பெற்றோர்களை பேனுவோம்

பெற்றோர்களைப் பேணுவோம்!

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்… என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிப்பதுடன்,பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது” எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! “முன் செய்யின் பின் விளையும்” என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும்.

இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: “எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக” என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது!

அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார்,

தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.
ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வப்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டான். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

[ இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம்,மார்க்க விஷயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது.

இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.]

“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-

“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”

என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.

“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)

இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.

தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:

“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :

தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.

பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ)

மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்

பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்!

[ வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.]

“ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர்.

நவீன யுகத்தில் சில போலியான வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப அல்லது கட்டியவளின் கண்டிப்பான கட்டளைக்கு இணங்க பாசத்தில் கலப்படம் கலந்து தாய், தந்தையரின் உள்ளத்தில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவ்வாறான பெற்றோர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களாக பிள்ளைகளின் கண்களுக்கு உறுத்தப்படுகின்றனர்.

காலூன்றி, கையுயரும் வரை பராமரிப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லா வசதிகளுக்கும் பெற்றோர் தேவைப்படுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் இவர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

தாய், தந்தையரின் கருத்துகள் கூட பெரும்பாலான பிள்ளைகளிடத்தில் அரங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத அரளிப் பூவாக இருக்கின்றன.இவர்களின் பேச்சுகள், புத்திமதிகள், கருத்துகள் குடும்ப சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சாதாரண நண்பர்களுக்கு அல்லது மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூடத் தாய், தந்தையருக்குக் கொடுக்கப்டுவதில்லை. மாறாக அவர்களின் இதயங்களில் இரத்தத்தைக் கசியச் செய்கிறார்கள்.

இதனால்தானோ முதியோர் இல்லங்கள் முந்திக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன? மேலும் சில பிள்ளைகள் பெற்றோரை தம்முடனேயே கண்ணும் கருத்துமாகத் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேறு உறவினர்கள் அல்லது சகோதரர்கள் வீட்டில் இருந்தாலும் கரிசனையுடன் தம்முடனேயே வைத்துச் சோறு போடும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள்தான் தனிக் குடித்தனம் செய்பவர்கள். சுய நலத்துக்காகச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெற்றோர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

உதாரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேலைக்குச் செல்லும் தம்பதி என்றாலும் அல்லது கணவன் மாத்திரம் வேலைக்குச் சென்றாலும் மனைவிக்கு ஒத்தாசை பேரன், பேத்திகளை பராமரித்துப் பாதுகாப்பது, வீட்டுப் பாதுகாப்பு என்ற சுயநல எண்ணம்.

2. பெற்றவர்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற சமுதாயத்தின் குற்றச் சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வது.

3. வேலையாளுக்குக் கொடுக்கும் பணம் மீதமாவதுடன் வேலைகளையும் பொறுப்புகளையும் வயதானவர்களின் தலையில் சுமத்தி விட்டு இவர்களுக்கு ஓய்வு எடுக்க ஒரு நல்ல வசதியான சந்தர்ப்பம்.

4. மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு வீணாகச் சந்தேகப்படுவதனை விட பெற்றோருக்கு முதலிடம் என்ற போலிப் போர்வையில் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது. எனத் தொடர்ந்து கொண்டே போகலாம்.

இதுவும் ஒரு மறைமுகமான முதியோர் இல்லம்தான் என்பதனைப் பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். நம் பிள்ளைகள், பேரன், பேத்தி என வெகுளித்தன அறியாமையினால் தொடர்ந்து கடை வழிகளிலும் சமையல் அறைகளிலும் பாடசாலை என்றும் வயது போன காலத்தில் தாய், தந்தையர் சீரழிகின்றனர். கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளின் விரல் நுணி அசைவை எதிர்பார்த்து நின்ற பெற்றோர் பாவப்பட்ட ஜெகன்மங்கள்தான். பெற்றேர்களைத் தன்னுடன் வைத்துக் கொள்கின்றேன் என்ற போர்வையில் சிறை வாசத்தைக் கொடுக்கும் இவர்கள், சகல வேலைகளையும் அட்டை இரத்தம் உறுஞ்சுவது போல் தமது பெற்றோரிடமிருந்து உறுஞ்சி விடுகின்றனர். வயது போன காலத்தில் ஓய்வாக, சந்தோஷமாக, அமைதியாக இருக்க நினைத்தாலும் வீட்டுச் சூழல் அவர்களைத் தட்டி எழுப்பி விடுகிறது. தள்ளாத வயதிலும் அன்பினாலும் கருணையினாலும் பாசத்தினாலும் மென்மேலும் தம் குழந்தைகளுக்காகப் பாடுபடுகின்றனர்.

தொடர்ந்து பிள்ளைகளுக்கும் பரம்பரைகளுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியாகத்தில் தாய், தந்தை முழுமையான திருப்தி கண்டாலும் பிள்ளைகள் சுயநல திருப்தியே பெறுகின்றனர். (விதி விலக்கான உண்மையான பாசமான சில குழந்தைகளும் உள்ளனர்)

நாம் பிள்ளைகளைப் பராமரித்தது போன்று எதிர்காலத்திலும் பிள்ளைகள் நம்மை பராமரிப்பார்கள் என்று நம்புவது சேற்றில் காலை விடுவதற்குச் சமன். அனாதைகளைப் போல் அவலத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் பெற்றோர்களே அதிகம். இயலாத காலத்தில் என்னவெல்லாமோ எண்ணி, ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், சில பிள்ளைகள் தம்முடைய சில சுயநலத் தேவைகளுக்காக தன்னை வளர்த்து ஆளாக்கிய பேற்றோரை விட்டு விலகுவதும் அல்லது அதற்கேற்றாற் போல் போலித்தனமான நொண்டிக் குற்றச்சாட்டுகளைக் கூறி தமது பிழைகளை மறைக்க பெற்றோர்கள் மீது பழி சுமத்தி மெல்ல, மெல்ல விலகி ஒதுங்குவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.

இதற்குத்தான் கூடிய வயதுடன் வாழ்வதனை ஒரு சாபமாகப் பெற்றோர் நினைக்கும் அதே வேளை, அதிகளவு வயது வாழ்வு பிள்ளைகளையும் எரிச்சலடைய வைக்கிறது. முகம் சுழிக்க வைக்கிறது. அதிகளவு முதுமை இவர்களை ஒதுக்குப் புறமாக ஒதுக்கி வைக்கிறது. இவர்களின் ஓரிரு வார்த்தைகளைக் கூடச் செவி கொடுத்துக் கேட்கவும் நேரமிருக்காது. தமக்கும் என்றாவது ஒருநாள் இந்த நிலை நேரும் என்பதனை பிள்ளைகள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

மேலும் பிள்ளைகளின் சில நடவடிக்கைகள், அழுத்தங்கள் போன்றன இவர்களுக்கு மன உளைச்சலைத் தோற்றுவித்து உளவியல் ரீதியில் நோய்களை ஏற்படுத்துகிறது. தளர்ந்த நரம்புகளில் இறுக்கமான வார்த்தைகளினால் நிலை குலைவையும் உண்டாக்குகிறது. பாதுகாப்பற்ற நிலையினால் பதறித் தவிக்கின்றனர். சில பெற்றோர்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற போர்வை இருந்தாலும் பேச்சுத் துணை இல்லாத தனிமையில் மனம் பாதிக்கப்பட்டு புலம்பலாக மாறுவதும் உண்டு. அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிக் கலங்குவது கண்ணீரை வரவழைக்கும்.

சகல சௌகரியங்களுடனும் மதிப்புடனும் வாழ்கின்றனவர்கள் கர்வப்படலாம்ஸஸ பெற்றவர்கள் அருகில் பூப்போல் இருந்தால் மாத்திரமே! அப்படி அமையாதவிடத்துப் பிள்ளைகள் எல்லாம் “விமோசனம் இல்லாத சாபத்துக்குரிய நோயை”ப் போன்றவர்கள்.

நாம் பெற்றோர்களிடத்தில் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட கல்விமான்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் செல்வந்தர்களுடனும் நட்புப் பாராட்டி, சீராட்டினாலும் பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரைத் திட்டுவது, வீட்டை விட்டுத் துரத்துவது, அவர்களை ஒதுக்கி வைப்பது, வேலைக்காரர்கள் போல் நடத்துவது இப்படிப்பட்ட பெரும்பாவங்களை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து முகங்சுழிக்கும் உரிமை கூட எமக்கு இல்லை. அவர்களை இதயத்தில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை. நோய்வினை செய்யாமல் இருந்தால் போதும்.

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.

அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் .

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா?

வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.

உம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ…‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)

பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! இது நியாயமா?

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும்.

நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.

ஒரு மனிதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.

அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.

அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.

இறைவா! இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்ததுஸ. (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக.

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!