.

கையிருப்பு 10 லட்சம் இருக்கும் போது 2 லட்சத்திற்கு ஜகாத் கொடுத்தால் போதும் என்ற கூற்று எந்த அடிப்படையும் இல்லாமல் போய் விடுகிறது.

கடன் தொகையைப் பற்றி சுருக்கமாக சொல்வதாக இருந்தால்,
தம் சொந்த தேவையை முழுதும் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வசதியைப் பெறாதவர்கள் 'தேவைக்காக' கடன் பட்டால் அது லட்சங்களை கடந்தாலும் கடன் பட்டவர் மீது ஜகாத் கடமையாகாது.

தம் தேவைக்காக இல்லாமல் பிற நோக்கங்களுக்காக கடன்படுவோராக இருந்தால் அவர்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தப்பிக்க முடியாது.

இனி செல்வந்தர் ஒருவர் பிறருக்கு கடன் கொடுத்தால் அவர் கடன் கொடுத்த தொகைக்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டுமா... என்பதை பார்க்க வேண்டும்.

10 லட்சங்களுக்கு சொந்தக்காரரான ஒருவர் பிறரது கஷ்ட நிலையைப் போக்குவதற்காக 2 லட்சங்களை கடன் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் 10 லட்சத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது கடனாக வெளியில் நிற்கும் 2 லட்சம் போக மீதி 8 லட்சத்திற்கு ஜகாத் கொடுத்தால் போதுமா...

மொத்த தொகைக்கும் கொடுக்கத்தான் வேண்டும் என்பது சிலரது கருத்தாக இருந்தாலும் கடனாக கொடுத்தத் தொகை மீண்டும் கைகளுக்கு வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையாகாது என்பதற்கே ஆதாரம் கிடைக்கின்றது.

செல்வ நிலையிலிருந்து பிறருக்கு கடன் கொடுத்து உதவுபவர்களுக்கு இஸ்லாம் சில அறிவுரைகளை முன் வைக்கிறது.

(செல்வந்தர்களே உங்களிடம்) கடன் பெற்றவர் வசதியற்றவராக இருந்தால் அவருக்கு வசதி ஏற்படும் வரை (கடனை திருப்பிக் கொடு என்று அவசரப்படுத்தாமல்) பொறுத்திருங்கள். (அவரின் ஏழ்மை நிலைப் பற்றிய) உண்மையை நீங்கள் அறிந்தவர்கள் என்றால் (அந்த தொகையையே அவர்களுக்கு) தர்மமாக விட்டு கொடுத்து விடுங்கள் அதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும். (அல் குர்ஆன் 2:279)

செல்வ நிலையில் இருப்பவர்களிடம் இருக்க வேண்டிய பரந்த மனப்பான்மையையும், கடன் பட்டவர்கள் தாம் பெற்ற கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டிய அக்கறையையும் இறைவன் இந்த வசனத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளான்.

'வசதி வரும் வரை பொறுத்திருங்கள்' என்பது கடன் பட்டவர் கடனை திருப்பி அடைக்க வேண்டும், அதற்கான சூழ்நிலைகளை முயற்சித்து உருவாக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாகும்.

'விட்டு கொடுத்து விடுங்கள்' என்பது கடன் பட்டவரின் கஷ்ட நிலையை உணர்ந்து அன்பளிப்பாக விட்டு கொடுத்து விடுதலையும், அல்லது அந்த செல்வந்தர் கொடுக்க வேண்டிய தர்மமான ஜகாத் தொகையிலிருந்து அந்த கடனை கழித்துக் கொள்ளலாம் என்பதையும் உள்ளடக்கியதாகும்.

கடன் பட்டவர் அதை திருப்பி அடைக்க முடியாத கஷ்ட நிலையில் இருக்கிறார் என்பது தெரிய வரும் போது கடனை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்குள் அவரை தள்ளுவது முறையல்ல. கடன் பட்டவர் தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் அந்த கடனை திருப்பி அடைத்துத்தான் ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் போது பல விபரீதங்கள் நிகழ்கின்றன.

கடன் சுமையால் வீடு வாசலை விற்றுவிட்டு நடுத்தெருவுக்கு குடும்பம் வந்து விடுவது, குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொள்வது, கடனுக்கு பகரமாக குடும்பப் பெண்கள் கற்பை இழக்க நேரிடுவது போன்ற கொடூரங்கள் உலகில் நிகழ்கின்றன.

ஏழ்மையில் இருக்கும் ஒரு மனிதனின் நிலைக் கண்டு அவனுக்கு உதவி அவனை முன்னுக்கு கொண்டுவர வேண்டிய மன நிலையைப் பெற்றிருக்கும் மனித சமுதாயத்தின் பெரும் பகுதி அவனது ஏழ்மையையும், இயலாமையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதாபிமானமற்ற நிலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

இஸ்லாம் இதில் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதை மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.

பிறருக்கு கடன் கொடுத்தவர்கள் கடன் பட்டவரால் அதை திருப்பி அடைக்க முடியாத சூழ்நிலையை உணர்ந்தால் 'இறைவனுக்காக' அதை அவருக்கே விட்டு கொடுத்து விட வேண்டும்.

ஒரு மனிதர் மரணித்து அடக்கப்பட்டார். 'நீ என்ன நன்மையை சொல்லி (செய்து) விட்டு வந்தாய்?' என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கள் செய்து வந்தேன். மக்களிடம் கடன் தொகையை வசூல் செய்யும் விஷயத்தில் வசதியுள்ளவர்களுக்கு அவகாசமும், வசதியற்றவர்களின் கடனை மன்னித்து (தள்ளுபடி) செய்தும் வந்தேன்' என்றார். இறைவன் அவரை மன்னித்தான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஹூதைஃபா(ரலி) புகாரி 2391)

தொகை பெரிதாக இருக்கிறது அவ்வளவையும் விட்டு கொடுக்க முடியாது என்றால் - அது தனக்கு இழப்பை ஏற்படுத்தும் என்றால் - முடிந்த அளவு கடனை தள்ளுபடி செய்து மீதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதுவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் முஸ்லிம்களுக்கு போதிக்கப்பட்டப் பாடமாகும்.

எனது தந்தை கடன் பட்ட நிலையில் உஹது போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடனை கேட்டு கடுமைக் காட்டினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றிக் கூறினேன். அதற்கு நபி(ஸல்) கடன் கொடுத்தவர்களிடம் 'என் தோட்டத்து பேரித்த பழங்களை (கடனுக்கு பகரமாக கிடைப்பதைப்) பெற்றுக் கொண்டு மீதி கடனை தள்ளுபடி செய்துவிடுமாறு' கேட்டுக் கொண்டார்கள் என ஜாபிர் பின் அப்தல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 2395)

இந்த விவரத்தையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் இன்னொருவருக்கு கடன் கொடுக்கிறார் என்றால் அவர் மூன்று நிலைகளை கையாள வேண்டும்.

1) கடன் கொடுத்தவருக்கு அவகாசம் கொடுத்து கடன் தொகை திரும்ப கிடைக்கும் வரை பொறுத்திருத்தல்.

2) கடன் பட்டவரின் ஏழ்மை நிலையை உணரும் அதே வேளையில் முழு தொகையையும் விட்டு கொடுக்க முடியாத மன நிலை இருந்தால் கலந்து பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு மீதியை தள்ளுபடி செய்தல்.

3) கடன் தொகை முழுவதையும் இறைவன் பாதையில் அவருக்காக விட்டு கொடுத்து விடுதல்.

இந்த மூன்றில் ஒருவர் எதை தேர்ந்தெடுத்தாலும் அது அவரது விருப்பத்தை சார்ந்ததாகும். இப்போது பிரச்சனைக்கு வருவோம்.

ஒருவர் இன்னொருவருக்கு ஒரு பெரிய தொகையை கடன் கொடுக்கிறார் இப்போது கடன் கொடுத்த தொகைக்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டுமா என்றால் வழங்க வேண்டியதில்லை. ஏனெனில் கடனாக வெளியில் சென்ற தொகை மீண்டும் இவர் கைகளுக்கு வந்து சேருமா... என்பது இங்கு உறுதி படுத்தப்படாத நிலையில் உள்ளது.

அந்த தொகை திரும்ப கிடைக்காமலும் போகலாம் அல்லது அதிலிருந்து சிறிதளவு மட்டும் கிடைக்கலாம் என்ற நிலைகளெல்லாம் அதன் மீது இருக்கும் போது அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

எனவே கடனாக கொடுக்கபட்ட தொகை மீண்டும் தன்னிடம் வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையில் என்பதே சரியாகும். அந்த தொகை கையில் கிடைத்த பிறகு அதற்குறிய ஜகாத்தை கொடுத்தால் போதும்.

இன்னும் சொல்லப் போனால்,

ஒருவர் இரண்டு லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆண்டு இறுதியில் தன்னிடம் உள்ள சொத்துக்கு ஜகாத்தை கணக்கிடுகிறார். 25 ஆயிரம் ஜகாத் கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது கடனாக கொடுக்கப்பட்ட தொகை திரும்ப கிடைக்காது என்று உணர்ந்தால் இந்த 25 ஆயிரத்தை அந்த இரண்டு லட்சங்களிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

அதாவது கடன் பெற்றவருக்கு 25 ஆயிரத்தையும் ஜகாத் தொகையாக வழங்கிவிட்டதாக கூறி அவரிடமிருந்து வர வேண்டிய கடன் தொகையை 1 லட்சத்து 75 ஆயிரமாக ஆக்கிக் கொள்ளலாம். ஜகாத் தொகையைப் பெற தகுதி பெற்றவர்களில் கடனாளிகளும் அடங்குவர். அந்த அடிப்படையில் கடனாளிக்கே முழு ஜகாத் தொகையையும் வழங்கி அவரை கடன் சுமையிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்யலாம்.

இதில் எந்த நிலையை தேர்ந்தெடுத்தாலும் கடனாக வெளியில் உள்ள செல்வத்திற்கு ஜகாத் கடமையாகாது என்பது மட்டும் உறுதியானதாகும்.

அடுத்து தன் கைவசம் இல்லாத ஆங்காங்கே சேமிக்கப்படும் வைப்பு நிதிகளுக்கு ஜகாத் கடமையா... என்பதை பார்ப்போம்.

வைப்பு நிதிகளுக்கான ஜக்காத் - 5

கடன் பெற்றத் தொகை - கடன் கொடுத்தத் தொகை இவற்றிர்க்கு ஜகாத் உண்டா என்பதை  அலசினோம். சேமிப்பு நிதி - வைப்பு நிதிகளின் நிலவரம் என்ன என்பதையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சேமிப்பு நிதி

சேமிப்பு நிதி - வைப்பு நிதி என்பது பல வகையை சார்ந்ததாகும். ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார். அவர் தன் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பின் கொடுப்பதற்காக அரசு ஒரு தொகையை அரசு அவர் பெயரில் ஒரு தொகையை சேமித்து வருகிறது. இப்போது இந்த தொகையின் மீது ஜகாத் கடமையாகுமா...?

தனியார் நிறுவனங்களிலும் இதே முறை கையாளப்படுகிறது.

வெளி நாடுகளில் வேலை செய்பவர்களுக்காக அவர்கள் பணி புரியும் இடங்களில் வேலையிலிருந்து விடைப் பெற்று செல்லும் காலங்களில் அவர்களுக்குக் கொடுப்பதற்காக அவர்களின் மாத ஊதியத்தைப் பொருத்து ஒரு தொகை கணக்கில் இருக்கும். இத் தொகை அவர்கள் தன் வேலையை விட்டு விட்டு தாயகம் திரும்பும் போது அவர்களுக்குக் கிடைக்கும். இத்தகைய தொகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா..?

இது போன்ற வைப்பு நிதிகளைப் பொருத்தவரை அவற்றின் மீதுள்ள சில நிபந்தனைகளைப் பொருத்தே அவற்றிர்க்கு ஜகாத் கடமையாகுமா.. ஆகாதா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது.

அரசாங்கத்திடமோ அல்லது தனியார்களிடமோ வேலை செய்பவர்கள் பெயரில் சேமிக்கப்படும் வைப்பு நிதி என்பது அரசாங்கமோ அல்லது தனியாரோ அந்தத் தொகையை அன்பளிப்பாக அல்லது நன்கொடையாகக் கொடுக்கிறதா.. அல்லது அவரது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை பிடித்து அதை வழங்குகிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

அவை அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் அன்பளிப்பு - நன்கொடைப் போன்றவை கைக்கு வந்தப் பிறகே உரியவருக்குரிய பொருளாகும். கைக்கு வராதவரை அவற்றின் மீது உரியவர் எந்த உரிமையும் கோரமுடியாத நிலை இருப்பதால் அவற்றின் மீது ஜகாத் கடமையாகாது.

'நான் உங்களுக்கு ரூ10-000 அன்பளிப்பாக கொடுக்கப் போகிறேன்' என்று நான் ஒருவரிடம் கூறினால் அது ஒரு முன்னறிவிப்புத் தானே தவிர அந்தத் தொகை அவருக்கு கிடைத்து விட்டது என்று பொருளல்ல. இது போன்றுதான் நமது வேலைக்காக கிடைக்கும் அன்பளிப்புகளும் நன்கொடைகளும்.

நமக்கு கிடைக்கும் தொகை நமது ஊதியத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாகும் அந்தத் தொகைதான் நமது பணிகாலத்திற்கு பிறகு நமக்கு கிடைக்கும் என்றால் அதன் மீது ஜகாத் கடமையாகுமா..?

இங்கு சற்று ஆழமாக சிந்திக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். ஒருவரது ஊதியத்திலிருந்து அவரது எதிர்காலத்திற்காக அரசாலோ அல்லது தனியாராலோ ஒதுக்கப்படும் தொகை எவ்வித தங்கு தடையுமின்றி அவருக்கு கிடைத்து விடும் என்றால் இப்போது அந்தத் தொகை வங்கியில் சேமிக்கப்படும் தொகைக்கு ஒப்பாகி விடுகிறது. அதாவது தனது சொந்த பணத்தை வங்கியிலில்லாமல் பணி செய்யும் இடத்தில் அவர் சேமிக்கிறார். அதன் மீது முழு அதிகாரமும் அவருக்கு இருக்கிறது என்ற நிலை உள்ளதால் அந்த தொகையையும் மற்ற சொத்துக்களுடன் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.

ஆனால் தமது சொந்த பணம் பணி இடங்களில் 'தமது எதிர்கால நிதியாக' ஒதுக்கப்பட்டாலும் கடைசியில் அதை பெறுவதில் சிக்கல்கள் இருக்கிறது என்ற நிலை இருந்தால் (பல இடங்களில் இந் நிலை நீடிக்கவே செய்கின்றது. தேவையற்ற குற்றச்சாட்டுகள் - வழக்குகள் - தொகையில் மோசடி அல்லது கழிவு என்று பல பிரச்சனைகளை வேலை செய்யும் ஊழியர்கள் சந்திக்கத்தான் செய்கின்றார்கள். இதில் சில தனியார் கம்பெனிகளிடம் ஊழியர்கள் படும் அவதி மிக மோசமானது) இப்போது அந்தத் தொகைக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது நிலை உருவாவதால் பிரச்சனைகள் முடிந்து அந்தத் தொகை கைக்கு வரும் வரை அதன் மீது ஜகாத் கடமையாகாது.

வங்கியின் வைப்பு நிதி

வங்கியில் சேமிக்கப்படும் தொகை என்பது வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடனாகவே கருதப்படும். ஆனாலும் எந்நேரமும் அதை திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை இருப்பதால் அது அவரது கை வசம் இருக்கும் நிதிக்கு ஒப்பான நிலையையே பெறுகிறது. இந் நிலையில் வங்கி சேமிப்புகளுக்கு ஜகாத் கடமையா என்றப் பேச்சுக்கே இடமில்லை அவற்றிர்க்கு கணக்கிட்டு கட்டயாம் ஜகாத் கொடுத்தாக வேண்டும். (வங்கித் தொகைப் பற்றி மேலதிக விளக்கம் தேவைப்படின் அவற்றை வாசகர்கள் எழுதவும்)

பங்கு நிறுவனங்கள்

பங்கு வர்த்தகம் என்பது உலக அளவில் - குறிப்பாக இந்தியாவில் - கொடிகட்டிப் பறக்கும் சூழ்நிலையைப் பெற்றுள்ளது. இந் நிலையில் பங்கு வர்த்தக சந்தையில் முதலீடு செய்பவர்கள் - பங்கு பத்திரம் வைத்திருப்பவர்கள் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்களுக்கு சமமான அந்தஸ்த்தையே பெறுகிறார்கள். விரும்பும் நேரத்தில் பங்கை விற்க முடியாவிட்டாலும் அவர்கள் ரொக்கப் பணம் வைத்திருப்பவர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட முடியாது. வருமானம் வரும் சேமிப்பு நிதியாகவே பங்குப் பத்திரங்கள் கருதப்படும். எனவே ஜகாத்தை கணக்கிடும் தருணங்களில் பங்கு பத்திரத்தின் அன்றைய நிலவரத்தை மதிப்பிட்டு ஜகாத் வழங்கியாக வேண்டும்.

இதுவரை ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் என்னென்னவென்று பார்த்தோம். இனி எந்தெந்தப் பொருள்கள் மீது எந்த அளவிற்கு ஜகாத் கடமையாகும்? கால அளவுகள் என்ன? ஒட்டகம் - ஆடு - மாடு என்று வரும் ஹதீஸ்களையெல்லாம் எப்படிப் புரிந்துக் கொள்வது? இன்னபிற ஏராளமான தொழில் வளர்ச்சிக்குரிய ஜகாத் மதிப்பீடுகளை எப்படி வகுப்பது என்பதையெல்லாம் தொடராக தெரிந்துக் கொள்வோம் .

செல்வம் அனைத்தும் ஜக்காத்திற்குள் அடங்குமா..? 

ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளை இதுவரை விரிவாகக் கண்டோம். இனி நமக்கு சொந்தமான - சொந்தமாகக் கூடிய - எவற்றின் மீதெல்லாம் ஜகாத் கடமையாகும் என்பதை விரிவாக அறிந்துக் கொள்வோம்.

இந்தத் தலைப்பை நாம் விரிவாக அனுகுவதற்கு முதலாவது அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள குர்ஆன் வசனத்தை ஆழமாக மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (103)

'நபியே! இவர்களுடைய 'அம்வால்'களிலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக. நல்வழியில் அவர்களை முன்னேறச் செய்வீராக! அவர்களின் நலனுக்காக பிரார்த்தனையும் செய்வீராக! உம்முடைய பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு சாந்தியளிக்கும் (அல் குர்ஆன் 9:103)

أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

இறைவன் தன் அடியார்களின் மன்னிப்பை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், அவர்கள் செய்யும் தர்மங்களைப் பெற்றுக் கொள்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா..! (அல் குர்ஆன் 9:104)

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ

அவர்களின் 'அம்வால்'களில் வாய் திறந்து கேட்போருக்கும் வசதியில்லாதோருக்கும் உரிமையுண்டு (அல் குர்ஆன் 51:19)

இந்த வசனங்களில் 'அம்வால்' என்ற பதம் வந்துள்ளது. 'மால்' என்ற பதத்தின் பன்மையே அம்மால் என்ற பதமாகும். இந்தப் பதமும் இதன் துணைப் பதங்களுக்கும் குர்ஆனில் ஏறத்தாழ 76 இடங்களில் வந்துள்ளன.

எதன் மீதெல்லாம் ஜகாத் கடமையாகும் என்பதை விளங்குவதற்கு 'அம்வால்' என்றால் என்ன? என்பதை விளங்குவது அவசியமாகின்றது.

இந்த பதத்திற்கு தமிழில் 'செல்வம்' என்று அழகான வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும் செல்வம் என்றால் என்ன என்று கூடுதலாக விளங்க வேண்டியுள்ளது.

ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனது வாழ்வாதார தேவைக்காக கொடுக்கப்படும் அனைத்தும் செல்வம் தான். ஆனாலும் ஜகாத் கடமையாவதற்குறிய செல்வமாக இவை அனைத்தும் கருதப்படாது. ஜகாத் கடமையாக வேண்டுமானால் அந்த செல்வத்திற்கு சில நிபந்தனைகளும் அளவு கோல்களும் இருக்கின்றன.

செல்வங்களும் அதன் தன்மைகளும்!

அசையும் சொத்துக்கள்.

சொந்தமான கார், பஸ், (ரயில் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால்) கப்பல், விமானம், மற்றும் ஆடு - மாடு கோழிப் பண்ணைகள்.

அசையா சொத்துக்கள்.

சொந்த வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஹோட்டல்கள், சொந்தக் கடைகள், வாடகைக் கட்டிடங்கள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், சுரங்கங்கள்.

மற்றும்,

தங்கம், வெள்ளி, கரண்சி, விலைச்சல்கள், புதையல்கள் உட்பட அனைத்து உலோகப் பொருட்களும்!

இவை அனைத்தும் 'அம்வால்' (செல்வங்)களாகும். 'அம்வால்களிலிருந்து ஜகாத்தை எடுப்பீராக..' என்ற மேற்கண்ட வசன அடிப்படையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள (குறிப்பிடாமல் விடுபட்டுப்போன) அனைத்திலிருந்தும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று விளங்க வழி இருந்தாலும் இவற்றில் விதிவிலக்கு ஏதும் உண்டா... என்பதை காண்பது அவசியமாகும். ஏனெனில் இந்த வசனத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஜகாத்திலிருந்து ஏழைப் பணக்காரர் என்று ஒருவருமே விதிவிலக்குப் பெற மாட்டார். இன்னும் சொல்லப் போனால் ஏழையோ பணக்காரரோ இவர்கள் அனைவருமே கூடுதலாகவோ - குறைவாகவோ 'அம்வாலுக்கு' சொந்தக் காரரராகிறார்கள். தினக் கூலிக் கூட ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அது அவருக்கு வழங்கப்பட்ட அம்வாலாகும். அவர் அம்வாலுக்கு சொந்தக்காரராகிறார். மேற்கண்ட வசன அடிப்படையில் அவரும் ரூ 50க்கு ஜகாத் வழங்க வேண்டும். அதாவது மேற்கண்ட வசனத்தை மட்டுமே விளங்கி ஜகாத் கொடுப்பதாக இருந்தால் இந்த முடிவுக்குத் தான் வர முடியும். இந்த முடிவுக்கு யாராவது வந்தால் பிறகு அனைவர் மீதும் ஜகாத் கடமையாவதால் ஜகாத் பெறுவதற்கு உலகில் ஆளில்லாமல் போய் விடும்.

ஆனால்,

இறைவன் ஜகாத் பெற தகுதியானவர்களை பட்டியல் போட்டு காட்டுகிறான்.

ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

(ஜகாத் என்னும்) தானங்கள்

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 

தரித்திரர்களுக்கும்,
ஏழைகளுக்கும்,
தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,
இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,
அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,
கடன் பட்டிருப்பவர்களுக்கும்,
அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),
வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

இவர்களே ஜக்காத் பெற தகுதியுடையவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

 ஜகாத் பெறத் தகுதியானவர்கள் என்று ஒரு குழு இருக்கும் போதே அவர்களுக்கு எதிர்புறமாக ஜகாத் கொடுக்க தகுதியானவர்கள் என்று ஒரு சாரார் இருந்தாக வேண்டும். எனவே 'அம்வால்' என்பதை பொதுவாக விளங்கி அனைவர் மீதும் ஜகாத் கடமை என்ற முடிவுக்கு வந்து விட முடியாது.

9:103 வது வசனத்தில் 'அவர்களின் செல்வங்களிலிருந்து ஜகாத்தை எடுப்பீராக..' என்ற உத்திரவு வந்துள்ளது. 'ஜகாத்தை எடுப்பீராக' இந்த அதிகாரம் ஆட்சியாளருக்குத் தான் உண்டு. ஜகாத்தை எடுக்கும் தகுதிப் பெற்ற ஆட்சியாளர்கள் எந்த 'அம்வால்'களிலிருந்து ஜகாத்தைப் பெற வேண்டும் என்ற அறிவைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 'அம்வால்' என்பதை பொதுவாக எந்த ஆட்சியாளராவது விளங்கினால் - அந்த அடிப்படையில் ஜகாத்தை செயல்படுத்த முயன்றால் - அவர் குடிமக்கள் மீது அநீதி இழைத்து விடுவார்.

எனவே இறைவன் அம்வால்களில் விதிவிலக்கு அளித்துள்ளானா.. என்பதை பார்த்து அது இல்லாத மற்றவற்றின் மீதே ஜகாத் கடமையை நிர்ணயிக்க வேண்டும். இந்த பொதுவான கருத்தை மனதில் கொண்டு நாம் குர்ஆன் சுன்னாவை அலசினால் விதிவிலக்கும், ஜகாத் நிர்ணயமும், காலஅளவும் வேறுபட்டிருப்பதை கண்டுக் கொள்ளலாம்.

செல்வத்தில் ஜகாத்திலிருந்து விடுபடுபவை.

وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (219

(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)

இவ்வளவு இருந்தால் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லாமல் 'தேவைக்கு போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்' என்கிறான் இறைவன்.

'மீதமுள்ளதை' என்று இறைவன் கூறியதிலிருந்து ஒருவருடைய அம்வால் (செல்வம்) அவருடைய அவசியத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளங்கலாம்.

தேவைக்கு போக மீதமுள்ளதை என்றால் தேவையின் அளவு என்ன?

வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.

முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரிது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும் போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே.

வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தொலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.

தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.

'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)

மனிதர்களுக்கு மனிதர்கள் அவர்கள் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேவைகள் வித்தியாசப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் பிரயாணம் செய்யும் போது அரசு வாகனத்தையோ (பஸ் - ரயில் போன்றவை) தனியார் வாகனத்தையோ பிடித்து சென்று விடுகிறார்கள். தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று ஒரு சொந்த வாகனம் வேண்டும் என்ற மனநிலையோ அதற்கான முயற்சியோ அவர்களிடம் இருப்பதில்லை. (விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வாகனம் வாங்குவதற்குரி பொருளாதாரம் தன்னிடம் இருப்பினும் அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் (அரபு பிரதேசங்கள்) மற்றும் மேலை நாடுகளில் இந்நிலையை உங்களால் பார்க்க முடியாது. அங்கெல்லாம் குறைந்தது வீட்டுக்கு ஒரு வாகனமாவது வேண்டும் என்பது சராசரியான தேவைக்குள் வந்து விட்டது. குறைந்த வருவாயைப் பெறுபவர்கள் கூட தவணை முறையில் பணத்தை செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

பனிபடர்ந்த - ஐஸ் உரைந்த நிலையில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை வசதிக்கான தேவை என்பது மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. ஆடம்பரமான வீடுகள் ஆடம்பரமான வாகனங்கள் போன்றவற்றையெல்லாம் அந்த மக்கள் நாடுவதில்லை. மனம் விரும்பினாலும் சூழ்நிலை அவற்றையெல்லாம் அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

அதே போன்று கப்பல்களில் குடி இருக்கும் மக்களை எடுத்துக் கொள்வோம். (வாடகை கொடுத்து காலம் முழுவதும் கப்பலிலேயே தங்கி விடலாம் என்ற வசதிகள் இருக்கின்றன) இந்த மக்களின் தேவைகளும் குறைவு.

மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கான தேவைகளில் பெருத்த வேறுபாடு இருப்பதை இவற்றின் மூலம் விளங்கலாம்.

முஸ்லிமாக இருக்கும் நிலையில் நாகரீக வளர்ச்சியற்றுப் போன பகுதியில் வாழும் செல்வந்தர் கொடுக்க கடமைப்பட்ட ஜகாத் தொகையை விட அதேயளவு செல்வத்தைப் பெற்று நாகரீகம் வளர்ந்த இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அவரை விட குறைந்த அளவே ஜகாத் கொடுக்க வேண்டிவரும். காரணம் இவர்களுக்கு மத்தியில் உள்ள தேவைகளின் வித்தியாசங்களே!

எனவே முஸ்லிம்கள் தங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ளதில் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்தால் போதும்.

வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போடுகிறார் வீடு கட்டும் அளவு நிலமாக அது இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு அதில் வீடு கட்டப்படா விட்டாலும் அந்த நிலத்திற்கு ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது ஏனெனில் அது அத்தியாவசிய தேவைக்குறியதாகும். வீடு கட்டுவதற்கு இந்த அளவுதான் நிலம் இருக்க வேண்டும் என்ற விதிகள் எதுவுமில்லை. 60-40 என்றோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ கூட ஒருவர் வீடு கட்ட நிலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது வீடுகட்டும் அளவுக்குள்ளதாக இருக்க வேண்டும். 5 செண்ட் நிலத்தில் வீடு கட்டினால் போதும் என்ற நிலையை ஒருவர் உணர்ந்தால் அது மட்டும் தான் ஜகாதிலிருந்து விலக்கு பெறும்.

மாதம் ஒன்றிர்க்கு ரூ10-000 சம்பாதிக்கும் ஒருவர் வாடகை வீட்டில் இருக்கிறார். சொந்த வீடு கட்டுவதற்காக தன் சம்பளத்திலிருந்து ரூ-5000 ஒதுக்கி சேர்த்து வருகிறார். அது ஜகாத்திற்குறிய அளவை கடந்து செல்கின்றது - அதாவது லட்சங்களை கடக்கின்றது என்றால் இப்போதும் இவர் மீது ஜகாத் கடமையாகாது. காரணம் இவர் தன் தேவைக்குப் போக மீதமுள்ளதை சேமித்து வரவில்லை. தன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே சேமித்து வருகிறார்.

இறைவனை ஏமாற்ற முடியாது என்பதை முஸ்லிம்கள் உணர்வதும் - அறிவதும் கடமையாகும். இந்த அறிவைப் பெற்ற ஒரு முஸ்லிம் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தையும் காட்டி இது என் தேவைக்குறியதுதான் என்று சொல்ல மாட்டான். தேவைகளின் அளவை நிர்ணயித்துக் கொண்டு மீதமுள்ளதற்கு ஜகத்தை வழங்கியாக வேண்டும்.

இந்த சொந்தத் தேவை என்பது விளைச்சலில் பொருந்தாது அதாவது மிக சிறிய அளவில் நிலம் வைத்துள்ள ஒருவர் தன் குடும்பத்திற்காக அதில் பயிரிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 10 - 15 மூட்டை நெல்லை அவர் அறுவடை செய்கிறார் என்றால் 'இது ஒரு ஆண்டுக்கு என் குடும்பத்திற்காக உள்ளது எனவே இதற்கு ஜகாத் கொடுக்க முடியாது' என்று அவரால் சொல்ல முடியாது. ஏனெனில் விலைச்சல்களைப் பொருத்தவை அதன் அளவை விட 'அறுவடைநாளை' மட்டுமே இஸ்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۚ كُلُوا مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ۖ وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ 

படர்ந்துக் கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்களையும் பேரித்த மரங்களையும் மாறுபட்ட உணவு தானியங்களையும் மாதுளை ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அதற்குறிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 6:141)

'அறுவடை செய்யும் நாளில் அவற்றிர்க்குறியதை வழங்கி விடுங்கள்' என்று இறைவன் கூறுவதால் விளைச்சல்களைப் பொருத்தவரை 'தன் தேவைக்குப் போக மீதமுள்ளது' என்பது பொருந்தாது.

ஒருவர் தன் வீட்டு தோட்டத்தில் சிறிய அளவு குடும்பத்திற்காக தக்காளி - கத்தரிகாய் - பச்சை மிளகாய் போன்றதை பயிர் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது இவர் அதற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா... என்றால் 'இல்லை' என்று கூறிவிடலாம். எந்த அளவு விளைச்சல் இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவு படுத்தியுள்ளார்கள்.

ஐந்து 'வஸக்'கை விட குறைவான தானியத்திற்கு (விளைச்சலுக்கு) ஜகாத் இல்லை என்பது நபிமொழி. அபூஸயீத் - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவிக்கிறார்கள். (புகாரி - முஸ்லிம் - திர்மிதி 568)

இந்த செய்தியில் 'வஸக்' என்ற அளவு வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எந்த அளவைக் கொண்டது என்பதற்கான அடிக்குறிப்பையும் திர்மிதி அவர்கள் கொடுக்கிறார்கள்.

ஒரு 'வஸக்' என்பது அறுபது 'ஸாஃ'க்களைக் கொண்டதாகும். நபி(ஸல்) பயன்படுத்திய ஸாஃ என்பது ஐந்தே முக்கால் ராத்தல்களைக் கொண்டாகும் என்ற விபரத்தை கொடுக்கிறார். நம் பகுதிகளில் இந்த அளவைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். எனவே நாம் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டுமானால் ஒரு ஸாஃ என்பது நமது இரண்டுக் கைகளாளும் நான்கு முறை அள்ளி போடும் அளவைக் கொண்டதாகும்.ஏறத்தாழ ஒன்றரை லிட்டர் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வஸக் என்பது அறுபது ஸாஃக்கள் என்றால் தொண்ணூரு லிட்டர் வருகிறது. ஐந்து வஸக் என்றால் 450 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாகும். கிலோவில் சொல்வதாக இருந்தால் 400கிலோ என்று கொள்ளலாம்.

400 கிலோ எடைக் கொண்ட தானியங்களுக்கு குறைவாக விளைச்சல் இருந்தால் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று இந்த செய்தியிலிருந்து விளங்குகிறது. அதை கடக்கும் போது அவற்றின் மீது ஜகாத் கடமையாகும். 

ஜக்காத் சொத்திற்கா அல்லது வருமானத்திற்கா..? 

எவற்றின் மீதெல்லாம் ஜகாத் கடமை என்பதில் சொந்தத் தேவைக்குப் போக மீதமுள்ளதில் ஜகாத் கடமை என்பதை அறிந்தோம்;. சொந்தத் தேவை என்றால் என்ன என்பதையும் முந்தைய தொடரில் விளக்கியுள்ளோம். இப்போது 'மீதமுள்ளவை' என்றால் என்னென்ன..? என்பது பற்றி வரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும். 'மீதமுள்ளவை என்பவற்றின் மீது ஜகாத் கடமையாகும் என்பதால் அவற்றை அறிவதில் கூடுதல் கவனம் வேண்டும்.

மீதமுள்ளவைகள்.

வருமானம் வரும் வியாபாரத் தளங்களும், பொருள்களும்.

ஒரு முஸ்லிம் ஹலாலான வழியில் தமது வருவாயை எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக் கொள்ளலாம் இதில் இஸ்லாம் எந்தக் கட்டுப்பாடும் போடவில்லை. அந்த வகையில் நபி(ஸல்) காலத்தில் மக்கள் பலதரப்பட்ட வியாபாரத்தில் - பண்ணை பராமரிப்பில் ஈடுபட்டு பொருள் திரட்டியுள்ளார்கள். ஆனாலும் இன்றைய மற்றும் சென்ற நூற்றாண்டின் சந்தை மற்றும் தொழிற்புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவை மிக மிக சொற்பமே.! அதிகப்பட்சமாக அன்றைய காலத்தில் ஒட்டகப் பண்ணைகள் - ஆட்டுப் பண்ணைகள் - அபூர்வமாக மாட்டுப் பண்ணைகள் இருந்துள்ளன. ஜவுளி வியாபாரம் என்பது மிக சொற்ப அளவில் நடந்து வந்தது. அவை வசதி வாய்ப்பற்ற - வளர்ச்சியடையா காலப் பொழுதாகும். ஆனால் இன்றைக்கு நிலைமை எல்லைகளைக் கடந்துப் போய் விட்டது.

இன்றைக்குரிய வியாபாரம் மற்றும் தொழில் அனைத்தும் சர்வதேச எல்லைக்குட்பட்டே நடக்கின்றன. அந்த வகையில் பொருள் திரட்ட முனையும் ஒவ்வொரு முஸ்லிமும் சர்வதேச அங்கத்தினராகின்றனர். பரந்து விரிந்த - தொழில் மயமாக்கப்பட்ட உலகில் ஒரு முஸ்லிம் கால் பதிக்கும் போது அவன் தனது வளர்ச்சியில் மார்க்க மரபுகளை அவசியம் பின் பற்றியாக வேண்டும். பெரும் தொழில் வளம் மிக்க முஸ்லிம்கள் தங்கள் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் அளவிற்கு அந்தத் தொழிலின் மீதான இஸ்லாமிய வரியை(ஜகாத்தை) ப் பற்றி கண்டுக் கொள்ளாமலிருக்க முடியாது.

விவசாயம் பற்றி தனிச் சட்டம் உள்ளதால் விவசாயமல்லாத அனைத்துத் தொழில் மற்றும் வியாபாரத் தளங்களும் அதன் முதலீடுகளும் 'மீதமுள்ளவை'களில் வந்து விடும்.

தொழில் மற்றும் வியாபாரத் தளங்கள் ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்க முடியாது என்றாலும் பெரும் தொழில் - வர்த்தக வளங்களை ஓரளவு இங்கு சுட்டிக் காட்டலாம்.

கட்டிடங்கள்.

கடைகள் - ஹோட்டல்கள் - லாட்ஜ் - வீடுகள் என்று வருமானத்திற்கு வழி வகுக்கும் எந்த ஒரு கட்டிடமும் அதன் வருமானமும் உரிமையாளருக்கு 'மேலதிகமானவை' தான். அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுத்தாக வேண்டும்.

வாகனங்கள்.

லாரி - பஸ் - வேன் - டிராக்டர் - பெரும் டிரக்குகள் - கட்டர் பிள்ளர் போன்ற (மலைகளை உடைக்கும் பணிகளுக்கப் பயன்படுபவை) பெரும் இயந்திர வாகனங்கள். மற்றும் கார், இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் பைக் - சைக்கில் போன்றவை) தண்ணீரில் இயங்கும் கப்பல்கள் உட்பட விசைப் படகுகள் போன்ற அனைத்தும் அவை விற்பனைக்ககாக இருந்தாலும் சரி வாடகைக்கு செல்பவையாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் 'மேலதிகமானவை' என்பதில் வந்து விடும். அவற்றிற்கும் ஜக்காத் கொடுத்தாக வேண்டும்.

இயந்திரங்கள்.

அனைத்துவகை உதிரிப் பாகங்கள் உட்பட முழுமையான இயந்திர வகைகள் அனைத்தும் இதில் அடங்கி விடும். இவைகளும் அதன் உரிமையாளர்களைப் பொருத்தவரை மேலதிகமானவைகளே. இவைகளும் ஜகாத் கணக்கிற்குள் வந்து விடும்.

நிலங்கள்.

பயிரிடப்படாத விளைச்சல் நிலமாகட்டும், விற்பனைக்குரிய நிலங்களாகட்டும், சேமிப்பின் நோக்கத்தில் வாங்கிப் போடப்பட்டுள்ள நிலங்களாகட்டும் (தெளிவாக சொல்ல வேண்டுமானால் விளைச்சலுக்காக இல்லாத அனைத்து நிலங்களும்) இவை அனைத்தும் 'மேலதிகமானவை'களில் அடங்கி விடும்.

ஜவுளி.

உலகில் தட்டுப்பாடு இல்லாமல் நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் தொழில்களில் ஒன்று ஜவுளி. மேலதிக வருமானத்திற்காக பெருவாரியான செல்வந்தர்கள் இதில் முதலீடு செய்கிறார்கள். எனவே அவைகளும் ஜகாத் விதிக்குள் வரும்.

நகைகள்.

தங்கம், இவை நகை வடிவிலோ இதர எந்த வடிவிலிருந்தாலும் அதன் அளவை கடந்து விட்டால் (88 கிராம் என்பது அதற்குரிய அளவு) அவையும் மேலதிக சொத்தாக கருதப்பட்டு ஜகாத் விதியின் நிபந்தனைக்குள் அடங்கி விடும். நகைக் கடைக்காரர்கள் - ஆர்டர் பேரில் நகை செய்யும் தரகர்கள் இவர்கள் ஆர்டர் பேரிலுள்ள நகைகளை கழித்து விட்டு இதர சொந்த நகைகளை கணக்கு பார்த்தாக வேண்டும்.

வங்கி மற்றும் ஷேர்.

வங்கியில் தேவைக்குப் போக சேமிக்கப்படும் - பாதுகாக்கப்படும் தொகை அனைத்துமே 'மேலதிகமானவை' லிஸ்டில் இடம் பெற்று விடும். ஷேர் மார்க்கட்டில் முதலிடு செய்துள்ளத் தொகைகள் - பங்கு பத்திரங்கள் இதர வழிகளில் வந்து சேரும் பெரும் அன்பளிப்புகள் இவைகளும் 'மேலதிகமானவை'களாகி விடும்.

கோழிப் பண்ணைகள் - இரால் பண்ணைகள்.

ஆடு, மாடு, ஓட்டகப் பண்ணைகள் அதன் எண்ணிக்கைகள், அவற்றிற்கு கொடுக்க வேண்டிய ஜகாத் குறித்து தெளிவான ஆதாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி - தனியாக இருப்பதால் (அவற்றைப் பின்னர் விளக்குவோம்) அதுவல்லாத இதர அனைத்துப் பண்ணைகளும் பொதுவாக 'மேலதிகமானவை' என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு விடும். ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றின் மதிப்புக்கு ஜகாத் வழங்காமல் அதன் எண்ணிக்கையைப் பொருத்தே ஜகாத் தீர்மானிக்கப்படும். ஆனால் கோழி - இரால் போன்ற பண்ணைகளில் அவற்றின் எண்ணிக்கைகளைப் பொருத்து ஜகாத் தீர்மானிக்கப்படாது. அவற்றின் மொத்த மதிப்பே கருத்தில் எடுக்கப்படும். அந்த வகையில் 'மேலதிகமான' மொத்த சொத்துக்களாகவே இவை கருதப்பட வேண்டும்.

தேவைக்குப் போக மீதமுள்ளதை செலவிட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டதிலிருந்து மேலதிகமாக உள்ள இவை அனைத்தின் மீதும் ஜகாத் கடமையாகி விடும் என்பதை நாம் விளங்கலாம்.

வாடகை - வருமனாத்திற்கு ஜகாத்தா.. சொத்தின் மொத்த மதிப்பிற்கு ஜகாத்தா..?

கட்டிடங்களை வாடகைக்கு விட்டு பொருளீட்டும் ஒருவர் அதே போன்று வியாபாரத்தில் முதலீடு செய்து லாபமீட்டும் ஒருவர் இவர்கள் தங்கள் வருமானத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது வருமானம் உட்பட மொத்த சொத்தையும் மதிப்பிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா.. என்பதில் அறிஞர்கள் உலகில் கருத்த வேறுபாடு நிலவுகின்றது.

வாடகையாக வரும் பணத்திற்கும் வியாபாரத்தில் வரும் வருமானத்திற்கும் மட்டும் அவற்றை கணக்கிட்டு ஜகாத் கொடுத்தால் போதும் என்பது சிலரது வாதம். இதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம்:

விளைச்சலைப் பற்றிக் குறிப்பிடும் ஆதாரங்கள் விளைச்சலுக்குரிய ஜகாத்தை கொடுக்குமாறு தெளிவாகக் கூறுகின்றன. அந்த ஆதாரங்கள் விளைச்சல் ஏற்பட்ட நிலங்கள் பற்றியோ அதன் மதிப்புப் பற்றியோ பேசவில்லை. விளைச்சலுக்கு மட்டுமே ஜகாத் என்பதால் அதை தழுவி வருமானத்திற்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும்.

மழையினாலும், ஊற்றுகள் - நிலத்தடி நீர் ஆகியவைகளாலும் விளைபவற்றில் 10 சதவீதமும், தண்ணீர் பாய்ச்சி விளைக்கப்படுபவற்றில் 5 சதவீதமும் ஜகாத் கடமையாகும் என்று நபி(ஸல்) நடைமுறைப் படுத்தினார்கள். (இப்னு உமர் - அபூஹூரைரா போன்றோர் திர்மிதி 578-579 மற்றும் புகாரி - நஸயி அபூதாவூத்)

(5 வஸக் அதாவது ஏறத்தாழ 400 கிலோ எடை அளவுக்குக் குறைவான விளைச்சலுக்கு ஜகாத் இல்லை என்பதற்குரிய ஆதாரத்தை சென்ற தொடரில் குறிப்பிட்டுள்ளோம்)

விளைச்சலுக்கே ஜகாத் விளை நிலங்களுக்கல்ல என்ற இந்த ஹதீஸை காரணம் காட்டி வருமானத்திற்கு மட்டும் ஜகாத் என்ற வாதத்தை முன் வைப்பதை நம்மால் சரிகாண முடியவில்லை.

விளைச்சல், விளை நிலங்களுக்கும் வாடகை மற்றும் தொழில் வருமனாங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டிலிருந்தும் வரும் வருமானத்தை மட்டும் கருத்தில் எடுப்பது முறையல்ல. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. (அல் குர்ஆன் 2:267)

இங்கு வருமானத்தையும் - விளைச்சலையும் இறைவன் பிரித்துச் சொல்கிறான். இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த வசனம் அமைந்துள்ளது.

விளைச்சலைப் பொருத்தவரை அதன் அறுவடை நாளில் - அது பலன் தரும் நாளில் அதன் ஜகாத்தை வழங்கி விட வேண்டும். அது ஆண்டுக்கு ஒரு முறையோ - இருமுறையோ - பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறையோக் கூட இருக்கலாம். இதர சொத்துக்கு இந்த விதி இல்லை ஆண்டுக் கொருமுறை என்ற சட்டம் உள்ளது.

விளை நிலங்களில் விளைச்சலுக்குரிய காலகட்டங்களில் மட்டும் தான் பயிரிட முடியும். வாடகை இதர தொழில் வருமானங்கள் அப்படியல்ல. அவை தொடர்ச்சியாக பண புழக்கத்தையும் வருமானத்தையும் ஈட்டித் தரும் நிலையில் உள்ளதாகும்.

விளைச்சல்களைப் பொருத்தவரை அதன் லாப நஷ்டங்களை உரிமையாளர்களால் முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது. அறுவடையின் போதே அவை பற்றிய அறிவு சரியாக கிடைக்கும். ஆனால் வாடகை மற்றும் வியாபார பொருளின் மீதான லாபங்கள் அப்படிப்பட்டதல்ல. அதன் லாபத்தை முன் கூட்டியே அதன் உரிமையாளரால் தீர்மானிக்க முடியும். வீட்டுக்குரிய அடைமானம் இவ்வளவு, அதன் வாடகை இவ்வளவு என்றும் பொருளுக்கு இத்துனை சதவிகிதம் லாபம் வைத்து விற்க வேண்டும் என்றும் அதன் உரிமையாளர்களால் தீர்மானித்த விட - கணித்து விட முடியும்.

இப்படி ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும் போது 'இரண்டும் ஒன்றுதான்' என்று முடிவெடுப்பதில் எவ்வித நியாயமுமில்லை. எனவே விளைச்சல் - அறுவடையல்லாத மற்ற எல்லாவற்றிற்கும் வருமானம் மற்றும் சொத்தின் மொத்த மதிப்புக்கும் சேர்த்துதான் ஜகாத் கணக்கிடப் பட வேண்டும்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (103)

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து (பிறருக்குரிய)தர்மத்தை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக. (அல் குர்ஆன் 9:103)

இந்த வசனத்தில் செல்வத்தி(அம்வா)லிலிருந்து ஜகாத்தை எடுக்க வேண்டும் என்று இறைவன் கூறுகிறான். அம்வால் என்றால் என்ன என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். ஒருவனுக்கு வழங்கப்படும் அனைத்தும் அவனுக்குரிய செல்வம் தான். செல்வத்திலிருந்து ஜகாத்தை எடுக்க வேண்டும் என்று கூறுவதிலிருந்து முதலீடு - வருமானம் அனைத்தும் ஜகாத்திற்கு உட்பட்டு விடும்.

இந்த வசனத்தில் செல்வம் (அம்வால்) என்று குறிப்பிடும் இறைவன் விளைச்சலைப் பற்றிக் குறிப்பிடும் போது 'விளைச்சலுக்குக் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு சொல்லுவதால் விளைச்சலுக்குரிய நிலங்கள் ஜகாத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது என்பதை விளங்கலாம். விளைச்சல் - விளைச்சலுக்குரிய நிலங்கள் தவிர்த்து மீதி எல்லாமும் ஜகாத் வழங்க வேண்டிய அம்வால் என்ற பதத்தில் அடங்கி விடுகிறது.

'அவர்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தை எடுப்பீராக' என்ற சட்டம் பிறக்கப்பிக்கப்பட்டப் பிறகும் கூட நபி(ஸல்) விளை நிலங்களுக்குரிய ஜகாத் வழங்க வேண்டும் என்று சொன்னதாகவோ - அவற்றிற்கு ஜகாத் வசூல் செய்ததாகவோ நாமறிந்தவரை எந்த ஆதாரமும் இல்லை.

தேவையும் அதற்கெதிரான கருத்தோட்டமும்!

பில்லியன்கணக்காக பணம் முதலீடு செய்யப்படும் தொழில் மற்றும் வியாபார தளங்கள் இவைகளில் வருமானத்திற்கு மட்டும் ஜகாத் என்றால் நிலமை என்னவாகும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கட்டிடங்களை எடுத்துக் கொள்வோம்.

வாடகை - அடைமானம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பில்லியன்கணக்கில் கட்டிடங்களில் முதலீடு செய்யப்படுவதை நாம் பார்க்கிறோம். இவற்றில் வாடகை வருமானத்திற்கு மட்டும் தான் ஜகாத் என்றால் சந்தேகமின்றி லட்சக்கணக்கான - கோடிக்கணக்கான ரூபாய்கள் ஜகாத்திலிருந்து விடுபட்டு முடக்கப்பட்டு விடும்.

50லட்சம் பெருமானமுள்ள திருமண மண்டபத்தை ஒருவர் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 'உங்கள் கட்டிடத்திற்கு ஜகாத் தேவையில்லை அதில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான வாடகைகளைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஜகாத் கொடுத்தால் போதும்' என்ற தீர்ப்பை யாராவது முன் வைத்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

சீசன்களில் தொடராக அதிக வருமானத்தைப் பெரும் அவர் சீசன்களுக்கு பிறகு பல மாதங்கள் வருமானம் ஏதுமின்றி அல்லது குறைந்த வருமானத்தை பெரும் நிலையை அடைவார். அந்த மண்டபத்திலிருந்து சராசரியாக அவர் ஆண்டொன்றிற்கு 5 லட்சம் நிகர லாபத்தைப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவரது சொத்தின் மதிப்பு 55 லட்சங்களாகின்றன. இந் நிலையில் ஐந்து லட்சங்களுக்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும் என்று அவர் முடிவெடுத்தால் அவரிடம் அம்வாலாக இருக்கும் ஐம்பது லட்சத்திலிருந்து உரியவர்களுக்கு போய் சேர வேண்டிய தொகை வெளியேறாமல் போய் விடும். ஜகாத் எந்த நோக்கத்திற்காக நிருவப்பட்டதோ அது பாழ்பட்டுப் போகும்.

அதே 50 லட்சத் தொகையை முடக்கி ஒருவர் காம்ப்லக்ஸ் கட்டுகிறார். எதிர்பார்த்த அளவு வாடகைக்கு ஆள் கிடைக்காததால் பூட்டி வைத்துள்ளார் என்றால் அதிலிருந்து வருமானமே இல்லை என்பதால் அதற்குரிய ஜகாத்தும் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.

வாடகை வருமானத்திற்கு மட்டும் ஜகாத் போதும் என்பது ஜகாத்தின் பால் தேவையுள்ளவர்களை மேலும் தேவையின் பக்கம் தள்ளி வறுமையின் பிடிக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நிலை இயல்பாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

வருமானமற்ற நிலையில் சந்ததிகளுக்காக சொத்த சேர்க்கும் எண்ணத்தில் செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் பணங்களை முடக்கி ஆங்காங்கே நிலங்களை வாங்கிப் போட்டிருப்பார்கள். அதிலிருந்து எந்த வருமானமும் வராத நிலையில் அவற்றை பராமரிக்கவோ - பாதுகாக்கவோ அவர்கள் செலவு செய்யும் நிலையில் இருப்பார்கள். வருமானம் - வாடகை இருந்தால் மட்டும் ஜகாத் எனில் பல கோடிகள் பத்திரமாக ஜகாத்திலிருந்து தப்பிக் கொள்ளும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இரண்டு நோக்கங்களை கருத்தில் கொண்டே நாம் முடிவெடுக்க வேண்டும்.

1 - ஜகாத் கடமையாக்கப்பட்டதற்கான நோக்கம்.

எட்டு வகையினருக்கு ஜகாத் பிரிக்கப்பட வேண்டும் என்கிறது குர்ஆன். அவர்களில் அதிகப்படியாக நம்மை சுற்றி வாழ்பவர்கள் மூன்று வகையினர். பரம ஏழைகள். ஏழைகள். கடன்காரர்கள். (ஜகாத் பெறுபவர்கள் பற்றி பின்னர் விரிவான விளக்கம் வரும்) இவர்களின் தேவைகள் பூர்த்தியாவதற்கு ஜகாத் தொகையையும் கடந்து இன்னும் கூடுதலாக பொருளாதாரம் தேவைப்படும் நிலை இருக்கும் போது முறையாக வெளியேற வேண்டிய ஜகாத் தொகையையும் குறைப்பது (அதாவது லாபத்திற்கு மட்டும் ஜகாத் என்பது) ஜகாத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்து விடும்.

2 - ஜகாத் பற்றி கூறும் இறைவன் லாபம் பற்றியெல்லாம் பேசாமல் 'அம்வால் - செல்வ'த்திலிருந்து ஜகாத் எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது.

இந்த இரண்டையும் சிந்தித்தால் 'மேலதிகமாக உள்ள' செல்வம் அனைத்தின் மீதும் ஜகாத் கடமையாகும் அவற்றிற்கான ஜகாத்தை பிரித்தெடுத்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.

ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பனம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.

முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக! ஆமீன்!!.


Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!