இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.
அண்மையில் ஒரு காலம் வரும். அப்போது மக்கள் கலாஞான வேட்கையால் உந்தப்பட்டுத் தங்கள் ஒட்டகங்களை(ப்பல திசைகளிலும்) ஓட்டுவார்கள். எனவே, (அப்போது அவர்களுக்கு) மதீனாவின் ஒரு கலாஞானியை விட வேறு யாரும் பெரிய மேதையாக கிடைக்க மாட்டார்கள் என்று எம்பெருமானார் அருளியுள்ளதாக ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஹதீதில் குறிப்பிட்டபடி மதீனாவின் கலாஞானி இமாம் மாலிக் அவர்களே என்பது உலமாக்களின் கருத்தாகும்.
இமாம் அவர்களின் குடும்பம் யமன் பகுதியில் வாழ்ந்தவர்கள். இஸ்லாம் தோன்றிய பின்னர் மதீனாவில் வந்து குடியேறினர். முழுக்க முழுக்க அரபி மரபைச் சார்ந்தவர்கள்.
தோற்றப் பொலிவு:
உயரமான உருவமும், சிகப்பும் வெண்மையும் கலந்த நிறமும், அகன்ற நெற்றியும், பெரிய கண்களும், எடுப்பான மூக்கும் உடையவர்கள். அவர்களுடைய தாடி நீண்டிருந்தது. அளவோடு வளர்த்த மீசையிருந்தது. தலைமுடி குறைவாகவே இருந்தது.
விலையுயர்ந்த ஆடைகளையே அணிவார்கள். உயர்தரமான அத்தர்களையும் அதிகமாக பூசிக் கொள்வார்கள். அவர்கள் நீண்ட குஞ்சம் விட்டு தலைப்பாகை கட்டுவார்கள். அந்த குஞ்சத்தை வலப்பக்கம் அல்லது இடப்பக்கத் தோள் மீது தூக்கிப் போட்டுக் கொள்வார்கள். தைலஸான் என்ற விலை உயர்ந்த சால்வையையும் அவர்கள் மேலே போர்த்துக் கொள்வதுண்டு.அவர்களின் விரலில் இருந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்லில் ‘வநிஃமல் வகீல்‘ என்ற எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வமிசவழி:
ஹிஜ்ரி 93 ல் தமாஸ்கஸில் உமைய்யா கலீபா வலீத் பின் அப்துல் மலிக் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது இமாம் அவர்கள் மதீனாவில் பிறந்தார்கள்.
மாலிக் பின் அனஸ் பின் மாலிக் அபீ ஆமீர் பின் அம்ரு பின் ஹாரிஸ் பின் சீமான் பின் குதைல் பின் அம்ரு பின் அல் ஹாரிதுல் அஸ்பாஹி.
இமாம் அவர்களின் தந்தையின் பாட்டனாரான அபூ ஆமீர் ஹிஜ்ரி இரண்டில் இஸ்லாத்தை தழுவியவராவார்கள். ‘ஹிம்யர்‘ என்ற உயர் வகுப்பை சார்ந்தவர்கள். பிரபல சஹாபியான ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் வீட்டையே விலைக்கு வாங்கி, அதில் வாழும் பாக்கியத்தை பெற்றார்கள்.
கல்வி:
அக்காலத்தில் கல்வியின் கலைஞான பீடமாகத் திகழ்ந்த மதீனாவில் இமாம் அவர்களின் கல்வி திறம்பட பெற்று ‘இமாம் தாருல் ஹிஜ்ரத்‘ என்ற பட்டப் பெயரையும் பெற்றார்கள்.
தங்களது பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகிய அனைவருமே ஒப்பற்ற முஹத்திஸாக இருந்ததால் தொடக்கத்தில் அவர்களிடமே கல்வி கற்றார்கள். திருக்குர்ஆனை காரீ அபூ ரதீம் நாபிய்யிய்யி அவர்களிடமும், ஹதீதுகளை ஷிஹாபுத்தீன் ஜஹ்ரி, ஜஃபருஸ் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மது பின் யஹ்யா, அபூ ஹாஜிம், யஹ்யா பின் சயீத் போன்ற பெரியார்களிடமும் பாடம் கேட்டார்கள். பிக்ஹு பாடங்களை ராபிஅத்துர் ரை அவர்களிடமும் கற்றுள்ளார்கள்.
தீர்ப்புகள் வழங்க சுமார் 66 பெரியார்களிடம் அனுமதி பத்திரம் பெற்றுள்ளதாக அவர்களே தெரிவிக்கிறார்கள். மிகவும் இளம் வயதிலேயே (30-35) கலாஞான போதனை செய்யவும், மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் தொடங்கி விட்டார்கள்.
இமாம் அவர்கள் ஹதீது, பிக்ஹு பாட போதனையளிப்பதற்கென்றே ஒரு மன்றத்தை நிறுவிக் கொண்டார்கள். உலகப் புகழ் பெற்றுவிட்ட இந்த மன்றத்திற்கு பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் வரலாயினர்.ஹஜ்ஜு காலங்களில் கணக்கற்றவர்கள் அவர்களுடைய ஹதீது வகுப்புகளில் வந்து அமர்ந்து பாடம் கேட்பர்.
இந்த கலைஞான மன்றம் எப்போதும் பரிசுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதில் உயர்தர விரிப்புகள் விரிக்கப்பட்டு இருக்கும். மன்றத்தின் நடுவே இமாம் அவர்கள் அமர்வதற்கான ஆசனம் அமைக்கப்பட்டிருக்கும். சுற்றிலும் மாணவர்களும், பிரமுகர்களும் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டு, விசிறிகள் கூட வைக்கப்பட்டிருக்கும். வாசனைப்புகை மணக்கும். பாடம் ஆரம்பமாகும் முன் மாணவர்கள் ஒலுவுடன் வந்து அமர்வர்.பாடம் நடத்த வரும் இமாம் அவர்கள் குளித்துவிட்டு தூய ஆடை உடுத்தி தலையையும், தாடியையும் சீப்பினால் வாரிக் கொண்டு தலைப்பாகை அணிந்துமு அத்தர் போன்ற வாசனையை அதிகமாக பூசிக் கொண்டு தங்கள் ஆசனத்தில் அமர்வார்கள்.இமாம் அவர்கள் ஆசனத்தில் அமரும் போது யாவரும் பணிவுடன் தங்கள் தலையை தொங்கப் போட்டுக் கொள்வார்கள். நபிபெருமானாரைப் பற்றி பேசும் போது அவர்களின் நிறம் மாறி, உடல் ஒடுங்கும்.
ஹதீது பாடம் நடத்தும் போது சபையில் யாரேனும் இரைந்து பேசினால் கூட அவர்களால் தாங்க முடியாது. உடனே அவர்களை நோக்கி ‘விசுவாசிகளே! உங்கள் சப்தத்தை உங்கள் நபியுடைய சப்தத்துக்கும் மேலாக உயர்த்தாதீர்கள்‘ என்ற கருத்துள்ள ஆயத்தை ஓதிக் காட்டுவார்கள். அதாவது நபி பெருமானாரின் திருமொழிகளைப் பற்றிய விளக்கம் கொடுக்கும் போது, தன் சப்தத்தை உயர்த்துபவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் தன் சப்தத்தை உயர்த்தியவனாவான் என்பது அதன் விளக்கமாகும் என்று கூறுவார்கள்.
அரசாங்கமும் இமாமும்:
இமாம் மாலிக் அவர்கள் பல கலீபாக்களின் ஆட்சியைக் கண்டவர்கள். உமைய்யாக்கள், அப்பாஸியாக்கள் என்ற இரண்டு பரம்பரையினரின் ஆட்சியாளர்களிலும் பலர் ஆளுவதை அவர்கள் கண்டார்கள்.
ஹிஜ்ரி 136 ல் அபூ ஜஃபருல் மன்சூர் கலீபாவாகியதும் சாதாத்துக்கள் ஒன்றுகூடி இமாம் ஹஸனின் வமிசவழியைச் சார்ந்த முஹம்மது (நப்ஸுல் ஜக்கிய்யா)வை கலீபாவாக பிரகடனம் செய்தபோது, இவரும் பிரசன்னமாயிருந்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்தார். பின்னர் தன்னுடைய தமையனார் கிலாபத்தை கைப்பற்றவே தான் கொடுத்த விசுவாசப் பிரமாணத்தை மறந்து விட்டார். நப்ஸுல் ஜக்கிய்யா இவருக்கு எதிராக மக்காவில் கலகக் கொடி உயர்த்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். இவரை அடக்க மன்சூர் மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது.
அச்சமயம் மன்சூர் நப்ஸுல் ஜக்கிய்யாவையும், அவரது சகோதரர் இப்றாஹீமையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி இமாம் மாலிக் கடிதம் எழுதினார். இமாம் அவர்கள் மன்சூர் முன்பு செய்த வாக்குறுதிக்கு மாற்றமாக செயல்படுவதால் அதற்கு இணங்க மறுத்து விட்டார்கள். கிலாபத் உண்மையில் நப்ஸுல் ஜக்கிய்யாவிற்கே உரித்தானது. எனவே அவரிடம் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுக்கலாம் என்று தங்கள் அபிப்பிராயத்தையும் பிரகடனப்படுத்தினர்.
இதுகேட்ட மதீனாவாசிகள் ஒன்றுதிரண்டு இமாம் அவர்களிடம் வந்து, ‘நாங்கள் மன்சூரிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து விட்டோமே, இப்போது என்ன செய்வது? என்று வினவினர். அதற்கு இமாம் அவர்கள் ‘மன்சூர் உங்களிடம் பலவந்தமாகப் பிரமாணம் வாங்கியிருக்கிறார். இவ்வாறு கட்டாயப்படுத்தி வாங்கப்படும் பிரமாணம் செல்லாது என்று கூறி அதற்கு ஆதாரமாக ‘வற்புறுத்தி வாங்கப்படும் தலாக் செல்லாது‘ என்ற ஹதீதையும் சுட்டிக் காட்டினார்கள். எனவே மதீனாவாசிகள் முழுமனதுடன் நப்ஸுல் ஜக்கிய்யாவை ஆதரித்து நின்றனர். ஆனால் கலீபா மன்சூர் அனுப்பிய பெரும்படை நப்ஸுல் ஜக்கிய்யாவையும், அவரது சகோதரரையும் கொன்று விட்டது.
இதன்பின் மன்சூர் ஜஃபர் என்பவரை மதீனாவில் தன் பிரதிநிதியாக நியமித்து, இமாம் மாலிக் போன்றோரை கண்காணித்து வரும்படி சொல்லியிருந்தார். மாலிக் இமாமை கண்டு, வற்புறுத்தி வாங்கப்படும் தலாக் செல்லாது என்ற உங்கள் தீர்ப்பை மாற்றிஅ து செல்லும் என்று தீர்ப்பு கொடுங்கள்‘ என்று வற்புறுத்தினார். இமாம் அவர்கள் அதற்கு இணங்க மறுத்துவிட்டார்கள். ஹதீதுக்கு மாற்றமாக தீர்ப்பளிக்க முடியாது என்றும் கூறி விட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஜஃபர் இமாமுக்கு எழுபது கசையடிகள் கொடுக்க உத்திரவிட்டு நிறைவேற்றப்பட்டது. இது ஹிஜ்ரி 147ல் நடைபெற்றது.
முஸ்லிம்களின் மார்க்க வழிகாட்டியாக விளங்கக் கூடிய ஹதீது-பிக்ஹு நூல் ஒன்றை ஆக்கித் தரும்படி கலீபா மன்சூர் இமாம் அவர்களிடம் கேட்டதற்கிணங்க, இமாம் அவர்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு எழுதிய நூல்தான் உலகப் புகழ் பெற்ற ‘கிதாபுல் முஅத்தா‘ ஆகும். இமாம் அவர்கள் கலைஞ hன போதமளித்த தளமாக விளங்கியது ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வசித்த இல்லமாகும்.
கலீபா மன்சூரின் மறைவிற்குப் பின் அவரது மகன் மஹ்தி கலீபாவானதும் ஹஜ்ஜுக்கு வருகை தந்தபோது, மதீனா எல்லையில் இமாம் அவர்கள் அவரை வரவேற்றனர். அச்சமயம் மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. இதை கலீபா அவர்களுக்கு அவர்கள் உணர்த்தி அதற்குரிய உதவியை பெற்றுத் தந்தனர். பின்னர் கலீபா பக்தாத் வருமாறு கோரிய அழைப்பை நிராகரித்து, ‘அவர்கள் மட்டும் மெய்யாகவே தெரிந்து கொண்டிருப்பார்களேயானால் மதீனாவே அவர்களுக்கு சிறந்த புண்ணிய பூமியாகும்‘ என்ற ஹதீதை ஓதிக் காட்டினார்கள்.
இதைக் கேள்வியுற்ற கலீபா அவர்கள் தமது சபைக்கு அழைத்து வர உயர் ஜாதிக் குதிரை ஒன்றையும் அனுப்பினார். ‘நான் மதீனாவில் எங்கும் வாகனத்தில் ஏறிப் போக மாட்டேன். ஏனெனில் இதே தெருக்களில்தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால்நடையாக நடந்து சென்றுள்ளார்கள்‘ என்று பதிலளித்து மறுத்துவிட்டார்கள். பின்னர் கலீபா மஹ்தி இவர்களின் கலைஞான வகுப்பில் வந்து அமர்ந்து பாடம் கேட்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.
ஹிஜ்ரி 170 ல் கலீபாவாக ஹாரூன் ரஷீத் பதவியேற்றதும் இமாம் அவர்களை பூர்த்தி செய்யப்பட்ட முஅத்தா கிதாபை தமது சபையில் விளக்கமளிக்க வேண்டுகோள் விடுத்தார். அது கேட்ட இமாம் அவர்கள் ‘மனிதர்கள்தான் கல்வி ஞானத்தை தேடி வரவேண்டுமே தவிர கல்வி ஞானம் மனிதர்களைத் தேடி போகாது‘ என்று கூறிவிட்டார்கள். அப்படியாயின் தம் சபைக்கு வந்தாவது ஆக வேண்டும் என்ற வேண்டுகோளின்படி இமாம் அவர்கள் அவருடைய சபைக்குப் போனார்கள்.
இமாம் அவர்களின் கலாஞான சபைக்கு சென்று கலீபா பாடம் கேட்க விரும்பி அதன்படி சென்றார். மேலும் ஹஜ்ஜு காலங்களில் வருகை தந்திருந்த உலமாக்களுக்கும் முஅத்தா கிதாபை பாடம் எடுக்கச் செய்தார். உலமாக்கள் எவ்வித மறுப்புமின்றி இமாம் அவர்களின் பாடபோதனையை கேட்பதைக் கண்டு, முஅத்தாவின் பெருமையை கண்ட ஹாரூன் ரஷீது அதையே சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களும் பின்பற்றும் ஷரீஅத் சட்ட நூலாக ஆக்க விரும்பினார். ஆனால் இமாம் அவர்கள் அதை விரும்பவில்லை.
மறைவு:
இமாம் அவர்கள் தங்கள் எண்பத்தி ஆறாம் வயதில் ஹிஜ்ரி 179 ரபீயுல் அவ்வல் மாதம் பதினான்காம் நாள் அதிகாலை வேளையில் இவ்வுலகை விட்டு மறைந்து இறைவனை சந்திக்க சென்றார்கள். சுமார் 56 ஆண்டுகள் இமாம் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை செய்தார்கள். இமாம் அவர்களின் கடைசிகாலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்களின் நெருங்கிய மாணவரான மஈன் பின் ஈஸா என்பவராவார். இமாம் அவர்களின் பூத உடல் ஜன்னத்துல் பகீஃ எனும் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபட்டது.
அன்றாட அலுவல்கள்:
காலையில் சுப்ஹுத் தொழுதபின் சூரியோதயம் வரை பல வழீபாக்களையும், ஒளராதுகளையும் ஓதிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெளியில் வந்ததும் அவர்களை பலர் காண வருவார்கள். சிறிது நேரம் அவர்களுடைய சுக நலன்களை விசாரித்து அளவளாவுவார்கள். பின்னர் கலாஞான வகுப்பு நடத்த விரைவார்கள். இமாம் அவர்கள் கூறும் ஹதீதுகளை எழுதி வைக்கும் பணியை இப்னு ஹபீப் செய்து வந்தார். சபையில் எழுந்து நின்று படிக்கும் பணியை பெரும்பாலும் மஅன் பின் ஈஸா, யஹ்யா பின் ஸலாம் ஆகிய இருவரும் செய்து வந்தனர். இரவில் பெரும்பகுதியை இமாம் அவர்கள் வணக்கத்திலேயே கழிப்பார்கள். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இபாதத்திலேயே மூழ்கிவிடுவார்கள்.
விருந்தினர்கள் வந்தால் விருந்தினருக்கு விசேசமான உணவு வகைகளை தயாரித்து வைத்து தங்கள் கையாலேயே பரிமாறி உபசரிப்பார்கள். இமாம் அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி இமாம் ஷாபிஈ அவர்கள் மிகவும் பெரிதும் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
மிகவும் கொடை வள்ளலாகவும் திகழ்ந்துள்ளார்கள். ஹஜ்ஜுக்கு வரும் ஆட்சியாளர்கள், பிரபுக்கள் இமாம் அவர்களுக்கு பெருந்தொகை அன்பளிப்பாக கொடுப்பதுண்டு. அவைகளை உடனே உலமாக்களுக்கும், ஏழைகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள். ஒருசமயம் அவர்களுடைய லாயத்தில் நின்ற குதிரையொன்றின் சிறப்பைப் பற்றி இமாம் ஷாபி, இமாம் அவர்களிடம் புகழ்ந்து பேசியபோது அக்குதிரையை அன்னவர்களுக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். தங்களுடைய மாணவர்கள் பலருக்குக் கூட அவர்கள் ஆண்டு தோறும் உதவித் தொகை அனுப்பி வந்துள்ளார்கள்.
தம்மை கசையடி அடிக்க உத்தரவிட்டு, ஒட்டகத்தின் மீது ஏற்றி ஊர் சுற்ற வைத்த ஜஃபரையே இமாம் அவர்கள் மன்னித்து விட்டார்கள்.
கற்றோரையும், சான்றோரையும் மதித்தார்கள். இமாம் அபூ ஹனீபா அவர்கள் இமாம் அவர்களின் சபைக்கு வந்த போது, தாங்கள் மேலே போர்த்தியிருந்த ‘தைலஸா‘ என்ற விலை உயர்ந்த போர்வையை எடுத்து கீழே விரித்து அதன் மீது அவர்களை அமரச் செய்து மரியாதை காட்டினார்கள்.இது போன்றே இமாம் சுப்யானுத் தௌரீ அவர்களுக்கும் செய்தார்கள்.
தம்மிடம் வரும் பிரச்சனைகளுக்கு இலகுவில் தீர்ப்பளித்து விடாமல், ‘இது அவ்வளவாக எனக்குத் தெரியாதே!; என்றும் தங்களை விட பெரியவர் யாராவது தீர்ப்பளிக்கட்டும் என்றும் மிகப் பணிவுடன் நடந்து கொள்வார்கள்.
நூல்கள்:
இமாம் அவர்கள் முஅத்தா தவிர ரிஸாலா மாலிகி, இலர் ரஷீது, அஹ்காமுல் குர்ஆன், அல் முதவ்வனா, கிதாபுல் மனாஸிக், தப்ஸீர் கரீபுல் குர்ஆன், கிதாபுல் மஸாயில் போன்ற நூற்களையும் எழுதியுள்ளார்கள்.
மதீனாவிலுள்ள மார்க்க நடைமுறைப் படியும், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லலம் அவர்களின் ஹதீது ஆதாரத்தின் மீதும் முஸ்லிம்களின் ஷரீஅத் நடை முறைகளைத் தொகுத்து எழுதிய இமாம் அவர்கள் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாம் அவர்கள் கனவில் தோன்றி, ‘இதை மனிதர்களுக்கு மிருதுவான பாதையாக ஆக்கும்‘ என்று கூறினார்களாம். எனவே இந்த நூலுக்கு திருக்குர்ஆன், ஹதீதோடு இணைந்த (ஒற்றுமையான) நூல் என்ற பொருளில் ‘முஅத்தா‘ என்று பெயர் வைக்கப்பட்டது.இது ஒரே சமயத்தில் ஹதீது கிரந்தமாகவும், பிக்ஹு கிரந்தமாகவும் விளங்கும் சிறப்பை பெற்றிருக்கிறது.
நபிபெருமானாரிடம் அன்பு:
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இமாம் மாலிக் மிகுந்த பயபக்தியுடையவர்களாக இருந்தார்கள். பெருமானாரின் பெயரை உச்சரிக்கும் போது கூட அவர்கள் குரல் கம்மும். மஸ்ஜித் நபவியில் ‘ரௌலா அன்வர்‘ என்ற அறையுண்டு.அதில் அமர்ந்து கொண்டு யாரும் இரைந்து பேசுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் பெருமானாரையே அவமதிப்பதாகும் என்று சொல்வதுண்டு.
அவர்களிடம் எண்ணற்ற குதிரைகளும், கோவேறு கழுதைகளும் இருந்தும் பெருமானாரின் திருப்பாதம் பட்ட அந்தப் புனித நகருக்குள் எந்த வாகனத்தின் மீதும் அவர்கள் சவாரி செய்து போனதே கிடையாது. நபி பெருமானாரின் ஹதீதுகளை தகாத இடங்களிலோ, அவசர அவசரமாகவோ, இரைச்சல் போட்டோ, நடந்து கொண்டோ பாடம் நடத்த மாட்டார்கள். நபி பெருமானாரை அடிக்கடி தங்கள் கனவில் கண்டு வந்துள்ளார்கள்.
இதுபோன்றே ஹஜ்ஜைத் தவிர மதீனாவை விட்டு எங்கும் போனதே இல்லை.
அன்னவர்களின் பெயரால் இலங்கும் மாலிக் மத்ஹப் உலகின் நாலா பக்கத்திலும் பரவி தீன் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment