மத்ஹபிற்குரிய நான்கு முத்துக்களின் சரித்திர சுருக்கம்.

இமாம் அபூஹனீபா.ரலியல்லாஹ அன்ஹு

பிக்ஹின் ஆரம்பம்:

ஹதீதுகளின் அடிப்படையில் தனி மனிதனுடையவும், சமுதாயத்துடையவும் நெறிமறைக்கான மார்க்கத்தின் ஏவல்,விலக்கல்களையும் அவற்றின் தன்மைகளையும் விளக்கித் தீர்ப்புகள் நல்கியவர்கள் ஃபகீஹுகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

நபிபெருமானார் காலத்தில் ஷரீஅத்தின் ஏவல் விலக்கல்களுக்கு ஃபர்ளு, வாஜிபு, சுன்னத்து என்ற பலவகையான பெயர்கள் வைக்கப்படவில்லை. நபிபெருமானார் ஒளுச் செய்ததைப் பார்த்து ஸஹாபாக்களும் ஒளுச் செய்து கொண்டனர். தொழுகையிலும் இவ்வாறுதான் நடந்தது.

எப்பொழுதாவது ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தால் மட்டும் அது சம்பந்தமாக ஸஹாபாக்கள் நபி பெருமானாரிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளனர். வேறு சில சமயங்களில் மக்களே ஏதேனும் ஒரு காரியத்தை செய்யும்போது அது சரியாயின் நபிகளார் அதை ஆமோதித்தும், அவசியமில்லாததாயின் அதிருப்தியை வெளிப்படுத்தியும் வந்துள்ளனர். இத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் கூட்டமாக இருந்த இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாத்துக்கு வெற்றிமேல் வெற்றி கிட்டி வந்ததால் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்குள்ளான நிலப்பரப்பும் அதிகமாகி விட்டது. இந்நிலையில் புதிது புதிதான பல நிகழ்ச்சிகள் நடக்கலாயின. அவற்றைப் பற்றித் தீர்ப்பளிக்க ‘இஜ்திஹாத்‘ (திருக்குர்ஆன், ஹதீதிலிருந்து மஸ்அலாக்களைக் பிரித்தெடுத்தல்) தேவைப்பட்டது.

அத்துடன் மறைமுகமாக கூறப்பட்டுள்ள ஏவல், விலக்கல்களுக்கு விளக்கம் காண வேண்டியிருந்தது.

இந்நிலையில் எத்தனையோ விஷயங்களில் சஹாபாக்களின் ஒருமுக முடிவு என்று எதுவுமில்லாமல் இருந்தது. தீர்ப்புகளில் பல அபிப்பிராயங்கள் வெளியாயின. சிற்சில விசயங்களில்தான் ஒருமுகமான முடிவு உண்டாயிருந்தது.

நபிபெருமானாரின் காலத்தில் உண்டாயிராத பின்னர் உண்டான நிகழ்ச்சிகள் பலவற்றை எடைபோட திருக்குர்ஆன், ஹதீது அடிப்படையில் சுயமுடிவும், அனுமானமும் தேவைப்பட்டன.இதனால் மஸ்அலாக்களையும், அஹ்காம் என்னும் மார்க்க சட்டங்களையும் உருவாக்குவதற்கான தனி வழிமுறைகள் ஸஹாபாக்களின் காலத்திலேயே ஏற்பட்டு விட்டன.

திருக்குர்ஆன், ஹதீது மூலங்களிலிருந்து இஜ்திஹாத் செய்யக்கூடிய திறமையும் பண்பும் பெற்றிருந்த சிறந்த மகான்களான ஸஹாபாக்களில் பிரசித்துப் பெற்று விளங்கியவர்கள் நால்வர்தாம். அவர்கள் ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரிய முறையோடு ஹதீதையும் பிக்ஹையும் போதித்துக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் அக்கால பிரபலங்கள் பலர் பாடம் கேட்டனர்.அவர்களுள் அஸ்வத், உபைதா, ஹாரித், அல்கமா ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஹஜ்ரத் உமர். உதுமான், அலீ, ஆயிஷா, ஸஅத், ஹுதைபா, காலித் பின் வலீத், கப்பாப் போன்ற மாபெரும் ஸஹாபாக்களிடமிருந்து ஹதீதுகளைக் கேட்டவர்கள் அல்கமா அவர்கள். இவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் நெருங்கி பழகி அவர்களை அடியொற்றி நடந்தவர்கள். எனக்குத் தெரிந்ததையெல்லாம் அல்கமாவுக்கு நான்  போதித்து விட்டேன்‘ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறியுள்ளார்கள். அல்கமாவுக்கு சமமாக விளங்கியவர்கள் அஸ்வத் ஒருவர்தாம்.

அல்கமா, அஸ்வத் ஆகிய இரு மேதைகளும் காலமானபின் மாமேதை இப்றாஹிம் நக்கயி அவர்கள் கலாபீடத்தில் அமர்ந்து பிக்ஹை வளர்த்து வந்தார்கள். இந்த மாமேதை காலமானபின், இமாம் ஷுஅபியவர்கள் ‘தமக்கு நிகராக யாரையும் ஏற்படுத்தாமல் போய்விட்டார்களே இப்றாஹிம்‘ என்றார்கள். அப்போது அருகிலிருந்த ஒருவர் ஏன் ஹஸன் பஸரி, இப்னு ஸிரீன் போன்ற பெரியார்கள் இல்லையா? என்று கேட்டதற்கு, ஆம். ஹஸன் பஸரி, இப்னு ஸிரீன் என்ன பஸரா, கூபா, ஸிரியா, ஹிஜாஜ் ஆகிய இடங்களில் எங்கே தேடினாலும் இப்றாஹீமுக்கு நிகர் இப்றாஹீமாகவே இருந்தார்கள்‘ என்று ஷுஅபி பதிலளித்தார்கள்.

இப்றாஹிம் நக்கயின் உதவியால் ஹதீதுகளையும், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு , அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது போன்ற பெரியார்களின் தீர்ப்புகளையும் ஆதாரமாக வைத்து பிக்ஹு மஸ்அலாக்களின் தொகுப்பு ஒன்று உருவாயிற்று. ஆனால் அது நூல் வடிவில் எழுதப்படாது இப்றாஹிம் நக்கயி அவர்களின் மாணவர்களின் இதயங்களிலேயே பதிக்கப்பட்டிருந்தது.

நக்கயின் பிரதான மாணவரும் இமாம் அபூஹனீபாவின் குருநாதருமான ஹம்மாது அவர்களே அதன் பெரும்பகுதியை மனனம் செய்திருந்தார்கள். இதனாலேயே இப்றாஹிம் நக்கயி காலமானபின்  மக்கள் அவர்கள் ஸ்தானத்தில் அமர்ந்து பிக்ஹை போதிக்கும் பொறுப்பை ஹம்மாதின் மீது சுமத்தினர்.

ஹிஜ்ரி 120 ல் அவர்கள் காலமானபோது அந்தப் பொறுப்பு அவர்களிடமிருந்து இமாம் அபூஹனீபா அவர்களிடம் வந்து விட்டது.

அதுவரை இந்த பிக்ஹு ஒரு சிலர் மட்டும் அறிந்த விசயமாக இருந்தது. இமாம் அபூஹனீபா அதை உலக முஸ்லிம்கள் யாவரும் அறிந்து கொள்ளும் வகையைச் செய்தார்கள்.

1.            இமாம் அபூ ஹனிபா ரலியல்லாஹு அன்ஹு:

மார்க்கச் சட்டமான பிக்ஹின் அடிப்படையினையே முதன் முதலாக விதிப்படி முறைப்படுத்தி உலகுக்கு வழங்கிய மாமேதையான இவர்களின் பெயர் நுஃமான் இப்னு தாபித் என்பதாகும். 

வமிசவழி:

பாரசீகக் குடும்பமொன்றை சேர்ந்தவர்களான இவர்கள் கூபா நகரில் பிறந்தார்கள். நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் யஹ்யா பின் ஜைத் பின் அஸத் பின் ராஷிதுல் அன்ஸாரி என்றும், அவர்களுடைய பாட்டனார் ஜௌத்தி ஆப்கானிஸ்தானிலுள்ள காபூலில் சிறைக் கைதியாக பிடிக்கப்பட்டு அரபு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டவர் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுடைய சரியான வமிசவழியானது நுஃமான் பின் தாபித் பின் ஜௌத்தி பின் மாஹ் என்பதாகும். ஜௌத்தி  அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தினை ஏற்று நுஃமான் என்ற பெயரை அடைந்து கொண்டார்.  இமாம் அவர்களின் தந்தையான தாபித் பிறந்தபோதும் அவர்களைத் தந்தை நுஃமான் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்திற்கு கொண்டு சென்று அவர்களின் நல்லாசியைப் பெற்றுச் சென்றுள்ளார்.

தோற்றப் பொலிவு:

இமாம் அவர்கள் ஒல்லியான உடலும், நடுத்தரமான உயரமும் உடையவர்கள். தலை நிமிர்ந்த நடையுடையவர்கள், பாரசீகப் பரம்பரைக்கேற்ற எடுப்பான நாசியும், கவர்ச்சிகரமான முக வசீகரமும் பெற்றிருந்ததோடு அறிவின் விசாலத்தைக் காட்டும் அகன்ற நெற்றியையும் அதில் தகத்தக அற்புதமான ஒளியையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.

அவர்களோடு உரையாடுபவர்கள் அவர்களை விட்டுப் பிரிந்து போகவே விரும்பாதபடி இனிமையாகப் பேசுவார்கள்.

இமாம் அவர்கள் சதாவும் உயர்தரமான உடையே அணிவார்கள். சில நேரங்களில் ஓரங்களில் அருமையான பூ வேலைப்பாட்டுடன் கூடிய மெல்லிய துணியிலான சட்டையும் அணிவார்கள். தாங்கள் நல்லவிதமாக உடுத்துவதுடன் வசதி படைத்தவர்களை நல்லபடியாக உடைகள் வாங்கி உடுத்துமாறு அவர்கள் ஏவியிருக்கிறார்கள்.

குணாதிசயங்கள்:

இமாம் அவர்களின் சீடரான இமாம் அபூயூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இமாம் அவர்கள் மிகவும் பேணுதலுடையவர்களாகவும், ஆகாத கருமங்களை விட்டும் அப்பால் விலகிக் கொள்பவர்களாகவும், பெரும்பாலும்  மௌனமாகவும் இருப்பார்கள். ஆனால் சதாவும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். யாரேனும் ஒரு பிரச்சனைக்குப் பதில் கேட்டு வந்தால் மட்டும் பதிலளிப்பார்கள். ஒப்பற்ற கொடை வள்ளல். யாரிடமும்  எதையும் வேண்டாதவர்கள். ஆட்சியாளர்களின் பதவி பட்டங்களை துச்சமாக மதித்தவர்கள். யாரைப் பற்றியும் புறம் பேசியே அறியாதவர்கள். தங்கள் திரண்ட செல்வத்தை எல்லாம் தேவைப்பட்டோருக்கு வாரி வழங்கியது போல மாபெரும் பொக்கிஷமான தமதுஅறிவுச் செல்வத்தையும் கேட்டோர்க்கெல்லாம் வாரி வழங்கினர்‘ என்று கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களிடம் கூற அது கேட்ட கலீபா அவர்கள், ‘இவையே உத்தம சீலர்(ஸாலிஹீன்)களின் நற்பண்புகளாகும்‘ என்று கூறினார்.

கல்வி:

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார்கள். தந்தையின் ஜவுளி வியாபாரத்தை இளமையிலேயே பார்த்து வந்தனர். முஸ்லிம்களுக்கு கற்பிக்கப்படும் சாதாரண கல்வியையே அவர்கள் பயின்றார்கள். அன்னையின் சொல் தவறாது நடப்பவராக இருந்தார்கள்.

தங்களுடைய பதினாறாம் வயது வரை மேல்படிப்பு படிக்க வாய்ப்பின்றி வர்த்தகத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள்.  ஒரு சமயம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவசரமாகக் கடைவீதிக்குப் போய் கொண்டிருந்தார்கள். வழியில் அக்காலத்திய அறிஞர்களுள் ஒருவரான இமாம் ஷுஅபி அவர்கள் அபூஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) வை நோக்கி ‘உங்கள் முகத்தில் கல்விக் கலை தெரிகிறது. எனவே நல்ல ஆசானைத் தேடிக் கல்வி பெறுமாறு கூறினார்கள். அதன்பிறகு இமாம் அவர்கள் கல்வி கற்க ஆயத்தமானார்கள்.

இமாம் அவர்கள் அடிப்படைக் கல்வியை ஓராண்டில் கற்று விட்டு தத்துவ சாஸ்திரத்தை (இல்முல் கலாமை) கற்பதில் விசேச கவனம் செலுத்தினார்கள். ஆனால் பிற்காலத்தில் பிக்ஹில் கூபாவில் இமாமாக விளங்கிய பிக்ஹு ஆரியப் பெருந்தகை ஹம்மாது அவர்களிடம் பிக்ஹு கல்வி பயின்றார்கள். இந்த ஹம்மாது அவர்கள் சஹாபிப் பெருந்தகையான ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து பல ஹதீதுகளைக் கேட்டுள்ளார்கள். தாபியீன்கள் பலரிடமும் அமர்ந்து பல்வேறு பாடங்களை கற்றிருந்தார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து வெளிப்பட்ட பிக்ஹு பாடத்தை அதே அடிப்படையிலேயே இமாம் ஹம்மாதும் போதித்து வந்தார்கள். இவ்வளவு திறமையும், புகழும் வாய்ந்த பெரியாரிடம் இரண்டாண்டுகள் இமாம் அவர்கள் பிக்ஹு கற்று தேர்ந்தார்கள்.

ஹம்மாது ஆசிரியர் அவர்களையன்றி பல்வேறு பிக்ஹு ஆசான்களிடமும் பிக்ஹு பாடம் கேட்டுள்ளார்கள். அத்துடன் ஹதீதுகளைப் பற்றிய பாடங்களையும் விரிவாக படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஹஜ்ஜுக்கு சென்றிருந்த சமயம் ஹஜ்ரத் அத்தாரிப்னு அபீ ரிபாஹ் என்ற பெரியாரிடம் ஹதீதுகளைக் கற்றுக் கொண்டனர். பின்பு மதீனா சென்று அங்குள்ள ஆசான்களிடமும் ஹதீதுகளைக் கற்றனர். இமாம் அவர்கள் மக்கா செல்லும்போதெல்லாம் ஹஜ்ரத் அத்தார் அவர்களைப் போய்ப் பார்ப்பதும், அவர்களோடு அளவளாவுவதுமாக இருந்தார்கள். இதே போன்று மக்கா, மதீனா செல்லும்போது அங்குள்ள பெரியார்களிடம் சென்று தங்களுக்கு வேண்டிய விளக்கங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இமாம் மாலிக் அவர்கள் இமாம் அபூ ஹனீபா ரலியல்லாஹு அன்ஹுவை விடப் பதிமூன்று வயது சிறியவர்களாயினும் அவர்கள் நடத்திய வகுப்பிலும் சென்றமர்ந்து இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு பாடம் கேட்டுள்ளார்கள். மக்காவின் பிரபல ஹதீது விரிவுரையாளரான அம்ருப்னு தீனாரிடமும் பாடங்கள் பயின்றிருக்கிறார்கள்.

இவ்விதமாக இமாம் அவர்கள் ஹதீது கலை பயின்ற பலருள் இமாம் ஷுஅபி, சல்மா பின் குயைல், மஹாரிப், அபூ இஸ்ஹாக் ஸப்யி, ஒளன், சம்மாக், உமர் பின் மர்ரா, மன்தருல் அம்ரு, அஃமஷ், இப்றாஹீம் பின் முஹம்மது, அதீ, அத்தாரிப்னு ஸாயிப், மூஸா, அல்கமா, ஹிஷாம், சுலைமான், கதாதா, அத்தாரிப்னு அபீ ரிபாஹ், இக்ரிமா, மக்ஹுல் ஆகியோர் முக்கியமானவர்கள்.

நுஃமான் அபூஹனீபாவானது:

பிக்ஹு சட்டத்தில் மகா நிபுணராகித் தீர்ப்பு வழங்கத் தொடங்கிய சமயம் நுஃமான் என்ற இயற்பெயருடன் சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டதுதான் அபூஹனீபா என்ற பெயராகும் என்று தெரியவருகிறது. திருக்குர்ஆனில் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்திலுள்ள பத்தாம் வசனத்தில் ‘வத்தபவூ மில்லத்த இப்றாஹீம் ஹனீபா‘ (மிகத் தூய்மையான -ஹனீப் ஆன இப்றாஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றி நடங்கள்) என்று கூறப்பட்டுள்ளதில் வரும் ‘ஹனீப்‘ என்ற பதத்திலிருந்துதான் இவ்விதம் இமாம் அவர்கள் பெயர் சூட்டிக் கொண்டனர் என்று ஆதாரப்பூர்வமான நூல்கள் தெரிவிக்கின்றன.

நாற்பது வயதுவரை தங்கள் கல்வி ஞானத்தைப் பலப்படுத்துவதிலேயே இருந்த இமாம் அவர்கள், தங்களது குருநாதர் ஹம்மாது உயிரோடு இருக்கும் வரை தனியாக பிக்ஹு போதனை நடத்த தயாராக இல்லை. ஹிஜ்ரி 120 ஹம்மாது அவர்கள் காலமாகிவிடவே, அதன்பிறகு கொஞ்சகாலம் மூஸா இப்னு கதீர் என்ற பெரியாருக்குப் பின் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் பிக்ஹு பாடம் நடத்த துவங்கினர்.

உலக அளவில் இமாம் அவர்களின் போதனா கூடம் மிகவும் பிரபல்யமடைந்தது. எண்ணற்றோர் இங்கு வந்து பாடம் கேட்கலாயினர்.  அவர்கள் எங்கு சென்றாலும் ‘இராக்கின் பக்கீஹ்‘ என்று போற்றப்பட்டார்கள்.

 இமாம் அவர்களின் அறிவும் நுட்பமும், திறமையும் எண்ணற்றவர்களை இன்புறச் செய்தது போல் பொறாமைக்காரர்கள் சிலரைப் புழுங்கவும் வைத்தது. அவர்கள் மார்க்கத்தை விட்டு விட்டு மனம்போன போக்கில் தீர்ப்புகள் வழங்குவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதேபோல்தான் நபிகளாரின் பேரரான இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் இவர்களைப் பற்றி தவறாக எடுத்துக் கூறப்பட்டது. ஹஜ்ஜு சென்ற சமயம் இமாம் அவர்கள் மதீனா சென்று இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை சந்தித்தனர். அவர்களிடம் தாங்கள் கேள்விபட்டதை இமாம் அவர்கள் கேட்டதும், இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு இமாமிடம், ‘விந்து, மூத்திரம் இவற்றில் எது அதிக அசுத்தமானது? என்று கேட்டார்கள். அதற்கு இமாம் அவர்கள் ‘மூத்திரம்‘என்று பதிலளித்தார்கள். ஆனால் மார்க்கச் சட்டப்படி மூத்திரம் வெளிப்பட்டால் அந்த தலத்தை மட்டும் கழுவினால் சுத்தமாகிக் கொண்டால் போதும் என்றும், விந்து வெளிப்பட்டால் அந்தத் தலத்துடன் மட்டும் நில்லாது உடல் முழுவதையுமே கழுவ வேண்டும் என்றல்‘லவா இருக்கிறது. நான் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதானால் அதிக அசுத்தமானதன் விஷயத்தையல்லவா அதிகம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருப்பேன். நான் அவ்வாறு செய்யாமல் மார்க்கச் சட்டப்படியல்லவா தீர்ப்பு அளித்துள்ளேன் என்று சொன்னார்கள்.

அடுத்து அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆண், பெண்களில் அதிகப் பலவீனமானவர்கள் யார்? என்று கேட்டார்கள்.

‘பெண்கள்தாம்’ என்று இமாம் பதிலளித்தார்கள்.

பாகப் பிரிவினையில் யாருக்கு அதிகப் பங்கு கொடுக்கப்படுகிறது?

‘ஆண்களுக்குத்தான்.‘-இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நான் மட்டும் என் சுய அனுமானப்படி தீர்ப்புக் கூறுவதாயின் பெண்கள் பலவீனமானவர்களாதலால் அவர்களுக்கு இரண்டு பங்கும், ஆண்களுக்கு ஒரு பங்கும் சொத்து பாகம் பிரிக்கப்பட வேண்டும் என்றல்லவா தீர்ப்பளித்திருப்பேன். ஆனால் நான் மார்க்கச் சட்டப்படியல்லவா தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

கடைசியாக இமாம் அபூஹனீபா அவர்கள் கேட்டார்கள்: தொழுகை, நோன்பு ஆகிய இரண்டிலும் அதிகம் ஏற்றமானது எது? என்று.

‘தொழுகைதான்‘ என்று இமாம் ஜஃபருஸ்ஸாதிக் அவர்கள் சொன்னார்கள்.

அப்படியானால் மாதவிலக்கான பெண் நோன்பை களா செய்யாமல் தொழுகையை அல்லவா களா செய்ய வேண்டும். நானோ அப்படிக் கூறாமல் மார்க்கச் சட்டப்படி நோன்பை களா செய்ய வேண்டும் என்றே தீர்ப்பளித்திருக்கிறேன் என்றார்கள் அபூஹனீபா இமாம் அவர்கள்.

இமாம் அவர்களின் நேர்மையை உணர்ந்த இமாம் ஜஃபர் சாதிக் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்களைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார்கள். இமாம் அபூஹனீபா இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்தும் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த கலீபாக்கள் ஆட்சி நபிகளாரின் குடும்பத்தாரை கொலை செய்தும், அவர்களை அவமரியாதை செய்தும்கொண்டிருந்ததை இமாம் அவர்கள் சகிக்கவில்லை. இதனால் பனூஉமையா ஆட்சியாளர்கள் இமாம் அவர்கள் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கலாயினர். இமாம் அவர்கள் அரசியலோடு பிண்ணி பிணைந்து விடக் கூடிய பேச்சுக்களைக் கூடியவரை தவிர்த்து வந்தனர்.

இதில் கூபாவின் நிர்வாகிய இருந்த யஜீத் இப்னு உமர் என்பவர் அபூஹனீபா அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி கொடுத்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இமாம் அவர்கள் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் நான் வேலை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். இதனால் யஜீதுக்கு ஆத்திரம் பொங்கி, இமாம் அவர்களை கைது செய்து தினமும் பத்து கசையடிகள் கொடுக்கச் செய்தார். ஆனால் இமாம் அவர்களின் உறுதி இதனால் தளர்ந்து விடவில்லை. சில நாட்கள் கழித்து யஜீது இமாம் அவர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டார். உடனே இமாம் அவர்கள் மக்கா புறப்பட்டு ஹிஜ்ரி 136 வரை அங்கேயே தங்கி விட்டார்கள்.

அடுத்து வந்த அப்பாஸிய கலீபாக்களும் நபிபெருமானாரின் வாரிசுகளையும், குடிமக்களையும் கொடுமைப் படுத்தினர். இமாம் அவர்கள் நபிபெருமானாரின் வாரிசுகளான முஹம்மதையும், அவரது சகோதரர் முஹம்மதையும் ஆதரித்ததால் கலீபா மன்சூர் அவர்களைத் தண்டிக்க நாடினார்.

இமாமின் மறைவு:

இமாம் அவர்கள் ஏற்கனவே தலைமை நீதிபதி பதவியை ஏற்க மறுத்ததும், அதற்காக நூறு கசையடிகள் தண்டனை பெற்றதும் கலீபா அவர்களுக்குத் தெரியுமாதலால் அந்தப்படியே நடக்க முடிவு செய்து இமாம் அவர்களை அரசவைக்கு வரச் செய்து தலைமை நீதிபதியாக இருக்க வேண்டுகோள் விடுக்க, இமாம் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் இமாம் அவர்களை சிறையிலடைக்க கலீபா ஹிஜ்ரி 146 ல் உத்திவிட்டார். இப்போது  இமாம் அவர்களுக்கு வயது அறுபத்தாறு. சிறையில் இமாம் அவர்கள் பாடபோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து இமாம் அவர்களை கண்காணிக்க முடியாமல் இமாம் அவர்களின் உணவில் விஷம் கலந்து விட்டார். உணவை உட்கொண்டதும் விஷம் தங்கள் உடலில் வேலை செய்வதை இமாம் அவர்கள் உணர்ந்தார்கள். தங்கள் சிரசை சஜ்தாவில் வைத்தார்கள். இந்நிலையிலேயே அவர்களின் ஆன்மா பிரிந்தது. அவர்கள் காலமானது ஹிஜ்ரி 150 ஷஃபான் மாதம் பிறை 2 (கி.பி. 766) ஆகும்.

இமாம் அவர்கள் காலமாகிவிட்ட செய்தி வெகு துரிதமாகப் பக்தாத் நகர் முழுவதும் பரவி விட்டது. அவர்களுடைய பூத உடலை பக்தாத் நகரத் தலைமை நீதிபதியான ஹஸன் பின் அம்மார் என்ற பெரியார் முன்னின்று குளிப்பாட்டினார்கள். இமாம் அவர்களின் உடல் ஜும்ஆ மஸ்ஜிற்கு கொண்டு செல்லப்பட்டதும் முதல் தடவை நடத்தப்பட்ட ஜனாஸாத் தொழுகையில் ஐம்பதாயிரம் பேர்கள் கலந்து கொண்டனர். பக்கத்து ஊர்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் வரவே பல தடவை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.

அதன்பின் அன்னாரின் உடல் பக்தாதில் ஆக்கிரமிக்கப்படாத இடம் என்று பெயர் பெற்ற கீஜ்ரான் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வந்த கலீபா அலப் அர்ஸலான் ஹிஜ்ரி 459 ல் இமாம் அவர்களின் அடக்கதலத்தின் மீது குப்பா ஒன்றைக் கட்டினார். அத்துடன் கலாசாலை ஒன்றையும் நிர்மாணித்தார்.  பக்தாதில் நிறுவப்பட்ட முதல் கலாசாலையான இது ‘மஷ்ஹத் ஹனீபா‘ என்ற பெயருடன் விளங்கியது.

சந்ததிகள்:

இமாம் அவர்களுக்கு ஹம்மாது என்ற ஒரு புதல்வர் மட்டும் இருந்தார். வேறு புதல்வரோ, புத்திரியோ இல்லை. தம் மகனுக்கு தம் ஆசிரியரின் பெயரை சூட்டியிருந்தார்கள். ஹம்மாது  அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார். தம் தந்தையாரின் மறைவிற்குப் பின் அவர்களிடமிருந்த பலராலும் ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று பக்தாது பிரதம காஜியான ஹஸன் பின் அம்மாரிடம் ஒப்படைத்து விட்டார். ஆட்சியாளர்களோடு எவ்வித தொடர்பும் அற்றவராக வாழ்ந்திருந்து ஹிஜ்ரி 176 ல் காலமானார்.

ஹம்மாது அவர்களுக்கு நான்கு புதல்வர்கள். உமர், இஸ்மாயில், அபூ ஹய்யான், உதுமான் ஆகியோரில் இஸ்மாயில் மிகவும் பிரபலமாயிருந்து கலீபா மாமூனுர் ரஷீதின் ஆட்சியில் பிரதான காஜியாகவும் வேலை பார்த்திருக்கிறார்.

ஆத்மஞானம்:

இமாம் அவர்கள் ஆரம்பத்திலேயே ஆத்மஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். கல்வி கற்றபின் துறவறம் பூண்டு காடு சென்று தவம் செய்ய நாடியதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி அவர்கள் நாட்டிலிருந்து சன்மார்க்க சேவை செய்ய வேண்டும் என்றும், அல்லாஹ் தங்களை படைத்ததே சன்மார்க்கத்தை உயிருள்ளதாக ஆக்குவதற்காகத்தான் என்றும் சொன்னதால் நாட்டிலிருந்தே சன்மார்க்க சேவை செய்தார்கள்.

இவர்களின் வழியாக ஆத்ம ஞான தரீகா உண்டாகியுள்ளது. அந்த சங்கிலித் தொடரில் இமாம் அபூஹனீபாவின் பெயரை அடுத்து மஃரூபுல் கர்கி-ஸர்ரிய்யு ஸிக்திய்யி-ஷைக் ஷிப்லி- அபுல்காஸிம் போன்ற பெரியார்களின் பெயர்களும் காணப்படுகின்றன. தரீகாவிலும் இவர்கள் ஒரு ஷெய்காக இருக்கிறார்கள்.

இப்றாஹிம் இப்னு அத்ஹம் அவர்களுக்கு நப்ஸை அடக்கி அவர்களின் ஆத்ம வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்தவர்களும், சூபி மகானான தாவூத் தாயி அவர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகள் கல்வி போதித்து அதன்பிறகு நப்ஸை அடக்கி அமலில் ஈடுபடு என்று அறிவுரை பகர்ந்ததும் அதன்படியே தாவூத் தாயீ செய்து வெற்றி கண்டார்கள் என்றும் வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது.

தின அலுவல்கள்:

இமாம் அவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து சுப்ஹுத் தொழுகைக்கு மஸ்ஜிதுக்குப் போய்விடுவார்கள். சுப்ஹு தொழுகை முடிந்ததும் அங்கேயே அமர்ந்து பல்வேறு பாடங்களையும் நடத்துவார்கள். பின்னர் வெளியூரிலிருந்து வரும் பிக்ஹு மஸ்அலா தொகுக்கும் வேலை நடைபெறும். பிறகு லுஹர் தொழுகை முடித்து வீடு போய் விடுவார்கள். வெயிற்காலமாயின் இச்சமயம் சற்று தூங்கி விடுவதுண்டு. அதுமுதல் அசர் தொழுகை வரை வியாபார விஷயங்களை கவனிப்பார்கள். அசர் தொழுகைக்குப் பின் நண்பர்களைக் காணவோ, நோயாளிகளைப் பார்க்கவோ போகவேண்டியிருப்பின் போவார்கள். மிஃரிபுக்குப் பின் இஷா வரை பாட போதனை நடைபெறும். இஷாவிற்குப் பின் நீண்ட நேரம் விழித்திருந்து வணங்குவார்கள்.

இமாம் அவர்கள் ஆயிரம் தடவை தங்கள் கனவில் இறைவனைக் கண்டதாகவும், அப்பொதெல்லாம் அவர்கள் அவனிடம் தாங்கள் ஈமான் சலாமத்துடன் மரணிப்பதற்கான ஒரு அமலை சொல்லித் தரும்படி கேட்டதாகவும், அதன் பயனாய் ‘அல்லாஹும்ம அஹ்யினீ அலல் கிதாபி வஸ்ஸுன்னத்தி வத வஃப்பனீ அலல் ஈமானி வத்தௌபத்தி. அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸல்லிம் வப்அல்பினா தாலிக்க வபி ஜமீஇல் முஸ்லிமீன்(அல்லாஹ்வே, திருக்குர்ஆனின் போதனைக்கேற்பவும், நபி பெருமானின் முன் மாதிரியின்படியும் நான் வாழ்ந்திருக்க அருள்புரி! பாவமன்னிப்புடனும், மெய்விசுவாசத்துடனும் நான் மரணிக்க கிருபை செய்! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் வம்சத்தார் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வாயாக! நாங்களும் மற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை அமல் நடத்தி வர அருள்புரிவாயாக!) என்ற துஆவை ஓதி வரும்படி உத்தரவாயிற்று என்றும், அதைத் தாங்கள் நியமமாக ஓதி வந்ததாகவும் அவர்கள் கூறியதாக காணப்படுகிறது.

பிக்ஹுல் அக்பர்:

மார்க்க சட்டத்தையும், மார்க்கத் தீர்ப்பையும் ஒழுங்காக அமல்படுத்த இமாம் அவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவில் மொத்தம் நாற்பது பேர்கள் இருந்தார்கள். யாவருமே திருக்குர்ஆனிலும், ஹதீதிலும் திறமையான ஆராய்ச்சியுள்ளவர்கள். இவர்களில் இமாம் அவர்களுடன் சதாவும் இருந்து பல்வேறு பாடங்களில் விசேஷ தேர்ச்சி பெற்றிருந்த  யஹ்யா பின் ஜாயிதா, ஹப்ஸு பின் கியாஸ், காழி அபூ யூசுப், தாவூத் தாயீ, ஹபான், மற்றும் மந்தல், இமாம் ஜாபர், இமாம் முஹம்மது காஸிம், அஸது, யூசுப் பின் காலித், ஆபியா அஜ்தி, அபூ அலீ மஹ்ரி ஆகியோர் முக்கியமானவர்கள். சபையின் முடிவை எழுதும் பணியை எஹ்யா என்பவர் செய்தததாக சொல்லப்படுகிறது. இந்தக்குழு ஹிஜ்ரி 121 லிருந்து ஹிஜ்ரி 150 வரை சுமார் முப்பது ஆண்டுகள் (இமாம் அவர்கள் மன்சூரால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும் கூட) சட்டங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது.

மஸ்ஜிதின் ஒரு பகுதியில் இமாம் அவர்கள் பாடம் நடத்தும் இடத்திலேயே இந்தக் குழு அமர்ந்து வேலை செய்தது. இமாம் அவர்கள் தலைமையில் இரண்டு வரிசையில் இந்த நிபுணர்கள் யாவரும் அமர்ந்திருப்பர். முதலில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை ஒருவர் படிப்பார். அனைவரும் அதற்கான தீர்வுகளைக் கூற வேண்டும். யாவருடைய முடிவும் ஒன்றுபட்டிருந்தால் உடனே அது எழுதப்படும்.அங்கத்தினர்கள் அங்கே சர்வ சுதந்திரத்தோடு விவாதிக்கலாம். யாவருக்கும் முழு வாய்ப்புமளிக்கப்பட்டிருந்தது. அனைத்து அங்கத்தினர்களும் வந்தால்தான் இந்த அவையில் பிரச்சனை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும். மிக எச்சரிக்கையோடு, கவனமாக இருந்து பிக்ஹு சட்டத்தை ஒரு சரியான அமைப்பில் கொண்டு வந்தார்கள்.

இந்தத் தொகுப்பில் முதல் அத்தியாயத்தில் பாபுத் தஹாரத்தும்( ஒளு, குஸுல், தயம்மும் போன்ற உடல் சுத்தி செய்தல் சம்பந்தமான விசயங்கள்) இரண்டாம் அத்தியாயத்தில் தொழுகை, நோன்பு, மற்றுமுள்ள வணக்கங்களை விளக்கும் விஷயங்கள் அடங்கியிருந்தன. மூன்றாம் அத்தியாயம் முஆமலாத் (வர்த்தகம், பொருளாதாரம்) பற்றிது, பத்தாவது அத்தியாம் (கடைசி) மீராஸ் (பாகப் பிரிவினை) பற்றியது. இமாம் அவர்கள் காலத்திலேயே இந்நூல் அக்கால அறிஞர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்பட்டது. சுப்யானுத் தவ்ரீ அவர்கள் ‘கிதாபுர் ரிஹன்‘(அடமானம், ஒத்திவைப்பு) என்ற பகுதியை பெற்று மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நூலில் மொத்தம் 12,90,000 மஸ்அலாக்கள் இருந்திருக்கின்றன. இந்த அற்புதமான தொகுப்புக்கு பிக்ஹுல் அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது. முஸ்லிம்களின் துரதிஷ்டம் இது காணாமல்போய் விட்டது. தற்போது பிக்ஹுல் அக்பர் என்று அழைக்கப்படும் நூல் இதுவல்ல.

இமாமவர்கள் மறைந்த பின் அவர்களுடைய தலையாய மாணவர்களான இமாம் முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானிய்யியும், இமாம் அபூ யூசுபும் ஹனபி மத்ஹபின் நடைமுறைகளை இமாம் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஒழுங்குப் படுத்தி பூரணமாக்கினர். இமாம் அவர்களால் ஆதாரங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஹதீதுகளை தொகுத்து ‘முஸ்னது இமாம் அபூஹனீபா‘ என்ற நூல் பல பாகங்களாக வெளி வந்தது.

இமாம் அவர்களாலும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டு, இமாம் முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானிய்யாலும், இமாம் யூசுபாலும் முறைப்படுத்தப்பட்டு உருவான ஹனபி மத்ஹப் உலகம் முழுவதும் பரவலாகி மக்கள் பின்பற்றும் பிரபல மத்ஹபாகியது.

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!