ஜக்காத்
ஜக்காத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் - சட்டங்கள்
கவனத்திற்கு:
ஜகாத் என்பது ஒரு உயர்ந்த பொருளாதார திட்டம். எனினும் நாம் அதன் லட்சியத்தையோ, சிறப்பையோ இந்த தொடரில் குறிப்பிடப்போவதில்லை மாறாக அந்த பொருளாதா திட்டத்தின் சட்டங்கள் பற்றி மட்டுமே அறிந்து கொள்வோம்
இதன் உள் சட்டங்களில் உலகம் முழுதும் சிற்சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அந்த இடங்களில் இருதரப்பு கருத்துக்களையும் எடுத்துக் கூறி அதன் நிலைப்பாடு எது என்பதையும் விளக்குவோம். ஒரு பொருளுக்கு அல்லது ஒரு தொகைக்கு ஒரு முறை மட்டும் ஜகாத் கொடுத்தால் போதுமா...? அல்லது ஆண்டு தோரும் கொடுக்க வேண்டுமா...?
என்பது பற்றி இரு சாராரின் வாதங்கள், அது பற்றிய ஆதாரங்கள், அவற்றின் நம்பகத் தன்மைகள் எல்லாமும் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ். இந்த தொடரில் ஏற்படும் இடற்பாடுகளை வாசகர்கள் தங்கள் கருத்துக்களாக பதிக்கலாம்.
விளக்கம் 1
- ஜகாத் யார் மீது கடமை,
கொடுக்ககடமைப்பட்டவர்கள் யார்?
ஒருவருக்கு ஜகாத் கடமையாக வேண்டுமானால் பல நிபந்தனைகள் உண்டு. அந்த நிபந்தனைக்கு உட்பட்டோர் மீது மட்டும் தான் ஜகாத் கொடுக்கும் பொறுப்பை இஸ்லாம் விதிக்கிறது.
நிபந்தனை ஒன்று - ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ ۖ فَالَّذِينَ آمَنُوا مِنكُمْ وَأَنفَقُوا لَهُمْ أَجْرٌ كَبِيرٌ
எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை ('கலீபாக்களாக') பிரதிநிதிகளாக ஆக்கி இருக்கிறானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள். (அல்குர்ஆன் 57:7)
وَآتُوهُم مِّن مَّالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ ۚ
உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். (அல் குர்ஆன் 24:33)
الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவர்கள் செலவு செய்வார்கள் (அல் குர்ஆன் 2:3)
இந்த மூன்று வசனங்களில் மனிதன் வாரிசுரிமை அடிப்படையிலோ அல்லது தனது சொந்த திறமையின் வழியாகவோ அல்லது பிறர் கொடுக்கும் அன்பளிப்புகளின் வழியாகவோ செல்வத்திற்கு சொந்தக்காரனாகிறான் என்பது தெரிகிறது. 'உங்கள் செல்வம்' என்று இறைவன் கூறியிருப்பதிலிருந்து இறைவனின் வழியில் செலவு செய்யும் எது ஒன்றிர்க்கும் செலவு செய்பவர் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தனது அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் சொத்திற்கு சுய அதிகாரம் பெறாதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமைப் பெற்றவர்கள் மீதே ஜகாத் கடமையாகும். ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனையில் 'உங்கள் செல்வம்' என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
எவரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாத எந்த சொத்திற்கும் அது எத்துனை கோடி மதிப்புள்ளதாக இருந்தாலும் சரி அதன் மீது ஜகாத் கடமையில்லை.
அரசு கருவூலங்களுக்கு அரசாங்கம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை ஏனெனில் அது எவருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. அந்த செல்வத்திற்கு நான் தான் சொந்தக்காரன் என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜகாத் நிதிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் இவைகள் அரசாங்கத்திடம் மலைப்போல் குவிந்திருந்தாலும் அவற்றிர்க்கு கணக்கு பார்த்து அரசாங்கம் ஜகாத் கொடுக்க முடியாது ஏனெனில் 'உங்கள் செல்வம்' என்ற நிபந்தனை இங்கு பொருந்தவில்லை.
பள்ளி வாசல்களுக்காகவோ - இன்னபிற நற்காரியங்களுக்காகவோ வக்ஃப் செய்யப்பட்ட சொத்துகளும் ஜகாத் கடமையாவதிலிருந்து விலக்கு பெறுகின்றன. ஏனெனில் இவைகளும் வக்ஃப் செய்யப்பட்டு விட்ட பிறகு தனிமனிதர்களுக்கு சொந்தமானவை என்பதிலிருந்து மாறுபட்டு விடுகிறது. 'உங்கள் செல்வம்' என்பது இங்கும் பொருந்தாது என்பதால் அவற்றிர்க்கும் ஜகாத் கடமையில்லை.
முஸ்லிம் உம்மத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் மக்களிடமிருந்து நற்பணிகளுக்காக பணம் வசூலித்தால் அதன் மூலம் இயக்கதிற்காக சொத்துக்கள் (நிலங்கள் - கட்டிடங்கள் - வாடகை வருமானங்கள் - வாகனங்கள் - பத்திரங்கள் எல்லாம் இதில் அடங்கி விடும்) வாங்கப்பட்டால் அந்த சொத்துக்களுக்கோ சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கோ ஜகாத் கடமையில்லை ஏனெனில் 'உங்கள் செல்வம்' என்ற நிபந்தனையை இந்த சொத்துக்கள் எதுவொன்றின் மீதும் பொருத்திக் காட்ட முடியாது. இவைகள் எந்த தனி மனிதர்களுக்கும் சொந்தமானவையல்ல.
கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் பிரிக்கப்படாத சொத்துக்கள் ஜகாத்திலிருந்து விதி விலக்கு பெறாது. அவை பிரிக்கப்படா விட்டாலும் 'உங்கள் செல்வம்' என்ற தகுதியைப் பெறும் பலருக்கு அது சொந்தமாக இருப்பதால் அவற்றிலிருந்து ஜகாத் பிரிக்கப்பட வேண்டும். (இது பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்)
'உங்கள் செல்வத்தில்' சேராத இன்ன பிற சொத்துக்கள்.
லஞ்சம் - வட்டி - திருட்டு - லாட்டரி - சூது இவற்றால் பெறப்பட்ட சொத்துக்கள் - செல்வங்கள் எதுவொன்றும் ஜகாத் திட்டத்தில் இடம் பெறாது ஏனெனில் பிறருடைய செல்வமாகும். முறையற்ற வழியில் அவை அபகரிக்கப்பட்டுள்ளதால் அவை இறைவன் வழங்கிய செல்வமாகவோ, வாரிசுரிமை வழியில் பெறப்பட்ட செல்வமாகவோ கருதப்படாது. எனவே இத்தகைய சொத்துக்களுக்கு ஜகாத் கொடுக்கும் படி இஸ்லாம் ஏவவில்லை. ஜகாத் கொடுத்து விட்டால் அத்தகைய சொத்துக்கள் தூய்மையடைந்து விடும் என்பதையும் இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த செல்வங்களை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுவதும், அதற்கு வழியில்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் அனைத்தையும் வறுமையில் உழன்றுக் கொண்டிருப்பவர்களிடம் (நன்மையை நாடாமல்) சேர்ப்பித்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதும் தான் இதற்கான மாற்று வழியாகும்.
விபச்சாரம் - போதைப் பொருட்கள் போன்று இஸ்லாம் ஹராமாக்கியுள்ள காரியங்களின் வழியாக ஈட்டப்படும் தொகை எதுவாக இருந்தாலும் அவைகளிலிருந்து ஜகாத் தொகையை பிரித்தெடுக்க முடியாது. இவைகளும் இறைவன் வழங்கிய செல்வம் அல்லது வாரிசுரிமையால் கிடைத்தது என்ற தகுதியை இழந்து விடுகிறது.
قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
அல்லாஹ் இறையச்சம் உடையவர்களிடமிருந்துதான் எதையும் அங்கீகரிக்கிறான். (அல் குர்ஆன் 5:27)
இன்றைக்கு முஸ்லிம்களில் பலர் 'சம்பாதிக்கும் வழியைப்பற்றி கவலை இல்லை கிடைக்கும் செல்வத்தில் ஜகாத் - தர்மம் என்று நல்வழியில் செலவிட்டு கணக்கை சரிப்படுத்திக் கொள்ளலாம்' என்ற எண்ணத்தில் இருப்பதை காண்கிறோம். இவர்கள் தங்கள் எண்ண ஓட்டங்களை நியயாப்படுத்தி ஜகாத் வழங்கினாலும் அவை எந்த மதிப்பையும் பெறாது என்பதை மேற்கண்ட வசனம் அறிவித்து விடுகிறது.
இறை வழியில் செலவு செய்பவற்றில் பரிசுத்தமானதை தவிர வேறெதையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி 1410)
எனவே ஜகாத்தை கடமையாக்கும் நிபந்தனைகளில் முதலாவது செல்வத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் முஸ்லிம்கள் அதை ஹலாலான - இஸ்லாம் அனுமதித்த - வழிகளில் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.
நிபந்தனை இரண்டு.
ஹலாலான செல்வத்திலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முதல் நிபந்தனையை சற்று ஆழமாக புரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இது.
செல்வத்திலிருந்து ஜகாத் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் செல்வம் என்றால் என்ன? அதன் தன்மையும், மதிப்பும் ஒரே தரத்தை சார்ந்தவைதானா என்ற வினாக்கள் இங்கு பிறக்கின்றன.
மனிதர்களின் பயன்பாட்டிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப உலகில் பலதரப்பட்ட செல்வங்கள் குவிந்துக் கிடக்கின்றன. இஸ்லாம் இதன் தன்மைகளையும், மதிப்பையும் ஒரே மாதிரியாக கருதவில்லை. தேவைகளையும் - பயன்பாட்டையும் - மதிப்பையும் பொருத்து அதன் மீதான சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.
இது பற்றி விரிவாக அணுகுவோம்.
முதல் நிபந்தனையில் நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களில் 'உங்களுக்கு இறைவன் வழங்கிய செல்வம்' என்ற வார்த்தை பிரயோகத்தில் செல்வத்தின் அளவு எதுவும் கூறப்படவில்லை. அதாவது ஒருவருக்கு முறையான வழியில் 100 ரூபாய் கிடைத்தால் அதுவும் செல்வம்தான். 1000ஆகவோ - லட்சமாகவோ - கோடியாகவோ இருந்தாலும் அதுவும் செல்வம்தான். அப்படியானால் 100 ரூபாய் வைத்திருப்பவரும் இது இறைவன் வழங்கிய செல்வம் என்ற அடிப்படையில் ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவரா... அல்லது செல்வத்திற்கு எதாவது உச்சவரம்பு உண்டா... என்ற வினா அடுத்து எழுகிறது.
நிச்சயமாக செல்வத்திற்கு உச்சவரம்பு உண்டு. அந்த உச்சவரம்பு மனிதர்களின் தேவைக்கேற்ப மாறுபடும் என்பதை குர்ஆன் வசனங்களிலிருந்து பரிந்துக் கொள்ளலாம்.
ஒருவர் தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மாத வருமானம் ரூ 15000. வருடத்திற்கு 180,000. இது சராசரியான வருமானத்தை கடந்த அளவாகும். இது நல்ல வருமானமாக கருதப்பட்டாலும் மாதத்திற்கு 15 ஆயிரம் என்றவுடனோ, அல்லது வருடத்திற்கு 180 ஆயிரம் என்றவுடனோ அவர் ஜகாத் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று யாரும் வலியுறுத்திவிட முடியாது. ஏனெனில் வருமானத்தை மட்டும் அளவுகோலாக கொண்டு கடமையாக்கப்பட்ட சட்டமல்ல ஜகாத். வருமானத்தை போன்றே மனிதர்களின் தேவைகளையும், செலவீனங்களையும் ஜகாத் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)
இவ்வளவு இருந்தால் ஜகாத் கொடுங்கள் என்று சொல்லாமல் 'தேவைக்கு போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்' என்கிறான் இறைவன்.
'மீதமுள்ளதை' என்று இறைவன் கூறியதிலிருந்து ஒருவருடைய வருமானம் அவருடைய அவசியத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை விளங்கலாம்.
தேவைக்கு போக மீதமுள்ளதை என்றால் தேவையின் அளவு என்ன?
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும் போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே.
வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)
வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. தொடரும் இறைநாட்டப்படி
2 - தேவைக்கு போக மீதமுள்ளவற்றிர்க்கே ஜக்காத்
ஜகாத் கடமையாவதற்கான நிபந்தனைகளை முதல் தொடரில் கண்டோம்.
அனைத்து செல்வத்திற்கும் இறைவன் ஒருவனே சொந்தக் காரனாக இருந்தும் செல்வத்தை 'உங்கள் செல்வம்' என்று மனிதர்களுக்கு சொந்தமாக்கி இறைவன் கூறுவதால் எது சொந்த செல்வமாக இருக்கிறதோ (வாரிசுரிமை அடிப்படையில், உழைப்பால், அன்பளிப்பாக, புதையல் போன்ற ஹலாலான சொத்துக்கள்) அதன் மீதுமட்டும் ஜகாத் கடமையாகும் என்பது அதன் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதை கண்டோம்.
உங்கள் செல்வம் என்று இறைவன் கூறினாலும் மனிதனின் தேவைக்கு போக மீதமுள்ளவற்றின் மீதே ஜகாத் கடமையாகும் என்பதை 2:219வது வசனத்தின் மூலமும் புகாரி 1426வது நபிமொழியின் மூலமும் அறிந்தோம். தேவைக்கு போக மீதமுள்ளது என்றால் என்ன என்பதையும் ஓரளவு அறிந்தோம். அதை இன்னும் கூடுதலாக அறிவோம்.
மனிதர்களுக்கு மனிதர்கள் அவர்கள் வாழும் இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப தேவைகள் வித்தியாசப்படுவதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வெளியில் பிரயாணம் செய்யும் போது அரசு வாகனத்தையோ (பஸ் - ரயில் போன்றவை) தனியார் வாகனத்தையோ பிடித்து சென்று விடுகிறார்கள். தனக்கென்று தன் குடும்பத்திற்கென்று ஒரு சொந்த வாகனம் வேண்டும் என்ற மனநிலையோ அதற்கான முயற்சியோ அவர்களிடம் இருப்பதில்லை. (விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வாகனம் வாங்குவதற்குரிய பொருளாதாரம் தன்னிடம் இருப்பினும் அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் (அரபு பிரதேசங்கள்) மற்றும் மேலை நாடுகளில் இந்நிலையை உங்களால் பார்க்க முடியாது. அங்கெல்லாம் குறைந்தது வீட்டுக்கு ஒரு வாகனமாவது வேண்டும் என்பது சராசரியான தேவைக்குள் வந்து விட்டது. குறைந்த வருவாயைப் பெறுபவர்கள் கூட தவணை முறையில் பணத்தை செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
பனிபடர்ந்த - ஐஸ் உரைந்த நிலையில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை வசதிக்கான தேவை என்பது மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு. ஆடம்பரமான வீடுகள் ஆடம்பரமான வாகனங்கள் போன்றவற்றையெல்லாம் அந்த மக்கள் நாடுவதில்லை. மனம் விரும்பினாலும் சூழ்நிலை அவற்றையெல்லாம் அனுபவிக்க தடையாக இருக்கின்றன.
அதே போன்று கப்பல்களில் குடி இருக்கும் மக்களை எடுத்துக் கொள்வோம். (வாடகை கொடுத்து காலம் முழுவதும் கப்பலிலேயே தங்கி விடலாம் என்ற வசதிகள் இருக்கின்றன) இந்த மக்களின் தேவைகளும் குறைவு.
மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கான தேவைகளில் பெருத்த வேறுபாடு இருப்பதை இவற்றின் மூலம் விளங்கலாம்.
முஸ்லிமாக இருக்கும் நிலையில் நாகரீக வளர்ச்சியற்றுப் போன பகுதியில் வாழும் செல்வந்தர் கொடுக்க கடமைப்பட்ட ஜகாத் தொகையை விட அதேயளவு செல்வத்தைப் பெற்று நாகரீகம் வளர்ந்த இடங்களில் வாழும் முஸ்லிம்கள் அவரை விட குறைந்த அளவே ஜகாத் கொடுக்க வேண்டிவரும். காரணம் இவர்களுக்கு மத்தியில் உள்ள தேவைகளின் வித்தியாசங்களே!
எனவே முஸ்லிம்கள் தங்கள் தேவைகளுக்கு போக மீதமுள்ளதில் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்தால் போதும். வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போடுகிறார் வீடு கட்டும் அளவு நிலமாக அது இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு அதில் வீடு கட்டப்படா விட்டாலும் அந்த நிலத்திற்கு ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது ஏனெனில் அது அத்தியாவசிய தேவைக்குறியதாகும். வீடு கட்டுவதற்கு இந்த அளவுதான் நிலம் இருக்க வேண்டும் என்ற விதிகள் எதுவுமில்லை. 60ஃ40 என்றோ அல்லது இதற்கு கூடுதல் குறைவாகவோ கூட ஒருவர் வீடு கட்ட நிலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது வீடுகட்டும் அளவுக்குள்ளதாக இருக்க வேண்டும். 5 செண்ட் நிலத்தில் வீடு கட்டினால் போதும் என்ற நிலையை ஒருவர் உணர்ந்தால் அது மட்டும் தான் ஜகாதிலிருந்து விலக்கு பெறும். 'நான் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டுள்ளேன்' என்று ஒருவர் 20 செண்ட் நிலத்தை காட்டினால் அவர் ஜகாத் கொடுப்பதில் மோசடி செய்கிறார் என்ற நிலைதான் அங்கு உருவாகும்.
நிபந்தனை மூன்று.
'தன் தேவைக்கு போக மீதமுள்ளதை... என்பதில் தேவைகளை தீர்மானிப்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் இறைவன் வழங்கினாலும் எல்லா செல்வங்களுக்கும் இது பொருந்தாது. பல செல்வங்களுக்கு 'தேவைக்குரிய' உச்சவரம்பை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இந்த உச்சவரம்பு செல்வத்திலும் பொருளிலும் மாறுபட்டே நிற்கும். எனவே எந்த பொருளில் - செல்வத்தில் இஸ்லாம் உச்சவரம்பை ஏற்படுத்தியுள்ளதோ அந்த உச்சவரம்பிற்கு உட்படாதவர்கள் மீது அந்த பொருளிலும் - செல்வத்திலும் ஜகாத் கடமையாகாது.
இதை புரிந்துக் கொள்வதற்கு ஒரு நபிமொழியை குறிப்பிடலாம்.
5 ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஜகாத் இல்லை என்பது நபிமொழி (அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) புகாரி 1484)
ஒட்டகத்திற்குரிய உச்சவரம்பு 5 ஆகும். ஒட்டகம் என்ற செல்வம் ஒருவரிடம் இருந்தாலும் 4 ஒட்டகங்கள் வரை அது ஜகாத்திற்குரிய செல்வமாக கருதப்படாது. 5 பூர்த்தியாகும் போதே அவற்றின் மீது ஜகாத் கடமையாகின்றது. 4 ஒட்டகங்களை வைத்திருக்கும் ஒருவர் 'என் தேவைக்கு இரண்டு போதும்' என்று கூறினாலும் கூட அவர் மீது ஜகாத்தை விதிக்க முடியாது விரும்பினால் அவர் மீதி ஒட்டகத்தை தர்மம் செய்து விட்டு போகலாம்.
ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளில் மூன்றாவது அது உச்சவரம்பை அடைந்திருக்க வேண்டும் என்பதாகும். (எவற்றிர்க்கெல்லாம் உச்ச வரம்பு உள்ளது எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் பின்னர் வரும் இன்ஷா அல்லாஹ்)
நிபந்தனை நான்கு.
சில பொருள்களுக்கு இஸ்லாம் உச்சவரம்பை ஏற்படுத்தி இருப்பது போன்று பொருளுக்குரிய காலவரையையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த காலவரையை கடக்காமலிருக்கும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது.
யாரேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஓராண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) திர்மிதி 572)
(குறிப்பு இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் ஜைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பலவீனமானவர் என்பதால் இந்த செய்தி பலவீனமாகி விடுகின்றது. ஆனாலும் இதை தழுவிய இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை திர்மிதி இமாம் 573வது ஹதீஸாக பதிவு செய்கிறார்.
அதாவது பொருளுக்கு ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை அங்கு வைக்கப்படுகிறது. பெரும்பாலான நபித்தோழர்கள் இந்த கருத்தில் தான் இருந்தார்கள் எனவும் திர்மிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன் விளக்கம் என்ன?
நம்தேவைகளுக்கு போக ரொக்கபணம் 50 ஆயிரம் இருந்தால் நம்மீது ஜகாத் கடமையாகும் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரிடம் 40 ஆயிரம் இருக்கின்றது. நாட்கள் கடந்தாலும் அந்த தொகை கூடவில்லை. 10 மாதங்கள் கழித்து இன்னும் 10 ஆயிரத்தை அவர் பெறுகிறார் இப்போது ஜகாத்திற்குரிய தொகை அவரிடம் வந்துவிட்டாலும் அடுத்த இரண்டு மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கும் நிலை அவருக்கு ஏற்படாது. ஏனெனில் அவருக்கு 50 ஆயிரம் கிடைத்து இன்னும் ஒருவருடம் பூர்த்தியாகவில்லை. ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை 40 ஆயிரத்துடன் இருந்த ஒருவருக்கு நவம்பரில் 10 ஆயிரம் கிடைத்து அவருடைய இருப்பு 50 ஆயிரமாக உயர்ந்தால் நவம்பரில் தான் ஜகாத் வழங்கும் அளவுக்குரிய தொகை அவருக்கு முழுமையாக கிடைத்துள்ளது. முழுமைப் பெற்றதிலிருந்து ஒரு வருடம் கழித்துதான் அதன் மீது ஜகாத் கடமையாகும் என்பதால் அடுத்த நவம்பரில் அவர் இந்த தொகைக்குரிய ஜகாத்தை வழங்கினால் போதும். மேற்கண்ட நபிமொழியிலிருந்து இதை விளங்கலாம்.
இடையில் ஒரு பொருளோ - தொகையோ கிடைத்து ஜகாத் அளவு பூர்த்தி அடைந்தவர்களுக்கு தான் இது சட்டம். ஏற்கனவே ஏராளமான செல்வத்தை வைத்திருப்பவர்களுக்கு புதிதாக ஒரு பொருளோ - தொகையோ கிடைத்தால் அதற்கு அவர்கள் ஒரு வருடம் பொருத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனெனில் அவர்களிடம் ஏற்கனவே ஜகாத் கொடுக்கும் அளவிற்கு செல்வம் இருப்பதால் அதோடு புதிதாக கிடைத்ததையும் சேர்த்து கணக்கு பார்த்து ஜகாத் வழங்கி விட வேண்டும்.
தன் தேவைக்கு போக மீதமாக 1 லட்சம் வைத்திருக்கும் ஒருவருக்கு 10 மாதங்கள் கழித்து இன்னும் 10 ஆயிரம் கிடைக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுத்து விட்டு இடையில் கிடைத்த 10 ஆயிரத்திற்கு (அதற்கு இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகாததால்) ஜகாத் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. இடையில் கிடைக்கும் பொருளுக்கு ஓராண்டு நிறைவாகும் வரை ஜகாத் இல்லை என்று நிறைய நபித்தோழர்கள் கருத்து தெரிவித்துள்ளதை இவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. அந்த நபித்தோழர்களின் கருத்து நாம் மேலே குறிப்பிட்ட விளக்கத்தை ஒட்டியே வந்துள்ளது. அதாவது ஜகாத் கடமையாகாதவர்களுக்கு இடையில் கிடைக்கும் பொருள் பற்றியே அந்த நபித்தோழர்களின் கருத்து அமைந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸை பல முறை சிந்திக்கும் போது விளங்கலாம்.
எனவே ஜகாத் கடமையாகும் நிபந்தனையில் அது ஒரு வருடத்தை எட்டி இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
ஒரு வருடம் என்பதில் விதிவிலக்கு பெருபவை பூமியின் மேல்பாக விளைச்சல்கள் மற்றும் பூமிக்கு அடியிலிருந்து பெறப்படும் பொருட்களாகும். விளைச்சல் நிலங்கள், பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் புதையல்கள், பெட்ரோல், இரும்பு, நிலக்கரி போன்றவற்றிர்க்கும் கடலுக்கடியிலிருந்து பெறப்படும் பொருட்களுக்கும் ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது. இத்தகைய பொருட்கள் கிடைத்து அதன் பலனை பெரும் நாட்களில் அதன் ஜகாத்தை வழங்கி விட வேண்டும். .
விளைச்சலுக்கான நிபந்தனைகள்
. நிபந்தனை நான்கில் பொருள் மீது ஜகாத் கடமையாக வேண்டுமானால் ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விளக்கத்தைக் கண்டோம். இந்த நிபந்தனை எல்லா பொருளுக்கும் பொருந்தாது.
ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பதில் விலக்கு பெருபவைகளும் அதற்கான ஆதாரங்களும்:
وَهُوَ الَّذِي أَنشَأَ جَنَّاتٍ مَّعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۚ كُلُوا مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ۖ وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
படர்ந்துக் கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்களையும் பேரித்த மரங்களையும் மாறுபட்ட உணவு தானியங்களையும் மாதுளை ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள். அவற்றை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத்)தை வழங்கி விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 6:141)
ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பதிலிருந்து பயிரிடப்பட்டவை பயிரிடப்படாமல் தன்னால் வளர்ந்து நிற்கும் அனைத்தும் அடங்கி விடும் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்தி விடுகிறது.
படர்ந்து கிடக்கும் மற்றும் படர்ந்து கிடக்காத தோட்டங்கள் என்று இறைவன் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் கவனிக்கத்தக்கவையாகும்.
படரும் தன்மையுள்ள காய்கறி - பழத் தோட்டங்கள் (உதாரணமாக தக்காளி - வெள்ளரி - பூசணி - தர்பூஸ் - புடலங்காய் - திராட்சை - இவைப் போன்ற படர்ந்து வளரும் தன்மையுள்ள அனைத்தும்).
படராத தோட்டங்கள் - பேரீத்தம், ஒலிவம், மாதுளை என்று இறைவன் தனியாக கூறி விட்டதால் மீதி அனைத்து தோட்டங்களும் இதில் அடங்கி விடும். மா, தென்னை, பலா, முந்திரி, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, போன்ற உணவாக பயன்படும் அனைத்து தோட்ட வகைகளையும் இது கட்டுப்படுத்தும்.
சவுக்கு, தேக்கு, பூவரசன், வேம்பு, பனை, கொங்கை, இது போன்று கட்டுமானத்திற்கு பலகையாக பயன்படும் மர வகைகளும் அடங்கும்.
தானிய வகையை சார்ந்த நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், பட்டாணி, கம்பு, இதர பயிரு வகைகள்.
இவை அனைத்திற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும். இங்கு ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது. ஏனெனில் மேற்கண்ட வசனத்தில் 'அவற்றை உண்ணுங்கள் பலனை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய ஜகாத்தை கொடுத்து விடுங்கள்' என்று இறைவன் தெளிவாக கூறிவிட்டதால் கால அளவு என்ற நிபந்தனை இங்கு அடிப்பட்டு போய் விடுகிறது.
இதற்கு காரணம் என்ன?
கால அளவை குறிப்பிடாமல் அறுவடையை இறைவன் குறிப்பிடுவதற்கு காரணத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) காலத்தில் தங்கம் வெள்ளி போன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம். ஆனால் அவை அன்றாட- அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் 'அளவுகோலாக' பயன்படவில்லை. தெளிவாக விளங்க வேண்டுமானால் இன்றைக்கு உள்ள 'கரண்சி' நிலவரம் அன்றைக்கு இல்லை.
இன்று நாம் எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமானாலும் அதற்கு பணம் தேவைப்படும். பண்ட மாற்று முறை என்பது இன்று நடை முறையில் இல்லை. வீட்டில் இருக்கும் இரண்டு கிலோ கோதுமையை கொண்டு சென்று கடையில் கொடுத்து விட்டு மாற்று கோதுமை வாங்கி வர முடியாது.
பாசுமதி அரிசி ஒரு மூட்டையை கொடுத்து விட்டு பொன்னி ஒரு மூட்டையை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை பார்ப்பது அரிது.
கோதுமை பெற வேண்டுமானாலும் அரிசி வாங்க வேண்டுமானாலும் அதற்கு இன்றைய உலகில் பணம் தேவை.
கையில் தங்க மோதிரம் அணிந்திருக்கும் ஒரு பெண் கடைக்குச் சென்று தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்து விட்டு வர முடியாது. முதலில் தங்க மோதிரத்தை விற்று பணமாக்கி அதிலிருந்துதான் பொருள்களை வாங்க முடியும்.
கழுத்து நிறைய நகையை அணிந்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து நகையை கழற்றி கண்டக்டரிடம் கொடுத்து போகுமிடத்திற்கு (உதாரணமாக மதுரைக்கு) ஒரு டிக்கட் கொடுங்கள் என்று எவராலும் இன்றைக்கு கேட்க முடியாது. கேட்டால் பெற்றுக் கொள்ளும் உரிமையும் நடத்துனருக்கு கிடையாது. அப்படியே பெற்றுக்கொண்டாலும் அதை அங்கீகரிக்கும் சட்ட விதி அரசிடம் இல்லை. நகை பணமாக மாறாத வரை போகுமிடத்திற்கு டிக்கட் கிடைக்காது.
இதிலிருந்து அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணமே முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், என்னதான் விலை மதிப்புமிக்க பொருள் நம்மிடம் இருந்தாலும் அவை பணமாக மாறாத வரை நம் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதையும் விளங்கலாம்.
இப்படி ஒரு நடைமுறை நபி(ஸல்) காலத்தில் இல்லை. அன்றைக்கு தங்கம் வெள்ளி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது மாதிரியே பண்ட மாற்று முறைகளும் பழக்கத்தில் இருந்தன.
கோதுமைக்கு கோதுமையை, பழங்களுக்கு பழங்களை, தானியங்களுக்கு தானியங்களை மாற்றிக் கொள்ளும் பழக்க வழக்கம் அன்றைக்கு சாதாரணமாக நடைமுறையில் இருந்தது. தேவையானவைகளை விலை கொடுத்து வாங்கவும் செய்யலாம் பொருள் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் செய்யலாம்.
இப்படி ஒரு நடைமுறை அன்றைக்கு இருந்ததால் செல்வந்தர்களிடமிருந்து வந்து சேரும் ஜகாத் தங்கம் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் அன்றைக்கு இல்லாமல் போயிற்று. தங்கத்திற்கு தங்கத்தை - வெள்ளிக்கு வெள்ளியை ஜகாத்தாக பெற்றுக்கொண்டது போன்றே தானியங்களுக்கு தானியங்களையும் உயிரினங்களுக்கு உயிரினங்களையும் நபி(ஸல்) உட்பட அன்றைய ஆட்சியாளர்கள் ஜகாத்தாக பெற்றார்கள். அதை அப்படியே மக்களுக்கு வினியோகமும் செய்தார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
கால அளவை குறிப்பிடாமல் அறுவடையை இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பாழ்பட்டு போன உணவு தானியங்கள் ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுவது தடுக்கப்பட்டு புதிய உணவு தானியங்கள் அவர்களுக்கு கிடைக்கும் வழி துவக்கி வைக்கப்பட்டது.
ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனையில் ஒன்றான ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனை விளைச்சலுக்கு பொருந்தாது, விளைச்சலை பொருத்தவரை அவைகளின் தன்மையை பொருத்து பல காலக் கட்டங்களில் ஜகாத் விதிக்கு அவை உட்படும் என்பதை இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்வோம்.
வருடத்திற்கு இரண்டு முறை சாகுபடி செய்யப்படும் பயிரினங்கள் (உதாரணம் வேர்கடலை - உளுந்து போன்றவை) இரண்டு முறை ஜகாத் விதிக்கு உட்பட்டு விடுகிறது.
மாமரம் வருடத்திற்கு ஒரு முறை காய்ப்பதால் வருடத்திற்கு ஒருமுறை என்ற விதி இதற்குப் பொருந்தும். தென்னை - வாழை - பலா இவற்றுக்கு வருடம் என்ற விதி பொருந்தாது.
சவுக்கை பயிரிடுபவர்கள் சராசரியாக ஐந்து வருடங்களில் அவற்றை அறுவடைச் செய்தால் ஐந்து வருடங்களுக்கு அவற்றின் மீது ஜகாத்தை விதிக்க முடியாது. அறுவடைச் செய்யும் போதுதான் அது ஜகாத் விதிக்கு உட்படும்.
தேக்கு மரத்தை பயிரிடுபவர்கள் அதன் பலனை அடைய குறைந்தது பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் அந்த மரங்கள் மீதான ஜகாத்தை விதிக்கும் ஆதாரங்கள் எதுவுமில்லை. அறுவடையின் பலனை பெரும் நாளில் அவற்றிற்குறிய ஜகாத்தைக் கொடுங்கள் என்று இறைவன் குறிப்பிடுவதால் அதற்கு முந்தைய ஆண்டுகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
ஓராண்டு நிபந்தனையில் அடங்காத இன்ன பிற பொருட்கள் என்ன?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்த நல்லவற்றிலிருந்தும், நாம் உங்களுக்காக பூமியிலிருந்து வெளிப்படுத்தி கொடுத்ததிலிருந்தும் (இறை வழியில்) செலவு செய்யுங்கள். (அல் குர்ஆன் 2:267)
நாம் சம்பாதித்தவை.
பூமியிலிருந்து வெளிபடுத்தி நமக்காக கொடுக்கப்பட்டவை.
நாம் சம்பாதித்தவை என்பதை 'உங்கள் செல்வம்' பற்றி விளக்கிய முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளோம். அவற்றிற்கு ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தும்.
பூமியிலிருந்து வெளிப்படுத்திக் கொடுத்தவை என்பதை எப்படி புரிந்துக் கொள்வது? பூமியிலிருந்து வெளிப்படும் விளைச்சல் நிலங்கள் போன்றுதான் இவற்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.
விளைச்சலுக்கு எப்படி ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாதோ அதே போன்று பூமியிலிருந்து இறைவன் வெளிப்படுத்திக் கொடுத்தவற்றிற்கும் ஓராண்டு என்ற நிபந்தனை பொருந்தாது என்பதே சரியாகத் தெரிகிறது.
ஒருவருக்கு பூமியிலிருந்து புதையல் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 'நான் ஒரு வருடத்திற்கு பிறகு தான் இதற்கு ஜகாத் கொடுப்பேன்' என்று அவரால் சொல்ல முடியாது. ஏனெனில் புதையலுக்கு இருபது சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
புதையலை பிரித்து தனியாக கூறியுள்ளதால் மற்ற நிபந்தனையை இங்கு பொருத்தி பார்க்க முடியாது. புதையல் கிடைத்து பலனை அடையும் போது அதற்குரிய ஜகாத்தை வழங்கி விட வேண்டும். புதையல் எப்படி பூமியிலிருந்து வெளிப்படுகிறதோ அதே போன்று தான் இரும்பு - நிலக்கரி - பெட்ரோல் - யுரேனியம் போன்ற பூமியிலிருந்து வெளிப்படும் அனைத்து பயன்பாட்டுப் பொருள்களுக்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
புதையல் என்பது எவ்வித எதிர்ப்பார்ப்பும் - உழைப்பும் இன்றி கிடைப்பதால் அவற்றின் மீது இருபது சதவிகிதம் ஜகாத் விதிக்கப்பட்டுள்ளது. இதர பூமியிலிருந்து வெட்டி எடுக்கக் கூடிய - பெரும் பொருளாதாரம் - உழைப்பு - நேரத்தை உள் வாங்கக் கூடிய இரும்பு - நிலக்கரி - பெட்ரோல் - யுரேனியம் மற்றும் இது போன்றவற்றிற்கு இருபது சதவிகித ஜகாத்தை விதியாக்க முடியாது. நபி(ஸல்) காலத்தில் இவைகள் இல்லை என்பதால் இவைகளை எந்த அடிப்படையில் புரிந்துக் கொள்வது என்பதில் மாறுபட்ட சிந்தனையோட்டங்கள் நிலவுகிறது. எதன் மீது எவ்வளவு ஜகாத் கடமையாகும் என்பதை விளக்கும் போது இது பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
நிபந்தனை ஜந்து
ஒருவர் மீது ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகளில் அடுத்தது என்னவென்றால் கடன் சுமையை விட்டு அவர் விடுபட்டவராக இருக்க வேண்டும். கடன் பட்டவர் ஜகாத்தை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றவராக இருக்கிறார் (பார்க்க அல் குர்ஆன் 9:60) ஜகாத்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பவர் மீது ஜகாத்தை கடமையாக்க முடியாது.
ஒருவரிடம் இருக்கும் சொத்தைவிட அவர் பட்டுள்ள கடன் அதிகமாக இருக்கிறது என்றால் கடனை அடைக்கத்தான் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர கடனை கண்டுக் கொள்ளாமல் சொத்துக்கு ஜகாத் வழங்குமாறு இஸ்லாம் சொல்லவில்லை.
நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ள குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழியிலிருந்து 'சொந்த தேவைக்கு போக மீதமுள்ளதை' தான் இறை வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கிறது. கடன் என்பது ஒருவனின் சொந்த தேவைக்கு உட்பட்டது மட்டுமின்றி பிறரது உரிமையையும் உள்ளடக்கியதாகும். இந்நிலையில் சொந்த தேவையையும் - பிறரது உரிமையையும் கண்டுக் கொள்ளாமல் இறைவழியில் செலவு செய்யும் உரிமையை இஸ்லாம் எவருக்கும் வழங்கவில்லை.
ஒருவரிடம் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் அல்லது அதற்கு ஈடான சொத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் பட்டுள்ள கடனோ இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்றால் இருக்கும் பணத்தையோ - சொத்தையோ கொண்டு அவர் தான் பெற்ற கடனைத்தான் அடைக்க முன் வரவேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இது போன்ற கடனாளிகளிடமிருந்து ஜகாத்தை வசூலிக்காது. அவரது சொத்தைப் பெற்று கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியைத்தான் இஸ்லாமிய அட்சியாளர்கள் செய்வார்கள்.
ஐந்து லட்சம் மதிப்புள்ள செல்வத்தை வைத்திருக்கும் ஒருவர் இரண்டு லட்சம் கடனாளியாக இருக்கிறார் என்றால் கடனுக்குரிய இரண்டு லட்சம் போக மீதமுள்ள மூன்று லட்சத்திற்கு கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்தால் போதும். இங்கு நாம் ஒரு முக்கிய சிந்தனையை நினைவில் நிறுத்த வேண்டும். கடன் தொகை போக மீதமுள்ளதற்கு ஜகாத் கொடுத்தால் போதும் என்று இஸ்லாம் சொல்வதற்குக் காரணம் கடன் என்பதில் பிறரது உரிமை அடங்கியுள்ளது என்பதால்தான். இதிலிருந்து கடன்கள் விரைவில் அடைக்கப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய லட்சியம் தெளிவாகின்றது.
கடனாளியாக இருக்கும் ஒருவர் அதை அடைக்கும் அளவிற்கு செல்வமும் - சூழ்நிலையும் இருந்தும் கடனை அடைக்காமல் தாமதப்படுத்தினால் அவர் குற்றவாளியாகி விடுவார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லாத நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்கும் விஷயத்தில் - கடனை அடைக்கும் விஷயத்தில் மிகவும் பொருப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
எனவே கடனுள்ளவர் தன்னிரைவு அடைந்தவராக கருதப்பட மாட்டார் என்பதால் அவர்மீது ஜகாத் கடமையாகாது. கடன்பட்ட தொகைக்கும் ஜகாத் வழங்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவர் இரண்டு லட்சம் கடன் பெறுகிறார். இப்போது இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள உச்ச வரம்பை கடந்த அளவு அவரிடம் பணம் உள்ளது. இந்நிலையில் அதன் மீது ஜகாத் கடமையா என்றால் இல்லை என்ற முடிவே சரியாகத் தெரிகிறது.
ஒருவர் கடன் பெறுவதற்கு காரணம் அவரது சொந்த தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்குத் தான். உதாரணமாக வீடு கட்டுவதற்காக ஒருவர் பல லட்சங்கள் கடன் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது அவரது சொந்த தேவைக்குரியதாகி விடுகிறது. சொந்தத் தேவை என்பது அவரை பொறுத்தவரை உச்ச வரம்பை கடக்காததாகும். அதாவது 'தேவைக்கு போக மீதமுள்ளதை' என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். கடன் பட்டவர் சொந்த தேவைக்காகத்தான் கடன் படுகிறார் என்பதால் அதன் மீது ஜகாத் கடமையாகாது என்பதே சரியாகும். எல்லா கடனுக்கும் இந்த அளவுகோல் பொருந்துமா என்பதை விளக்குவோம்.
Comments
Post a Comment