இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு.

ஹஜ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வமிசத்தைச் சார்ந்த இமாமுல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அவர் தந்தை ஹன்பல் அவர் தந்தை பிலால் அவர் தந்தை அஸத் அவர் தந்தை இத்ரீஸ்.
இவர்களுடைய தந்தை முஹம்மது அரசுப் படையில் ஒரு சாதாரணப் போர்வீராக வேலை செய்தார். இமாம் அவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவர்களுடைய தாயாரும், தகப்பனாரும் மர்வ் என்ற ஊரிலிருந்து பக்தாதில் குடியேறினார்கள். அங்கே ஹிஜ்ரி 164 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 (கி.பி. 780 நவம்பர்) ல் இமாம் அவர்கள் பிறந்தார்கள். இவர்களின் இரண்டு வயதில் தந்தையாரை இழந்தார்கள். அன்னையார் மிகவும் கஷ்டப்பட்டு இவர்களை வளர்த்தார்கள். பக்தாதிலேயே கல்வி பயிலவும் இயன்றவரை ஏற்பாடு செய்தார்கள்.
குடும்பம்:
இமாம் அவர்களுக்கு பல புத்திரர்கள் இருந்துள்ளனர். இமாம் அவர்கள் காலம் ஆகும் போது இரண்டு வயதிலும், ஐம்பது நாளிலும் கூட பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாரிடமே கல்வி கற்று மேதைகளான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவரான முஹம்மது சாலிஹ் இஸ்பஹானில் நீதிபதியாக பதவி வகித்தார். இளைய புதல்வாரன அப்துல்லாஹ் மாபெரும் கலைஞானியாகத் தமது தந்தையின் நூல்களைச் சீர்படுத்தி வெளியிடும் பணியை செய்தார்.
கல்வி:
 தங்கள் பதினைந்தாம் வயதில் (ஹிஜ்ரி 179 ல்) ஹதீது பாட போதனையைப் பயிலத் தொடங்கினார்கள். இமாம் அபூ ஹனீபாவின் தலையாய மாணவர்களில் ஒருவரான இமாம் அபூ யூஸுப் அவர்களின் போதனை வகுப்புகளில் அமர்ந்து பாடம் கேட்பார்கள். அத்துடன் பக்தாதில் பல பெரியார்கள் நடத்திய கலாஞான வகுப்புகளுக்கும் சென்று பாடங்களை கேட்டனர்.
தங்களது 23ம் வயதி;ல் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றார்கள். அதன்பின் பல பெரியார்கள் சபையில் அமர்ந்து பாடம் கேட்டார்கள். பின்னர் இரண்டாவது முறையாக ஹிஜ்ரி 191ல் ஹஜ்ஜு சென்றார்கள். அப்போதுதான் இமாம் ஷாபியீயைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களோடு பழக முடிந்தது.
இமாம் அவர்கள் மீண்டும் ஹிஜ்ரி 196ல் ஹஜ்ஜுக்குப் போய் மூன்றாண்டுகள் அங்கேயே தங்கியிருந்து மூன்று ஹஜ்ஜுகளை முடித்துக் கொண்டார்கள். அத்துடன் மக்காவில் நடத்த பல்வேறு ஹதீது வகுப்புகளில் கலந்து கொண்டு ஏராளமான ஹதீதுகளையும், அவற்றுக்கான விளக்கங்களையும் சேகரித்துக் கொண்டார்கள். மூன்று தடவை நடந்தே ஹஜ்ஜு சென்றதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
ஹிஜ்ரி 199ல் ஹிஜாஸை விட்டு எமன் சென்றார்கள். அங்கு புகழ் பெற்றிருந்த பெரியார் முஹத்திஸ் அப்துர் ரஜ்ஜாக் அவர்களிடம் ஹதீது பாட போதனை பெற்றார்கள்.
இறுதியில் தங்கள் சொந்த ஊரான பக்தாதுக்கே திரும்பினார்கள். அப்போது அங்கு இமாம் ஷாபியீன் பிக்ஹு, ஹதீது பாடபோதனைகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றில் அமர்ந்து இமாம் ஷாபியீயின் தலையாய சீடராக ஆகிக் கொண்டார்கள்.
‘நான் இமாம் ஷாபியீ அவர்களிடம் பயிற்சி பெறும்வரை ஹதீதுகளில் நாஸிக், மன்ஸூக், ஃகாஸ், ஆம், முஜ்மல், முபஸ்ஸல் ஆகியவற்றைப் பற்றி எதுவும் தெரியாதவனாக இருந்தேன். இமாம் ஷாபியிதான் எனக்கு இவற்றை சரியாக விளக்கினார்கள்‘ என்கிறார்கள் இமாம் ஹன்பல் அவர்கள். மூன்று ஆண்டுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் அவர்கள் இமாம் அவர்களிடம் பாட போதனை கேட்டு பயனடைந்து கொண்டார்கள்.
பின்னர், இமாம் ஷாபியீ மக்கா சென்று, மீண்டும் பக்தாத் திரும்பி எகிப்துக்குச் சென்ற சமயம் இமாம் ஹன்பலையும் தங்களோடு அழைத்தேக முயன்றும் இமாம் ஹன்பலினால் வறுமையின் காரணமாக தங்கள் ஆசானோடு செல்ல முடியவில்லை. இமாம் ஷாபியீ அவர்கள் பக்தாதை விட்டு புறப்படும் போது, இமாம் ஹன்பலைக் குறிப்பிட்டு , ‘நிகரற்ற பகீஹும், ஒப்பற்ற முஹத்திஸுமான ஒரு கலைக்குன்றை பக்தாதில் விட்டுப் போகிறேன்‘ என்று கூறியுள்ளார்கள்.
பஷர், இஸ்மாயீல், சுப்யான் பின் ஐனா, ஜரீர், யஹ்யா, அபூ தாவூத் தாயீ, அப்துல்லாஹ், அப்துர் ரஜ்ஜாக், அலீ பின் ஐயாஷ், ஷாபியீ கந்தர், முஸ்தமிர், வகீவு ஆகிய பெரியார்களிடமும் இமாம் ஹன்பல் கல்வி கற்றிருக்கிறார்கள்.
தங்களது முப்பத்தி ஐந்தாம் வயதில் இமாம் ஷாபிஈ அவர்கள் எகிப்து சென்ற நிலையில் பக்தாதில் இமாம் ஹன்பல் அவர்கள் பக்தாதில் பாடபோதனையைத் துவக்கினார்கள். அவர்கள் பாடம் நடத்திய பாங்கும், அவர்களின் எளிமையும் அன்னாரின் புகழை நெடுகிலும் பரப்பி விட்டது. பல நாடுகளிலிருந்தும் மாணவர்களும், அறிஞர்களும்  இமாம்அவர்களின் பாடபோதனையில் வந்தமர்ந்து கல்வி கற்றனர். ஹதீது போதனையே நடத்தப்பட்டாலும் பிக்ஹு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டியதிருந்தது.
சோதனை:
கலீபா ஹாரூன் காலமாகி அதன்பின் அவர் சகோதரர் அமீன் பதவியிலமர்ந்தார். இவர் வீண் கேளிக்கையில் ஈடுபட்டதால், ஹாரூன் ரஷீதின் மகன் மாமூன் ஹிஜ்ரி 198 ல் கலீபா பட்டமேற்றார். கிரேக்க மொழியிலிருந்த இலக்கிய, தத்துவ நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்து, அவற்றைக் கற்றதால் எதையும் அந்த அடிப்படையிலேயே ஆராயத் தொடங்கியதால், முஃதஜிலாக்கள் விரித்த வலையில் வெகு விரைவிலேயே விழுந்துவிட்டார். பகுத்தறிவு அடிப்படையில் நமது கொள்கைகளை வகுத்துக் கொண்டதாக கூறிக் கொள்ளும் முஃதஜிலாக்கள்‘ திருக்குர்ஆன் படைக்கப்ட்டதுதான்‘ என்று கூறத் துவங்கினர்.
இதுவே தற்போதைய கலீபாவின் கொள்கையாகவும் ஆகி விட்டது. அரசாங்க அவையில் அதிகச் செல்வாக்குடன் முஃதஜிலாக்கள் திகழ்ந்தனர். தங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை வெட்டிக் கொன்று விட வேண்டும் என்ற முடிவை கலீபா அவர்களும் ஏற்றுக் கொள்ள செய்தனர்.
பக்தாதில் அச்சமயம் நீதிபதியாக இருந்த அஹ்மது இப்னு அபீ துவாத் கடுமையான வெறிபிடித்த முஃதஜிலியாவார். இவர் யோசனையை ஏற்று, கலீபா மாமூன் ஒரு அறிக்கை தயாரித்தார். அதில் திருக்குர்ஆன் அனாதியானது அல்ல. படைக்கப்பட்டதுதான். இதை மறுப்பவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும். அவர்களின் சாட்சியங்களை ஏற்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
இவ்விதம் தாம் எழுதிய உத்திரவை கிரேக்க நாட்டு எல்லையிலிருந்த கலீபா மாமூன், அச்சமயம் பக்தாதிலிருந்த தன் பிரதிநிதி இஸ்ஹாக் இப்னு இப்ராஹீமுல் கஜாயி என்பவருக்கு அனுப்பி, அத்துடன் பக்தாதிலுமு;, அதன் சுற்றுப் புறத்திலும் உள்ள மார்க்க ஞானியர்கள் அனைவரையும் இதன் மீது விசுவாசப் பிரமாணம் செய்யுமாறு செய்ய வேண்டும். இந்தப் பிரகடன்னத்தில் கண்ட விசயங்களை ஒப்புக் கொள்ளமறுப்பவர்களை மார்க்கத் தீர்ப்பளிக்கவோ, உபன்னியாசம் நிகழ்த்தவோ, திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தவோ அனுமதிக்கவும் கூடாது. அவர்களை எம் சமூகத்திற்கு அனுப்ப வேண்டும். நாம் அவர்களை விசாரித்து தக்க முறையில் தண்டனை அளிப்போம்‘ என்ற உத்திரவையும் சேர்த்திருந்தார்.
இதன்படி பக்தாதிலுள்ள உலமாக்கள் அனைவரையும் அரண்மனை மண்டபம் வந்து கூடுமாறு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம் சுற்றறிக்கை அனுப்பினார். அங்கு கூடியவர்கள் முன்னிலையில் கலீபாவின் பிரகடனத்தை படித்துக் காட்டினார். அவர்களில் பெரும்பாலோர் கலீபாவின் வாளுக்குப் பயந்தும், அவரிடம் பெற்று வரும் உபகாரச் சம்பளம், மானியத்திற்காகவும் பிரகடனத்தை ஒப்புக் கொண்டு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தனர். கடைசியில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பலும், முஹம்மதிப்னு நூஹு என்பவரும் தான் இதில் விட்டுக் கொடுக்காமல், ‘திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டதல்ல. அனாதியானது. அது இறைவனின் திருவசனம்‘ என்று கூறினார்கள். உடனே அந்த அதிகாரி அந்த இருவரின் கால்களுக்கும் விலங்கிட்டு கிரேக்க எல்லையில் தியானா எ ன்ற இடத்தில் முகாமிட்டு இருந்த கலீபா மாமூனிடம் அனுப்பி வைத்தார். போகும் வழியில் இமாமவர்களுடன் கைதியாகச் சென்ற முஹம்மதிப்னு நூஹு காலமாகி விட்டார்.
அவர்கள் தியானா சென்றடைந்த சமயம் கலீபா மாமூன் காலமாகி விட்டார் என்ற செய்தியைத் தான் கேட்க முடிந்தது. அவர் இறந்ததும் அவரோடிருந்த அவர் சகோதரர் அபூ இஸ்ஹாக் முஹம்மது என்பவர் மாமூனின் மரண சாசனப்படி ஹிஜ்ரி 218ல் தியானாவிலேயே முஃதஸிம்பில்லாஹ் என்ற பட்டத்துடன் கலீபாவானார். அவர் உடனடியாக கவனிக்க வேண்டிய அவசர காரியங்கள் இருந்ததால் இமாம் அவர்களை பின்னர் கவனிக்கலாம் என்றும் அதுவரை அவர்களை பக்தாதிலேயே கொண்டு போய் சிறை வைக்க உத்தரவிட்டார்.
பிரதம மந்திரியாக இருந்த அபூதாவூது என்ற முஃதஜிலாக்களில் ஒருவர் மீண்டும் உலமாக்களை விசாரணை செய்து அவர்களின் விசுவாசத்தை அறியும் வேலையை துவக்கினார். இமாம் அவர்கள் விசாரணைக்காக கொண்டு வருவதற்குள் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள். சிறையில் இருந்த காலம் பதினெட்டு மாதங்கள் என்றும், இருபத்தெட்டு மாதங்கள் என்றும் இரண்டு வகையாக சொல்லப்படுகிறது.
கால்களில் விலங்குகளுடன் கொண்டு வரப்பட்ட இமாம் அவர்களிடம் அவரின் சிறிய தகப்பனார் மகன் ஜமீல் என்பவர், அஹ்மதே மற்ற உலமாக்கள் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கலீபாவிடம் கூறி தப்பி விட்டனர். அதுபோல் நீரும் கூறி தப்பிப்பது தான் சிறந்தது என்று கூறினார். உடனே இமாம் அவர்கள் திருக்குர்ஆனையும், ஹதீதையும் என் நன்மைக்காக திரித்துக் கூறச் சொல்கிறாயா? ஒருக்காலும் நான் அதை செய்ய மாட்டேன். சத்தியம் இறந்து நான் உயிரோடு இருப்பதை விட நான் இறந்து சத்தியம் உயிரோடு இருப்பது உயர்ந்ததல்லவா! என்று கூறி விட்டு மேலே நடந்தார்கள்.
கலீபா முஃதஸிமின் அவையில் முஃதஜிலாக்களான ஆலிம்கள் பலர் கூடியிருந்தனர். முஃதஜிலா அதிகாரிகளும் நிறைந்திருந்தனர். அங்கே அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அங்கு கலீபா மற்றும் முஃதஜிலா ஆலிம்கள், அதிகாரிகளுக்கும் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களுக்கும் கேள்வி பதில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இமாம் அவர்கள் கேட்ட அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு முஃதஜிலாக்களால் பதில் சொல்ல முடியாமல் திரும்பத் திரும்ப குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும்படி இமாம் அவர்களை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடந்தது.
இறுதியில் இமாம் அவர்கள் கலீபாவைச் சுட்டிக் காட்டி ‘படைப்புத்தான்‘ என்று சொன்னார்கள். உடனே அங்கிருந்தவர்கள் இமாம் அவர்கள் அமீருல் முஃமின் இமாம் அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டார் என்றார்கள். அவரை விடுதலை செய்யலாம் என்றனர். ஆனால் கலீபாவின் பிரதம மந்திரியான இப்னு அபூதாவூது குறுக்கிட்டு ‘இவரைப் போன்ற பிரபலமான ஓர் அறிஞர் அதை மக்களிடையே சொன்னால்தான் நல்லது என்றார். உடனே கலீபா அரண்மனை முற்றத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.
பொதுக் கூட்ட மேடையில் கலீபா, அதிகாரிகள், தளபதி மற்றும் உலமாக்களும் சுற்றி அமர்ந்திருந்தனர். முதுமையில் இமாம் அவர்கள் சிறைவாசத்தால் மெலிந்து, நலிந்து முதல் முறையாக கால்விலங்கு அகற்றப்பட்டவர்களாக அங்கே வந்திருந்தார்கள். அவர்கள் மேடை மீது ஏறி நின்று கம்பீரமான குரலில் பேசினார்கள்.
அப்போது குர்ஆன் படைக்கப்படவில்லை என்பதை உறுதியாக குர்ஆன், ஹதீது ஆதாரங்களோடு எடுத்துரைத்தனர். கலீபாவும், மற்றவர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பொதுமக்கள் இவை அனைத்தையும் கேட்டு குறித்துக் கொண்டனர். கலீபா அவர்கள் இவரை இவர் போக்கில் விட்டு விடலாம் என்று எண்ணியவராக தமது மந்திரியிடம் யோசனை கலந்தார். இவருக்கு இலகுவான தண்டனை அளியுங்கள் என்று சொல்லிவிட்டு கலீபா அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் இமாம் அவர்களுக்கு நூறு கசையடிகள் கொடுப்பது என்று மந்திரியும் அவர் கூட்டாளிகளும் முடிவு செய்து விட்டனர்.
மறுநாள் முற்பகலில் பொதுவான் ஓரிடத்தில் இமாம்அவர்கள் கொண்டு வரப்பட்டு இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் வளையங்களால் கட்டப்பட்டு அவர்களின் சட்டையும் அகற்றப்பட்டிருந்தது. அவர்கள் வெறும் பைஜாமாவோடு நிறுத்தப்பட்டிருந்தார்கள். சவுக்கடி கொடுப்பவன் வந்தான். முதல் அடி கொடுக்கும்  போது, இமாம் அவர்கள் ‘பிஸ்மில்லாஹி‘ என்றும், இரண்டாம் அடி விழுந்ததும் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி‘(தடுக்கும் சக்தியோ, ஏற்கும் சக்தியோ அல்லாஹ்விடமிருந்தன்றி வேறில்லை) என்றும்  சொன்னார்கள். மூன்றாவது அடி விழுந்ததும் ‘திருக்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் என்றும், நான்காவது அடி விழுந்ததும் ‘இறைவன் எங்களுக்;கு விதிக்காதது எங்களைத் தொடாது என்று கூறுவீராக! என்ற திருவசனத்தை ஓதினார்கள்.
எட்டாவது அடி விழுந்ததும் பைஜாமாவின் கயிறு அறுந்து போய்விட்டது. பைஜாமா இடுப்பை விட்டு கீழே விழுந்து விடலாம் என்ற நிலையை அடைந்து விட்டது. கைகள் கட்டப்பட்டிருந்தன. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இமாம் அவர்களின் கண்களில் உருக்கம் தோன்ற முகத்தை வானை நோக்கித் தூக்கி உதட்டை உசுப்பினார்கள். அவ்வளவுதான். அவர்களுடைய பைஜாமாக் கயிறு இறுக்கிக் கட்டப்பட்டது போல, தன் பழைய இடத்தை விட்டு இறங்காமல் நின்று விட்டது. கூடியிருந்த அத்தனை பேரும் இந்த அதிசயத்தைக் கண்டனர்.
இவ்விசயம் கலீபாவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இமாம் அவர்களை விடுதலை செய்யச் சொன்னார். அதற்குள் இமாம் அவர்களுக்கு இருபத்தி ஐந்து அடிகள் கொடுக்கப்பட்டு விட்டன. இமாம் அவர்கள் மயங்கி கீழே விழுந்து விட்டார்கள். கை கட்டுகள் அவிழக்கப்பட்டன. இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 221 ரமலான் மாதம் பிறை 25 அன்று நடைபெற்றது.
இவ்வாறு கஷ்டப்பட்‘டும், கசையடி வாங்கியும் நோன்பை விடவில்லை. இரத்தம் உடலிலிருந்து வழிந்து கொண்டிருக்கும்போதே அஸர் தொழுகை தொழுதார்கள். இதுபற்றி கேட்கப்பட்டபோது, ஆம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தபோது தொழுதிருக்கிறார்களே! என்று பதிலுரைத்தனர்.
இந்த கண்டத்திலிருந்து இமாம் அவர்கள் சிரமப்பட்டு உயிர் தப்பினார்கள். ஆனாலும் இமாம் அவர்களின் கை, கால், உதடு முதலியவற்றில் குளிமை தங்கி அவர்களுடைய மரணம் வரை அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.
இந்த சத்தியசோதனையில் இமாம் அவர்கள் காட்டிய உறுதியையும், நிதானத்தையும் போற்றாத பெரியார்கள் இல்லை எனலாம். இச்சம்பவத்திற்குப் பிறகு இமாம்அவர்கள் வெளியே செல்வதே இல்லை. ஜும்ஆ, ஜமாஅத் எதற்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிலேயே தொழுது கொள்வார்கள். ஹதீது விளக்க வகுப்புகளை நிறுத்திவிட்டார்கள். இமாம் அவர்கள் கலீபா முஃதஸிமை மன்னித்து விட்டார்கள். அதேபோன்று தங்களுக்க கொடுமை செய்த முஃதஜிலாக்களையும் மன்னித்து விட்டார்கள்.
கலீபா முஃதஸிம்பில்லாஹ் இறந்ததும் அவர் மகன் அபூ ஜஃபர் ஹாரூன் கலீபாவானார்.இவரும் முஃதஜிலா கொள்கையை பின்பற்றினார். இவர் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவருக்குப் பின் இவரது சகோதரர் அபு பழ்லு ஜஃபர் ஆட்சி செய்தார். இவர் பதவி ஏற்றதும் முதல் வேலையாக திருக்குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல. அனாதியானதுதான் என்று பிரகடனம் செய்தார். அத்துடன் திருக்குர்ஆன் படைக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. முஃதஜிலா அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இமாம் அவர்களுக்கு கலீபா தம் தந்தை செய்த கொடுமைக்கு மாற்றாக மரியாதை  கொடுக்க நாடி இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வருமாறு தமது பக்தாத் பிரதிநிதியான இஸ்ஹாக் அவர்களுக்கு கலீபா ஆணை பிறப்பித்திருந்தார். ஆனால் இதற்கு இமாம் அவர்கள் மறுத்து விட்டார்கள்.
அதே சமயம், இமாம் அவர்கள் சாதாத் மார்களுடன் சேர்ந்து சதி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதாக ஒருவர் கலீபாவுக்கு கடிதம் எழுதினார். அதை நம்பிய கலீபா இமாம் அவர்களின் வீட்டை சோதனை செய்ய உத்தரவிட்டார். அச்சோதனையில் ஒன்றும் வித்தியாசமான பொருட்கள் ஏதும் இல்லை.
கலீபா இச்செய்தி கேட்டு வருத்தப்பட்டு இமாம் அவர்களுக்கு பத்தாயிரம் திர்ஹம் அன்பளிப்பாக அனுப்பினார். இதை இமாம் அவர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் கொண்டு சென்றவர் நீங்கள் ஏற்க மறுத்தால், கலீபா இன்னும் சந்தேகம்  கொள்வார் என்ற சொன்னதால் அதை வாங்கிக் கொண்டார்கள். அவர் போனதும் அதை பக்தாதை சுற்றியுள்ள ஏழை முஹத்திஸுகள், பகீஹுகள் ஆகியோரிடையே விநியோகித்து விட சொன்னார்கள். அவ்வாறே விநியோகம் செய்யப்பட்டது.
கலீபா ஒருசமயம் இவர்களுக்கு பெரும் தொகை ஒன்றை அன்பளிப்பாக அனுப்பினார். அதை அவர்கள் பிடிவாதமாக ஏற்க மறுத்து விட்டார்கள். அதைக் கொணர்ந்தவர் அதை ரகசியமாக இமாம் அவர்களின் புத்திரர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டார். இதை அறிந்த கலீபா இமாம் அவர்களின் புத்திரர்களுக்கு நாலாயிரம் திர்ஹங்களை மானியமாக ஏற்படுத்தினார். இதுபற்றி இமாம் அவர்கள் கேள்விபட்ட போது மிகவும் வேதனைப் பட்டார்கள். புதல்வர்களை அழைத்து, நான் இன்னும் சில நாட்களே உயிரோடிருப்பேன். அதற்குள்ளேயே நீங்கள் கலீபாவிடம் மானியங்களை ஏற்றுக் கொண்டு விட்டீர்களே! இதனால் அல்லாஹ்வின் சமூகத்தில் எனது நிலை என்னாகுமோ? என மிகவும் அஞ்சுகிறேன் என்று வருத்தத்தோடு கூறினார்கள்.
கலீபாவிடமிருந்து மட்டுமல்ல, வேறு எந்த செல்வந்தரிடமிருந்தும் இமாம் அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொண்டதில்லை.
‘எங்கள் உறவினர்களில் பலர் ஏதாவதொரு வகையில் உபகாரச் சம்பளம் பெற்று வந்தனர். எனவே அவர்களுடைய வீடுகளில் நாங்கள் வெறும் தண்;ணீர் கூட குடிக்கக் கூடாது என்று தந்தையார் அவர்கள் எங்களை தடுத்திருந்தார்கள்‘ என்று இமாம் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் சொன்னார்கள்.
கலீபா அவர்களின் ஒரேயொரு வேண்டு கோளை மட்டும் இமாம் அவர்கள் நிறைவேற்றினார்கள். அது திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டதல்லளூ அனாதியானது என்பதைப் பற்றி விளக்கமான நூல் ஒன்றை எழுதினார்கள்.
மறைவு:
ஹிஜ்ரி 241 ரபீயுல் அவ்வல் தொடக்கத்திலேயே இமாம் அவர்கள் மரணப்படுக்கையில் விழுந்து விட்டார்கள். இமாம் அவர்கள் காலமாவதற்கு ஐம்பது நாட்;களுக்கு முன்னர் கூட அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு முன் பிறந்த குழந்தை நடக்கும் பருவத்தை அடைந்திருந்தது. இவ்விரு குழந்தைகளை வரவழைத்து பரிவுடன் தடவிக் கொடுத்து, துஆச் செய்தார்கள்.
தங்களுக்கு ஒளுச் செய்து வைக்கும்படி சொன்னார்கள். அவ்வாறே ஒளு செய்து வைக்கப்பட்டது. நன்றாக தேய்த்துக் கழுவும்படி சொன்னார்கள். அவ்வாறு கழுகும்போது திக்று செய்து கொண்டே இருந்தார்கள். குளிப்பாட்டி முடித்ததும் அவர்களின் பரிசுத்த ஆன்மா இறைவன் திருவடியை நாடிச் சென்று விட்டது.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஹிஜ்ரி 241 ரபீயுல் அவ்வல் பிறை 12 வெள்ளிக் கிழமை பகல் (கி.பி. 855 ஜூலை 31) இமாம் அவர்கள் காலமானார்கள்.
இமாம் அவர்களின் மரணம் கேட்டு பக்தாத் நகரமே திரண்டு வந்தது.தலைநகரிலிருந்து இமாம் அவர்களை குளிப்பாட்டுவதற்கென்றே 72 பனூஹாஷிம்கள் வந்திருந்து அந்தப் பணியைச் செய்தனர். ஜும்ஆத் தொழுகைக்கு முன்னர் புறப்பட்ட மைய்யித் அஸர் தொழுகைக்கே அடக்குமிடத்தை அடைய முடிந்தது. பலதடவை ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பல இலட்சம் பேர் கலந்து கொண்டனர். பக்தாதிலுள்ள வீரத் தியாகிகளின் அடக்கஸ்தலத்தில் -மகா பிருஷ் ஷுஹதா இமாம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் திகிரிஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இமாம் அவர்களின் அடக்கஸ்தலம் அழிக்கப்பட்டு போனதாக சொல்லப்படுகிறது.
நூல்கள்:
மிகப்பிரபலமான நூலான ‘முஸ்னது‘ என்ற ஹதீதுகளின் தொகுப்பு நூலை எழுதினார்கள். இன்றும்  அது மதித்துப் போற்றப்படுகிறது. சுமார் இருபத்தி எட்டாயிரம் ஹதீதுகளைக் கொண்ட இந்தக் கிரந்தத்தை தொகுத்து வெளியாக்கியவர் இமாம் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் ஆவார்.
இதுவன்றி ‘கிதாபுஸ் ஸலாத் , கிதாபுல் அமல், கிதாபுத் தப்ஸீர், ரத்து அலல் ஜனாதிகா (திருக்குர்ஆன் உருவாக்கப்பட்டது என்பதற்கு மறுப்புகள் அடங்கியது), கிதாபுஜ் ஜுஹ்து, கிதாபுல் மனாஸிக், கிதாபுல் ஈமான், கிதாபுல் மனாகிபு அலீ, கிதாபுத் தாரீக் ஆகியவை இமாம் அவர்களின் முக்கிய நூல்களாகும்.
இமாம் அவர்கள் பிக்ஹு சம்பந்தமாக தனியாக நூற்கள் எதும் எழுதவில்லை. தங்கள் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்களும், அவர்கள் கொடுத்த மார்க்கத் தீர்ப்புகளும்தான் தொகுக்கப்பட்டு ஹன்பலி மதஹபின் பிக்ஹுவாக ஆக்கப்பட்டன. இவற்றுல் மஸாயிலு ஸாலிஹ் என்பது அவர்களுடைய மூத்தபுதல்வர் ஸாலிஹ் பிக்ஹு சம்பந்தமாகக் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்த பதில்கள் அடங்கியதாகும். இதுபோன்று இமாம் அவர்கள் கொடுத்த தீர்ப்புகுள் மட்டும் இருபது நூல்களில் தொகுக்கப்பட்டன. இவை யாவும் அவர்களுடைய மாணவர்களாலேயே தொகுக்கப்பட்டன.
இவையே ஹன்பலி மத்ஹப் ஆயிற்று. இந்தமத்ஹபில் சுயமான அபிப்பிராயத்திற்கு அதிகமான இடம் தரப்படவில்லை. சகல விஷயங்களையும் ஹதீது அடிப்படையில் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் நூற்றி இருபது மாணவர்கள் இந்த மத்ஹபின் மூலச் சட்டங்களை உருவாக்கி அதை நெடுகிலும் பரப்பினர். இமாம் அவர்களிடம் கல்வி கற்ற அவர்களுடைய இரண்டு புதல்வர்களையன்றி அஸ்வத், ஷாதான், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, வகீவு, யஹ்யா பின் ஆதம், யஜீத் பிக் ஹாரூன் அபூ பக்ருல் அஸ்ரம், ஹர்பு, பகீ, ஹன்பல் பின் இஸ்ஹாக், ஷாபீன், மைமூனி, அபுல் காஸிம் ஆகியோர் முக்கியமான மாணவர்கள். ஹதீது தொகுப்பாளர்களான இமாம் புகாரி, அபூதாவூது, முஸ்லிம் ஆகியோர்களும் இமாம் அவர்களிடம் பாடம் கேட்டுள்ளனர்.
மிகக் குறைந்த அளவினர் பின்பற்றும் மத்ஹபாக இந்த மத்ஹப் இருக்கிறது.
சுப்யானுத் தௌரியின் மரணத்தால் பயபக்தியே மறைந்து விட்டதுளூ இமாம் ஷாபியீயின் மறைவால் புனித சுன்னத்தே மறைந்து விட்டதுளூ இமாம் அஹ்மது இப்னு ஹன்பலின் மறைவால் சன்மார்க்கத்தின் அடிப்படையே ஆட்டங் கண்டு, புதுமையான காரியங்கள் மிகைத்து விடுமோ என்று அஞ்சுகிறேன்‘ என்று இமாம்  புகாரியின் ஆசானும் அஹ்மது இப்னு ஹன்பலின் மாணவருமான ஹுதபா அவர்கள் கூறியுள்ளார்கள்.
முடிவுரை:
மறுமையில் ஈடேற்றம்  பெறுபவர்களான சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மத்ஹபுகள் ஹனபி, மாலிகி, ஷாபிஈ, ஹன்பலி ஆகியவைகளாகும். இதில் ஒரு மத்ஹபை முழுமையாகப் பின்பற்றியே தீர  வேண்டும். அதேசமயம் மற்ற மத்ஹபுகளையோ, மற்ற இமாம்களையோ குறைகூறவோ, விமர்சிக்கவோ கூடாது.
இந்த நான்கு மத்ஹபும் திருக்குர்ஆன், ஹதீதுகள் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நேர்வழி இந்த மத்ஹபில்தான் இருக்கிறது. இதில் ஒன்றைப் பின்பற்றாதவன் வழிதவறியவன் ஆவான்.
இதற்காக இதை உருவாக்கியவர்கள் கடும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த இமாம்களின் சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக! அவர்களுக்கு சுவனத்தில் நிலையான இடத்தை தந்தருள்வானாக! அவர்களின் அடியொற்றி நடக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நஸீபாக்கி வைப்பானாக!ஆமீன்.
ஆதாரம்: நான்கு இமாம்கள் சரிதை

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!