இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு
இமாம் அவர்களின் இயற் பெயர் முஹம்மது. இடுகுறிப் பெயர் அபூ அப்துல்லாஹ். பட்டப் பெயர் நாஸிருல் ஹதீது. எனினும் அவர்களுடைய பாட்டனாரின் பாட்டனார் பெயரான ஷாபியீ என்பதே அவர்களுடைய உலகம் போற்றும் பெயராக நிலைத்து விட்டது.
நபிபெருமானாரின் முன்னறிவிப்பு:
குறைஷி குலத்தைச் சேர்ந்த ஆலிம் ஒருவர் பூமியின் பல பாகங்களிலும் அறிவை-மார்க்க ஞானத்தை நிரப்புவார்‘ என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். இது இமாம் ஷாபியீதான் என்பது அஹ்மது இப்னு ஹன்பல் போன்ற பல இமாம்களுடைய கருத்தாகும்.
வமிசவழி:
அரேபியாவிலுள்ள உயரிய குலமான குறைஷி குலத்தை சார்ந்தவர்கள். முஹம்மது பின் இத்ரீஸ் பின் அப்பாஸ் பின் உதுமான் பின் ஷாபியீ பின் ஸாயிப் பின் உபைதா பின் அப்து பின் ஹாஷிம் பின் அப்துல் முத்தலிப் பின் அப்த மனாப் ஹாஷிமி.
இந்த வகையில் இவர்களுடைய பரம்பரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுடைய குடும்பத்தோடு போய் சேருகிறது. இந்த வரிசையிலுள்ள ஸாயிப் என்பவர் பத்ரு போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டு முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிமாகி நபிபெருமானாரின் தோழர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவருடைய புதல்வர் ஷாபியியும் நபி பெருமானாரோடு நன்கு பழகியவராவார்.
இமாம் அவர்களுடைய தாயாரும் எமன் நாட்டிலுள்ள பிரபலமான அஜ்து என்ற கூட்டத்தைச் சேர்ந்த உயர்குல பெண்மணியாவார்கள்.இமாம் அவர்கள் சிறு வயது பாலகராக இருக்கும் போதே தந்தை அவர்கள் காலமாகி விட்டார்கள்.
அன்னையார் அவர்கள் தம் பாலகரை அழைத்துக் கொண்டு எமன் நாட்டிலுள்ள தம் சகோதரர் இல்லத்துக்கு போய் சேர்ந்தார். இமாம் அவர்கள் எட்டு வயது வரை அங்கேயே வளர்ந்து திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாக ஆகிவிட்டார்கள்.
தோற்றப் பொலிவு:
இமாம் அவர்கள் சிவந்த நிறத்தினர். நடுத்தரமான உயரம் உடையவர்கள். கைகள் நீண்டும், நெற்றி அகன்று பெரியதாகவும், வதனம் புன்னகை தவழுவதாகவும் விளங்கியது. பார்வை கம்பீரமானதாக இருந்தது.முத்துப் போன்ற வரிசையான பற்கள் இருந்தன. அடர்ந்த நடுத்தர அளவோடு கூடிய தாடியும் வைத்திருந்தார்கள். அம்மை வடுக்கள் போன்ற சில தழும்புகளுடன் கூடிய நீண்ட மூக்கு அவர்களுடையது.
மிருதுவான உடையையும், கித்தான் உடையையும் உடுப்பார்கள். பருத்திப் போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். நடுத்தரமான தொப்பியும், தலைப்பாகையும், காலுக்கு மேஜோடும் விரும்பி அணிவார்கள்.
குடும்பம்:
மக்காவில் ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சந்ததியரான குறைஷி மாதான ஹம்தா என்பவரை மணந்திருந்தார்கள். அவர்கள் நன்றாக கவி பாடக் கூடியவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் பிறந்திருந்தனர். ஆண்களில் இருவர் சிறு வயதிலேயே காலமாகி விட்டார்கள். அபூ உதுமான் முஹம்மது என்ற ஒரு புதல்வர் மட்டும் இருந்தார்கள். பெண் குழந்தைகளின் பெயர் பாத்திமா, ஜைனப் என்பனவாகும்.
இமாம் அவர்களின் புதல்வர் அபூ உதுமான் அவர்கள் இமாம் ஹன்பலி அவர்களிடமே கல்வி பயின்றார்கள். இவர்கள் ஹலபு, ஜஸாயிர் ஆகிய நகர்களில் காஜியாகப் பதவி வகித்துப் பின் ஹிஜ்ரி 240ல் காலமானார்கள்.
நற்குணங்கள்:
இமாம் அவர்கள் கொடை கொடுக்கும் வள்ளலாக இருந்துள்ளார்கள். சிறுவயதிலேயே கஷ்டத்தை அனுபவத்திருந்ததால் வறியவர்களின் துயர் அறிந்து வாரி வழங்குவார்கள். இமாம் அவர்களுக்கு கலீபாவும், மந்திரிகளும், பிரபுக்களும் கொடுக்கும் காணிக்கைகளை கால் பகுதியை மட்டும் தங்களுக்கு வைத்து விட்டு முக்கால் பகுதியை மறுநாள் வரும்முன்பே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.
விருந்துபசாரத்தில் சிறந்து விளங்கினார்கள். தங்களுடைய மாணவர்களுக்கும், தங்களோடு
பழகியவர்களுக்கும் அடிக்கடி விருந்து அளிப்பார்கள். விருந்தில் ஹல்வா, பலூதா போன்ற இனிப்புப் பதார்த்தங்கள் இருக்கும்.
தாங்கள் சிறந்த அறிவாளியாக இருப்பினும் மற்றவர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள்.
இமாம் அவர்களிடம் கற்ற சுமார் நூற்றி அறுபது பேரைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களில் இமாம் புகாரியின் குருநாதரான இமாம் ஹுமைதி, அபூ முஹம்மது, ஹர்மலா, அபூ இப்றாஹீம், இஸ்மாயில் பின் யஹ்யா, அபூ தௌர், ரபிஉ சுலைமான், அபூ யஃகூப், இமாம் பைஹகி, இப்னு ஹஜர் ஆகியோர் இஸ்லாமிய உலகில் புகழ் பெற்றுள்ளனர்.
இமாம் அவர்களுக்கு யாரேனும் சிறிய உதவி புரிந்தாலும் அதற்காக இரண்டுமடங்கு சன்மானத்தைக் கொடுப்பார்கள்.
அன்றாட அலுவல்கள்:
இமாம் அவர்கள் தினமும் சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சூரியோதயம் வரை ஃபிக்ஹு வகுப்பு நடத்துவார்கள். பின்னர் ஹதீது வகுப்புகள் தொடங்கும். அதற்குப் பின்னர் மார்க்க விளக்கங்கள் நடைபெறும். அதன்பின் பல்வேறு மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படும். லுஹர் தொழுகைக்குப் பின் இலக்கியம், கவிதை, யாப்பிலக்கணம், சொல்லிலக்கணம் குறித்து பாடங்கள் நடைபெறும். அஸரு தொழுதபின் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மக்ரிபு வரை திக்ரு இலாஹி நடத்துவார்கள். இஷா தொழுதபின் படுக்கப் போய் விடுவார்கள்.
இமாம் அவர்கள் இரவை மூன்று பகுதிகளாக பிரித்து, முற்பகுதியில் தூங்கி விட்டு, இரண்டாம் பகுதியில் எழுந்து ஹதீது, பிக்ஹுகளை எழுதிவிட்டு மூன்றாம் பகுதியில் சுப்ஹு வரை திருக்குர்ஆன் ஓதுதல், நபில் தொழுகை தொழுதல் போன்ற நல் வணக்கங்களை செய்வார்கள்.
தினமும் ஒருமுறை திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து விடுவார்கள்.
கல்வி:
இளமையில் அவர்கள் காட்டிய திறமையும், புத்தி சாதுர்யமும், எதையும் இலகுவாக மனனம் செய்யும் இயல்பை கவனித்த அவரது தாயார் தம் மகனை கல்வி கற்க வைக்க ஆவல் கொண்டார். ஆனால் அதற்கு அவர்களிடம் போதிய வசதி இல்லை. எனவே இமாம் அவர்களுடைய பத்தாம் வயதில் மக்காவிற்கு அவர்களுடைய சிறிய தந்தையிடம் அனுப்பி வைத்தார்கள். சிறிய தந்தையும் கஷ்ட ஜீவனம் நடத்தி வருபவர். எனவே அவர்களை பொருள் கொடுத்து படிக்க வைக்க முடியாதிருந்தது.
இதற்கிடையில் பற்பல பரம்பரையினர் பற்றிய பாடத்தை (இல்முல் அன்ஸாபை)இமாம் அவர்கள் நன்கு கற்றுக் கொண்டார்கள். சிறிய தந்தையுடன் மக்காவின் சுற்றுப் புறங்களில் வேலைக்காக செல்லும் போது ஆங்காங்குள்ள வழக்கு மொழிகளையும், பாடல்களையும் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
முறைப்படி படிப்பதற்கு வாய்ப்பற்ற இமாம் அவர்கள் பல்வேறு இடங்களிலும் நடக்கும் ஹதீது விளக்கங்களையும், மார்;க்;;;;;;;;;;;;;;;;க சொற்பொழிவுகளையும் ஆவலோடு சென்று கேட்பார்கள். கடைசியில் மதரஸா ஒன்றில் ஏழை மாணவராகப் போய் ஒதுங்கிய அவர்களால் ஆசிரியருக்கு எதுவும் கொடுக்க இயலாதிருப்பினும் அவரும் அவர்களிடம் பாடம் கேளாமலும், அவர்களைக் கவனியாமலும் புறக்கணித்து விட்டார். ஆனால் கல்வி அவர்களை புறக்கணிக்க வில்லை. வகுப்பில் தாங்கள் கேட்டதை வீடு சென்றதும் எழுதி மனப்பாடம் செய்து கொள்வார்கள். தாம் கற்ற பாடங்களை மற்ற மாணவர்களுக்குப் போதிக்கும் அளவுக்கு திறமையுடையவர்களாக ஆனார்கள். இதனால் ஆசிரியர் இமாம் அவர்களை முன்வரிசையில் அமர்த்திக் கொண்டார்கள். எனினும் இமாம் அவர்கள் இலவசமாக கல்வி பெறுவதை விரும்பாமல் ஈத்தம் ஓலைகளையும், மட்டைகளையும் பொறுக்கிக் கட்டி எடுத்துக் கொண்டு போய் தமது ஆசிரியர் வீட்டில் போட்டு தமது கல்வி கட்டணத்திற்காக செய்து வரலானார்கள்.
மக்காவில் பிரபல ஹதீது பாட போதனை நிபுணராக திகழ்ந்த பெரியார் முஸ்லிம் பின் காலித் அவர்களிடம் ஹதீது, பிக்ஹ் பாடங்களை சுமார் மூன்று ஆண்டுகள் படித்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரண்டு முறை கனவில் கண்டு அவர்களின் உமிழ்நீரை தங்கள் வாயில் வாங்கி கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.
இமாம் அவர்கள் கவிதை எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி புகழ்ந்து கவிதை எழுதினார்கள். இதைக் கண்ட ஷியாக்கள் அவர்களை காரிஜி என்று தூற்றிய போதும் அதைப் பற்றி கவலைப் படாமல் நபிகளாரை புகழ்ந்து கவிதை எழுதிக் கொண்டே இருந்தார்கள்.
வசன நடை, அரபு மொழி அகராதி பயிற்சி, அரபி இலக்கியம் போன்றவற்றில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்கள் ஹுஜைல் இனத்தாரின் பத்தாயிரம் பாடல்களையும், சொல் வழக்கற்றுப் போன அகராதியின் பதங்களையும் மனப்பாடமாக்கி இருந்தார்கள்.
அதேபோல் வரலாற்றுப் பாடங்களிலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். ‘இமாம் ஷாபியீ வரலாற்றுப் பாடத்தில் தன்னகரில்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள்‘ என்று ‘மிர்அதுல் ஜினான்‘ என்ற வரலாற்று நூலாசிரியர் கூறுகிறார்.
வானநூல், ஜோதிடம் முதலியவற்றிலும் இமாம் அவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
இமாம் அவர்கள் கைதேர்ந்த வைத்தியராக விளங்கினார்கள். உடல்கூறு நுட்பங்களையும், மருந்துகளின் தன்மையையும் அறிவதற்காக அவர்கள் கிரேக்க வைத்திய நிபுணர்களான கேலன், அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலியவர்களின் நூற்களை விரிவாக கற்றுள்ளார்கள்.
மனிதனுடைய முகச் சாயல், அங்க அமைப்பு ஆகியவற்றை வைத்து மனிதனுடைய இயல்பைக் கூறும் ஆரூடத்தில் (இல்மு பிராஸத்) இமாம் அவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.இதை யமனிலிருக்கும் போது கற்றதாக சொல்கிறார்கள்.
இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி:
இமாம் அவர்கள் இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்க முடிகட்டித் தங்கள் ஆசான் முஸ்லிமிடம் தமது ஆசையைத் தெரிவித்தார்கள். அந்தப் பெரியார் அதற்காக தங்கள் ஆசியை நல்கியதுடன், இமாம் மாலிக் அவர்களுக்கு சிபாரிசு கடிதம் ஒன்றும் கொடுத்தார்கள்.
மதீனா சென்று இமாம் மாலிக் அவர்களை சந்தித்து அவர்களின் பாட போதனை வகுப்பில் சேர்ந்து திறம்பட கல்வி கற்றார்கள். ஸஹாபாக்கள், தாபியீன்கள் வரலாறு, மார்க்கத் தீர்ப்புகள், பிக்ஹு போன்ற பாடங்களில் திறமான கல்வியடைந்தார்கள்.
இச்சமயத்தில் புறா விற்பவன் ஒருவன் இமாம் மாலிக்கிடம் வந்தான். சபையில் பாடம் முடிந்து மாணவர்கள் வெளியாகி விட்டனர். இமாம் ஷாபியி மட்டும் அங்கு இருந்தனர். அச்சமயம் மாலிக்கிடம் வந்த மனிதன் நான் புறாவை கூவ வைத்து விற்கும் வியாபாரம் செய்து வருகிறேன். ஒருவரிடம் விற்ற புறா கூவவில்லை என்று ஒருவன் என்னிடம் தகராறு செய்தான். நான் அந்த புறா கூவவில்லையெனில் என் மனைவியை த் தலாச்குச் செய்தவனாகிறேன் என்று சபதம் செய்து விட்டேன். பின் என் ஆத்திரம் தணிந்து யோசித்துப் பார்த்த போது இது தவறென்று தெரிந்தது. ஒருவேளை அந்தப் புறா கூவாவிட்டால் என் மனைவியை நான் தலாக்கு செய்ய வேண்டியதுதானா? இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? என்று கேட்டான்.
இதற்கு மாற்றில்லை. சபதப்படி நடக்க வேண்டியதுதான் என்று மாலிக் இமாம் கூறிவிட்டார்கள். உடனே அவன் வேதனையோடு வெளியேறினான். அவனைப் பின்தொடர்ந்த இமாம் அவர்கள் அவனை அணுகி, அந்தப் புறா கூவுவது அதிகமா? கூவாதது அதிகமா? என்று கேட்க, சற்றே திகைத்த அந்த மனிதன் ‘கூவுவதுதான் அதிகம்‘ என்று பதிலளித்தார்கள்.
உடனே அவனை இமாம் மாலிக்கிடம் அழைத்துச் சென்று, ‘இவன் மனைவி தலாக் ஆக மாட்டாள் என்று கருதுகிறேன் என்று சொன்னார்கள். மாலிக் இமாம் அவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டார்கள். ஷாபியி இமாம் அவர்கள் ஒரு நாள் தாங்கள் சொன்ன ஹதீதுதான் இதற்கு ஆதாரம். அதாவது பாத்திமா பின்த் கைஸ் என்ற பெண்மணி நபி பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் நற்தோழர்களில் இருவரான அபூஜஃமின் என்பவரும்,முஆவியா என்பவரும் என்னை மணக்க விரும்பி பெண் கேட்கிறார்கள். அவர்கள் இருவரில் நான் யாருக்கு வாழ்க்கை பட வேண்டும்? என்று கேட்டாள். அப்போது நபி பெருமானார் ‘முஆவியா தன் கவசத்தைக் கீழே வைக்க மாட்டாதவர் என்பதைத் தெரிந்து கொள்‘ என்று கூறினார்கள். அவர் தூங்கும் போதும், உணவு உண்ணும் போதும் தமது கவசத்தை அப்புறப்படுத்தத்தான் செய்வார் என்பதை நபி பெருமானார் அறிந்திருந்தும், இப்படிக் கூறியதன் கருத்து யாதெனில், பெரும்பாலாக அவர் அப்படியிருப்பதைத் தானல்லவா! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் குறைந்ததைப் புறக்கணிக்கத்தானே நேரும். எனவே, இவனுடைய புறாவும் கூவுவதுதான் அதிகம் என்றதும் நான் அந்த அடிப்படையில் அந்த மிகுதமான அம்சத்தைத்தான் கவனிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்…‘ என்றார்கள். இமாம் மாலிக் அவர்கள்இதன் உண்மையை விளங்கி தீர்ப்பை மாற்றி எழுதினார்கள். இமாம் மாலிக் அவர்களுக்கு இதனால் இமாம் ஷாபியீ அவர்கள் மீது இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாகியது.
என்னிடம் பாடம் கேட்ட அனைவரிலுமே ஷாபியைப் போன்ற மதிநுட்பமுடைய வேறு எவரையும் நான் காணவில்லை என்று இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள். இமாம் அவர்களிடம் அத்தாட்சி பத்திரம் பெற்ற பின் பல்வேறு பெரியார்களிடம் கற்பதற்காகவும், தாம் பெற்ற கல்வியை பூரணமாக்கிக் கொள்வதற்காகவும் தங்கள் ஆசிரியரிடம் விடை கேட்டார்கள். இமாம் அவர்கள் ஆசிர்வதித்து அனுப்பினார்கள். இமாம் மாலிக் அவர்கள் இமாம் ஷாபி அவர்களின் இருத்தி ஒன்பதாம் வயதில் காலமானார்கள். அதுவரை இமாம் ஷாபி அவர்கள் அவர்களின் மாணவராக இருந்தார்கள் என்று சில வரலாற்று நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இமாம் அவர்கள் சுமார் 80 ஆசிரியர்களிடம் பாடம் கேட்டுள்ளனர். அவர்களுள் மஸ்லிம், இமாம் மாலிக் தவிர புலைல் இப்னு இயால், சுப்யான் பின் ஐனா, வகீஉ, யஹ்யா பின் சயீத், முஹம்மது பின் இஸ்மாயில், முஹம்மது ஹஸன், அப்துல்லா இப்னு முபாரக், இப்றாஹிம் பின் சஅத், அப்துல்லாஹ் பின் நாபிஃ போன்ற நாதாக்களும், இமாம்களும் முக்கியமானவர்கள். இமாம் மாலிக் அவர்களிடமிருந்து சுமார் பத்தாயிரம் ஹதீதுகளையும், மார்க்கத் தீர்ப்புகளையும் பயின்று மனனம் செய்துள்ளார்கள்.
இதன்பின் இமாம்அவர்கள் மக்கா சென்று, அங்கே தங்கள் உறவினர்களைப் பார்த்தார்கள். அங்கு பிரபலமான ஹதீது போதகரான இமாம் சுப்யான் இப்னு ஐனாவை அணுகி சில மாதங்கள் ஹதீது விளக்கங்களை கேட்டார்கள். தங்களுடைய முப்பது வயது அடைந்த நிலையில், தம்முடைய பிரதான ஆசான் மாலிக் இமாம் காலமானதன் நிலையிலும் தாங்களே சுயமாக மார்க்கத் தீர்ப்பு வழங்க நாடினார்கள். இதற்காக இமாம் சுப்யான் இப்னு ஐனாவை அணுகி அனுமதி வேண்டி நின்றார்கள்.
இமாம் அவர்களுக்கு ஐனா அவர்கள் பல கேள்விகளை கேட்டு திருப்தி பட்டுக் கொண்டபின் ஷாபி இமாமுக்கு பத்வா கொடுக்க அருகதை உள்ளது என்று அத்தாட்சி வழங்கி துஆவும் செய்து ஆசிர்வதித்தார்கள்.
அரசுப் பதவி:
பக்தாதிலிருந்து கலீபா ஹாரூன் ரஷீது அவர்களின் தலைமை அதிகாரியொருவர் மக்கா வந்தார். அவர் ஷாபி இமாமை எமன் தேசத்துக்கு அரசு அதிகாரியாக நியமனம் செய்து விட்டார். முப்பதாவது வயதில் தங்கள் தாயாரின் இடமான எமன் சென்று இப்பதவியை ஏற்றுக் கொண்டு பின்பு பதவியுயர்வு பெற்று அந்த வட்டார நிர்வாகியாகவும் ஆகி விட்டார்கள்.
இந்த பதவியில் இருந்து கொண்டே தங்கள் கல்வியை விருத்தி செய்து கொண்டார்கள். எமனில் பிரசித்திப் பெற்ற ஹுஜைல் கிளையாரோடு நெருங்கி பழகி அரபு அகராதி, சரிதை, சொல்லிலக்கணம், யாப்பிலக்கணம் ஆகியவற்றில் திறமை பெற்றார்கள்.
இச்சமயத்தில் குறிபார்த்து அம்பெய்வதில் தனியாக தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
எமனில் கலீபாக்களின் பிரதிநிதியாக அதிகாரம் வகித்த இமாம் ஷாபி அவர்கள் தங்கள் நேரிய நடத்தையாலும், உயரிய ஒழுக்கத்தாலும், இனிய சுபாவத்தாலும் ஏழைகளுக்கு இரங்கும் இயல்பாலும் பொதுமக்களுடைய அன்பை பெற்று விட்டார்கள். இது சிலருக்கு பொறாமையை தூண்டி விட்டது. கலீபாவுக்கு இமாம் அவர்களைப் பற்றி அவதூறு பரப்பி விட்டனர்.
கலீபா இமாம் அவர்களை கைது செய்து வரும்படியும் அத்துடன் அப்பகுதியிலுள்ள சாதாத்துமார்களையும் கைது செய்து வரும்படியும் அப்பகுதி ராணுவ அதிகாரி ஹம்மாத் பர்பரி என்பவருக்கு உத்தரவு இட்டார். அதன்படி அவர் செயல்படுத்தியும், ஒருநாள் கலீபாவின் அவைக்கு இவர்கள் கொண்டு வரப்பட்டு இமாம் அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு இமாம் அவர்களின் அறிவாற்றலையும், திறமையையும் உணர்ந்து அவர்களை விடுதலை செய்தார்.
அதன்பின் மீண்டும் எமனில் பழைய வேலையை ஏற்க கலீபா வற்புறுத்தியும் அவர்கள் விரும்பவில்லை. பின்னர் மக்கா திரும்பிய இமாம் அவர்கள் மக்காவின் முப்தியாக நியமனக் கடிதம் கலீபாவிடமிருந்து கிடைக்கப் பெற்றனர். இதை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக பயன்படுத்தினர் இமாம் அவர்கள். தாங்களே ஒரு மத்ரஸாவைத் தொடங்கிஹதீது, பிக்ஹு பாட போதனை அளிக்க வேண்டும், மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று கொண்டிருந்த ஆர்வம் இப்போது நிறைவேறிற்று. நெடுகிலிருந்தும் இமாம் அவர்களின் மத்ரஸாவைத் தேடி மக்கள் வரலாயினர்.
ஹிஜ்ரி 195 (தங்களுடைய நாற்பத்தைந்தாவது வயது வரை) வரை இமாம் அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்து மகத்தான மார்க்கச் சேவை செய்தார்கள். இமாம் அவர்களை ஹாரூன் ரஷீத் பக்தாது அழைத்தார். பக்தாத் சென்ற இமாம் அவர்களுக்கு மகத்தான வரவேற்பை கலீபா கொடுத்தார். அங்கு இமாம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு கண்டு அனைவரும் இப்படி சிறப்பான சொற்பொழிவைக் கண்டதில்லை என்று வியந்தனர்.
கலீபாவுக்கு இமாம் அவர்கள் மீது இருந்த மதிப்பு மிகவும் அதிகமானது. அவர்கள் விரும்பும் எந்தப்பகுதிக்கும் நீதிபதியாக நியமிப்பதாகத் தெரிவித்தார். அதை இமாம் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
பக்தாத்தில் இரண்டாண்டுகள் தங்கி மார்க்கத் தீர்ப்புகள் வழங்கவும், மார்க்க உபன்னியாசங்கள் புரியவுமாக அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். எண்ணற்றவர்கள் இமாம் அவர்களால் பயனடைந்தார்கள்.
பாக்தாதிலும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பல்வேறு நகரங்களிலும் இமாம் அபூஹனீபா வகுத்துத்தந்த பிக்ஹு மஸ்அலாக்களை ஒட்டியே அப்போது தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது.
ஆனாலும் கலீபாவின் அவையில் இமாம் ஷாபி அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டு வந்தது. ஹிஜ்ரி 193ல் கலீபா ஹாரூன் ரஷீத் காலமானதுடன் ஹாரூனின் மூத்த மகன் அமீன் ஆட்சியேறினார். இவர் கேளிக்கை பிரியராக இருந்ததால் இமாம் அவர்கள் அரசவைத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டனர். ஹிஜ்ரி 197ல் அமீன் ஆட்சியில் குழப்பம் மிஞ்சியதும் அங்கிருந்து புறப்பட்டு மக்காவுக்கு ஹஜ்ஜு செய்வதற்காக புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஹிஜ்ரி 198ல் மாமூன் கலீபாவானார். இவரின் காலத்தில் முஃதஜிலாக்கள் கை ஓங்கி இருந்தது. இதுகண்டு மனவெறுப்படைந்த இமாம் அவர்கள் பக்தாதை விட்டுக் கிளம்பி எகிப்து சென்று விட முடிவு செய்து ஹிஜ்ரி 198ல் அங்கே போய் விட்டார்கள்.
இமாம் மாலிக் அவர்களின் மத்ஹபை; பின்பற்றியவர்கள் அதிகம் எகிப்தில் இருந்தனர். இமாம் மாலிக் அவர்களின் தலையாய மாணவர் ஷாபியை அவர்கள் வரவேற்க ஆவல் கொண்டிருந்தனர். ஆதரவும் நல்கினர். ஆனால் வெகு விரைவில் அன்னவர்களால் இமாம் அவர்கள் மீது கோபம் கொள்ளப்பட்டனர். ஏனெனில் இமாம் அவர்களின் சுய அபிப்பிராயம் மாலிக் இமாம் அவர்களின் அபிப்பிராயத்திற்கு மாறு பட்டிருந்ததே காரணம்.
இமாம் அவர்களின் தாய் வழியைச் சேர்ந்த அஜ்து இனத்தார் சிலர் கெய்ரோவில் இருந்தனர். இமாம் அவர்கள் அவர்களோடுதான் தங்கியிருந்தார்கள். கெய்ரோவில் மத்ரஸா ஏற்படுத்தி ஹதீது, பிக்ஹு வகுப்புகளை நடத்தலானார்கள். மார்க்க சம்பந்தமான தீர்ப்புகளை வழங்கலானார்கள். இச்சமயத்தில் பல அருமையான நூல்களை எழுதவும் செய்தனர். சுமார் ஆறு ஆண்டுகள் இமாம் அவர்கள் அங்கு தங்கி மார்க்கச்சேவை செய்தனர்.
மறைவு:
இச்சமயம் அவர்களுக்கு மூல வியாதி வந்து விட்டது. அதனால் ஆசனவாயிலிருந்து இரத்தம் விழலாயிற்று. இதற்கிடையிலும் அவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகவே செய்து கொண்டு வந்தனர். இரண்டு மூன்று ஆண்டுகளாக வேதனைப்படுத்திய மூல வியாதி அதிகமாகி அவர்கள் வாகனத்தில் அமர்ந்தால் இரத்தம் பீறிட்டு வாகனத்தில் போடப்பட்டிருக்கும் துணியையெல்லாம் நனைத்து விடும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.
இந்நிலையில் மாலிக்கி மத்ஹபைச் சேர்ந்த வக்கிர மனம் படைத்தவர்கள் சிலர் இமாம் அவர்களிடம் கடுமையான துவேஷம் கொண்டு அவர்கள் மாண்டு போனால் மிகவும் நல்லதாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர்.இச்சமயத்தில் இமாம் அவர்கள் அளித்த மார்க்கத் தீர்ப்பு மாலிக்கி மத்ஹபினரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அப்போது கெய்ரோவில் மாலிக் மத்ஹபின் தலைவர்களுள் ஒருவரான இருந்த பீத்தான் பின் அபிஸ் ஸம்உ என்பவன் வெறி தலைக்கேறியவனாக இமாம் அவர்கள் முன் நின்று அவர்களை திட்டலானான். இதனால் அவன் காவலதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டான். ஆகவே ஆத்திரம் மேலும் அதிகமாக இமாம் அவர்களை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான். இமாம் அவர்கள் ஒருநாள் இரவு இருளில் தனியாக போய்க் கொண்டிருக்கும் போது சம்மட்டியால் அவர்களின் தலையில் பீத்தான் அடித்து விட்டான். இரத்தம் பீறிட்டு பாய இமாம் அவர்கள் கீழே சாய்ந்தார்கள். கட்டுடன் படுத்த படுக்கையில் இருந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
இஷாத் தொழுகை நேரம் நெருங்கியதும் அந்த நேரத் தொழுகையை தொழுதார்கள். அதேநிலையில் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு அவர்களுடைய புனித ஆன்மா அவர்களின் உடலை விட்டுப் பிரிந்தது. ஹிஜ்ரி 204 ரஜப் மாதம் பிறை 30 (கி.பி. 720 ஜனவரி 20) வெள்ளிக்கிழமை இரவில் காலமானார்கள். அப்போது அவர்களுடைய வயது 55.
இமாம் முஜ்னி அவர்கள் இமாம் அவர்களின் சடலத்தை குளிப்பாட்டினார்கள். ஜும்ஆத் தொழுகை முடிந்ததும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் கெய்ரோவில் மக்தம் மலையடிவாரத்தில் ‘புஸ்தாத்‘ என்ற இடத்திலுள்ள கராபத்துஸ் ஸுக்ரா‘ என்ற அடக்க ஸ்தலத்தில் அசர் தொழுகைக்கு முன்பே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த அடக்கஸ்தலத்தையொட்டி சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி அவர்கள் மத்ரஸா ஒன்றை நிர்மாணித்தார். இன்று இமாம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீது காணப்படும் குப்பா ஐபூபி அரசர் மலிக்குல் காமில் என்பவரால் கட்டப்பட்டதாகும்.
இமாம் எழுதிய நூற்கள்:
இவர்கள் மொத்தம் நூற்றி பதிமூன்று நூற்கள் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களின் மூலங்களாக விளங்கும் மகத்தான நூற்கள் மட்டும் பதினான்கு ஆகும்.
உஸூலுல் பிக்ஹு என்ற பிக்ஹின் சட்டமுறையை வகுத்துத் தந்தவர்கள் இவர்கள்தான்.
இமாம் அவர்கள் கெய்ரோவிலும், பக்தாதிலும் இருக்கும்போதுதான் பெரும்பாலான நூற்களை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பக்தாதிலிருந்த போது ஆக்கிய நூற்களை அவர்களுடைய மாணவர்களான இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், ஜபரானி, அபூ தௌர், கராபீஸீ ஆகியோர் தொகுத்ததாகவும், கெய்ரோவிலிருந்த சமயம் எழுதிய நூற்களை முஜ்னீ, ரபீஉ பின் ஸுலைமானுல் ஜீஸி, ராபிஉ பின் சுலைமானுல் முராதீ, புவைதி, ஹர்மலா, யூனூஸ் பின் அப்துல் அஃலா ஆகிய ஆறு பேரும் தொகுத்ததாக தெரிகிறது.
இமாம் அவர்களின் நூற்களில் மிகவும் பெரியது ‘கிதாபுல் உம்மு‘ என்பதாகும். இது சுமார் நாலாயிரம் பக்கங்கள் கொண்டதாகும்.
ஜிமாஉல் உலூம், கிதாப் இப்தாலுல் இஸ்திஹ்ஸான், கிதாப் இக்திலாபுல் மாலிக்கி வஷ் ஷாபியீ, கிதாப் இக்திலாபுல் இராகீன், கிதாப் இக்திலாப் மஅ முஹம்மது பின் ஹஸன், கிதாப் இக்திலாப் அலீ வ அப்துல்லாஹ் ஹிப்னு மஸ்வூது ஆகியவை இவற்றின் உட்பகுதி என்று சொல்லப்படுகிறது.
ரிஸாலா கதீம், ரிஸாலா ஜதீத் (பிற்காலத் தீர்ப்பு), இக்திலாபுல் ஹதீது , பலாயிலு குறைஷ், கிதாபுல் ஸுனன், மப்ஸூத், இம்லா ஸகீர் முதலிய நூற்கள் முக்கியமானவையாகும்.
திருக்குர்ஆனின் வசனங்களுக்கு ஹதீதிலிருந்தே ஆதாரங்கள் தருவதுன் கூடிய உரையை கொண்ட கிதாபுர் ரிஸாலத் என்ற நூலை இமாம் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கிதாபுல் மப்ஸூத் பில் பிக்ஹ்‘ என்பது இமாம் அவர்கள் பிக்ஹ் சட்டம் பற்றி எழுதிய பெரிய நூலாகும்.
அஹ்காமுல் குர்ஆன், வஸீயத்துஷ் ஷாபீ, பிக்ஹுல் அக்பர் போன்ற பெயரிலும் நூற்கள் எழுதியுள்ளனர்.
இமாம் ஷாபியீ அவர்கள் போதித்த செயல் முறையை அவர்களுடைய சீடர்க்ள், மாணவர்கள் உலகெங்கும் பிரச்சாரம் செய்தனர். உலகில் மிகவும் அதிகமானவர்களால் பின்பற்றப்படும் மத்ஹபுகளில் ஷாபிஈ மத்ஹபு முக்கியமானதாகும்.
Comments
Post a Comment